Tuesday, December 15, 2009

கவிதை:கூண்டுக்கிளி

கூண்டிலடைத்த கிளி ஒன்றை
கொண்டு வந்து மாட்டினார்கள்
என் வீட்டு முற்றத்தில்.....

வயதின் வலிகளோடும்
புறக்கணிப்பின் இரணங்களோடும்
புரண்டு கொண்ண்டிருந்த எனக்கு
கிளியின் வருகை
களிப்பூட்டுவதாய்த் தானிருந்தது....

எனது இறுமலும் கிளியின் மழலையும்
இசையென இயைந்து போனதும்
சினேகமானோம் சீக்கிரமே!
ஆயினும்.......
எப்போதும் கீச் கீச்சென்றபடி
எதையோ பறிகொடுத்த பாவணையில்
சீக்கிரமே அலையலாயிற்று கிளி!

சின்ன அரவம் கேட்டாலும்
சிலிர்த்து நடுங்கியது;
எலி தேடி அலையும் பூனையின்
புள்ளிக் கண்களின் பசிவெறியோ
கிலி கொள்ளச் செய்தது கிளியை.....

சிறுவர்களின் உயிருள்ள பொம்மையாய்
சின்னஞ் சிறு கிளி!
உண்ணப் பழங்கள்; உறங்கக் கூண்டு
எல்லாம் கிடைக்கிறது; இருந்தும்
விரிந்த வானத்தில் சிறகசைத்துப்
பறந்த சந்தோஷம்
கூண்டுக்குள் கிடைக்குமா கிளிக்கு?
கிராமத்தின் வீதிகளில்
சுதந்திரமாய் சுற்றி அலைந்த
பால்யம் நினைவிலாடிய தெனக்கு!

பறந்து பார்க்கத்தானே கிளி அழகு!
கூண்டுக்குள் அடைத்து இரசிப்பது
குரூரமாயிருந்தது எனக்கு;

பள்ளிக்கும் பணிக்குமாய்
பலரும் கிளம்பிப் போனபின்
கிளியும் நானும் தனித்திருந்த வேளையில்
கூண்டைத் திறந்து வைத்து
பறந்து போக அனுமதித்தேன்;
வெளியே போகாமல் கிளி
வேடிக்கை பார்த்தது என்னை!

ஒருவேளை பயப்படுகிறதோ என்றெண்ணி
ஒளிந்து பார்த்தேன் கொஞ்ச நேரம்!
சலனமில்லை கிளியிடம்;
சாவகாசமாய் உலவியது உள்ளேயே!
வழிமறந்து போயிருக்கலாமென்று
கூண்டுக்குள் கை நுழைத்து கிளி பிடித்து
வெட்டவெளியில் வீசினேன் பறந்து போவென்று.....
தத்தி தத்தி நடந்து
தானே கூண்டிற்குள் நுழைந்து
ஓரத்திற்குப் போய் ஒடுங்கிக் கொண்டது;
வெளியேற்றி விடுவேனென்கிற பயத்தில்
வெடவெடவென நடுங்கி பம்மிக் கொண்டது;

பழகிய சிறை வாசம் பாதுகாப்பாக
பறத்தல் மறந்த கிளிக்கு
விரிந்த வானம் வெறுமையாயிற்றோ!
ஐயகோ....
மனித அவலம் கிளிக்குமா......?

No comments:

Post a Comment