Tuesday, August 27, 2013

குங்குமம் வார இதழில் பிரசுரமான கவிதை


தூங்காத ண்ணொன்று......

இறங்க வேண்டிய இடம் கடந்து

வெகுதூரம் வந்தாயிற்று;

தோளில் வழிந்து தூங்குபவனை

உதறிவிட்டு

எப்படி எழுந்து போவது?

 

யுகங்களின் தூக்கத்தை

ஒரே நாளில் தூங்குகிறானா?

தூங்கியே துக்கங்களைக்

கடந்து விடுகிற முயற்சியா?

அமைதியாய் ஆழ்ந்து

உறங்குகிற சூழல்

அமையவே இல்லையா

இதுவரை...

 

வீடென்பது இவனுக்கு

போர்க்களமோ; அல்லது

வீடற்ற பிளாட்பார வாசியா?

இரவுகளில் தூங்க முடியாமல்

உறவுச் சிக்கல்களில்

உழல்பவனா; அல்லது

பிரிவெனும் பெருந்துயரில்

பிதற்றி அலைபவனா?

 

பேருந்தில் ஏறியதும்

பேச்சுக் கொடுத்தான்;

எங்கே இறங்க வேண்டுமென்று.....

என் பதில் அவனது

காதில் விழுந்த்தோ இல்லையோ

அதற்குள் தூங்கத் தொடங்கியவன்

தொடர்கிறான் இன்னும்......

 

என்ன பிரச்னை இவனுக்கு

குலுங்கி ஓடும் பேருந்திலும்

அலுங்காமல் எப்படி இவனால்

உறங்க முடிகிறது....!

 

கடைசி நிறுத்தம் வந்து பேருந்தே

காலியானதும் தான் கண் விழித்தான்;

நான் இறங்கியிருக்க வேண்டிய

நிறுத்த்திற்கு அடுத்த்தில் தான்

அவன் இறங்க வேண்டுமாம்;

எப்படியும் அவன் தூக்கம் கலைத்து

நான் இறங்கிப் போவேன் என்றும்

அதன் பின்

அவனும் இறங்கிக் கொள்ளலாமென்று

நம்பிக்கையில் தூங்கினானாம்......!

இருந்தாலும் பரவாயில்லை;

என் தூக்கத்தை கௌரவித்த

முதல் மனிதனுக்கு நன்றி

என்று சொல்லி

இறங்கிப் போனான் நெடுவழியில்.....

 

                                      நன்றி: குங்குமம் 03.06.2013

Thursday, August 15, 2013

உயிரெழுத்து மாத இதழில் பிரசுரமான சற்றே பெரிய சிறுகதை: தீராத சாபங்கள்


                        முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ”

                        சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த வேலையாட்கள், சிலர் அங்கங்கே உட்கார்ந்து பழமை பேசிக் கொண்டும், பெரும்பாலோர் மணலிலும் தரையிலுமாய்ப் படுத்துக் கண்மூடியும் கிடந்தனர்.

            அக்கௌண்டென்ட் மணிசேகர் ஓரமாய் நின்று சிகரெட்டை இலயித்து இரசித்து ஊதிக் கொண்டிருந்தான். என்ஜினியர் முத்துப்பாண்டி, மதிய உணவிற்குக் கடித்துக் கொள்ள ஏதாவது வாங்கி வரும்படி வாட்ச்மேனிடம் சொல்லிக்  கொண்டிருந்தான்.

                         “வணக்கம் சாமியோவ்…..” என்றபடி பவ்யமாய்க் கைகுவித்து வேலைத் தளத்திற்குள் நுழைந்தவனை சிறுவன் என்று தான் மதிப்பிட வேண்டும்; அவனுக்கு 15 அல்லது அதிகபட்சம்16 வயதுக்குள் தானிருக்கும். ஆனால் அவனுடைய வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாமல், பெரிய மனிதத் தோரணையில் இடுப்பில் பளீரென்று வெண்மை துலங்கும் வேஷ்டியும், மேலுக்கு சற்றே பழுப்பேறிய முழுக்கைச் சட்டையும், ஒரு தோளில் இஸ்திரி மடிப்புக் கலையாத துண்டும், மறுதோளில் கொஞ்சம் அழுக்கான ஜோல்னாப் பையும் அணிந்திருந்தான். நெற்றியில் சந்தனக் கீற்றும் நடுவில் குங்குமமும், கண்களில் ஒளியும், முகம் முழுவதும் ஒரு பிரகாச ஜொலிப்புமாயும் இருந்தான்.              

            “சாமிக்கு சீக்கிரமே நல்ல காலம் பொறக்கப் போகுது……” என்றபடி முத்துப்பாண்டியை நெருங்கினான் கண்களால் அவனைத் தீர்க்கமாய் அளந்தபடி. முத்துப்பாண்டிக்கு அவன் விரிக்கிற வலையின் கண்ணிகள் புரிபடவே, “இதப் பாருப்பா, இது வேலை நடக்குற எடம்; உன் வித்தைகளை எல்லாம் வெளியில, வீடுகள்ல போய் காட்டு…..” என்றான்.

             “சாமி நீ எனக்கு காசு பணம் எதுவும் தரவேணாம்; காது குடுத்துக் கேளு; அது போதும். நடந்தது, நடக்கப் போறது எல்லாஞ் சொல்றேன். சரியா இருந்தா, உன் மனசுக்குச் சம்மதம்னா மட்டும் ஏதாவது குடு; சந்தோஷமா வாங்கிட்டுப் போறேன். நான் இப்ப மந்திராலத்திற்குப் போயி இராக வேந்திர சாமிகளத் தரிசனம் பண்ணீட்டு வந்துருக்கேன். சொல்ற வாக்கு அத்தணையும் சுத்தமாப் பலிக்கும்…”

            முத்துப்பாண்டி அவனை நம்பிக்கை இல்லாமல் பார்க்கவும் “உனக்கு நம்பிக்கை இல்லைன்னா இப்ப உன் மனசுக்குள்ள ஒரு பூவை நெனச்சுக்கோ, அதை நான் சரியா கண்டு பிடிக்கிறேன்….” என்றபடி மேஜையின் மேலிருந்த ஒரு காகிதத்தின் சிறு பகுதியைக் கிழித்துக் கையில் வைத்துக் கொண்டான்.

             “இதப் பாருப்பா, எனக்கு நெறைய வேலை கெடக்கு….அதோட முதலாளியும் சைட்டுக்கு வர்ற நேரம் இது…. அதனால இப்ப நீ கெளம்புற வழியப்பாரு;” என்று சிடுசிடுத்து அவனை வெளியில் விரட்டுவதிலேயே குறியாய் இருந்தான்.

            “சாமிக்கு கோபம் தான் சத்ரு; ஆனாலும் பரவாயில்ல. போறதுக்கு முன்னால ஒரே ஒரு குறிப்புச் சொல்றேன். சாமி மனசுல தீராத மனக்குறை ஒண்ணு இருக்கு; சரியா?” என்றான் அவன்.

            முத்துப்பாண்டிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது. சிரித்தபடி சொன்னான். “செத்துப்போனவன உயிர்ப்பிக்குறதுக்கு சாவே நிகழ்ந்திராத வீட்லருந்து கடுகு வாங்கிட்டு வரச்சொன்ன புத்தரோட  மனோதத்துவந்தான்  நீ சொல்றதும்; யாரைப் பார்த்து சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும். ஏன்னா ஏதாவது மனக்குறை இல்லாதவங்க இந்த உலகத்துலயே யாரும் இருக்க மாட்டாங்க…..”

            “அது வாஸ்தவம் தான் சாமி. உன்னோட மனக்குறை என்னன்னு சொல்றேன்; அப்பவாவது நம்புறியா பார்க்கலாம். உனக்கு கொஞ்சி மகிழ ஒரு குழந்தை யில்ல; கொள்ளி வைக்க ஒரு வாரிசு இல்ல; சரிதானா சாமி…” என்றான். முத்துப்பாண்டிக்கு சிலீரென்றது.

                        முத்துப்பாண்டிக்கும் பாக்கியலட்சுமிக்கும் கல்யாணமாகி 10 வருஷங்களுக்கும் மேலாகி விட்டது.   சந்தோஷமாக இருப்பதாகத் தான் நம்புகிறார்கள். ஆனால்  வாழ்க்கையைக் கொண்டாடவும் கொஞ்சி மகிழவும் ஒரு குழந்தை இல்லையே என்கிற சிறு குறை இருவரின் மனதுக்குள்ளும் தீராமல் நெருடிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம் தானே!

                         முத்துப்பாண்டி இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்தே மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தன. அவன் தனக்கு குழந்தை இல்லை என்கிற விபரத்தை வேலை பார்க்கிற இடத்தில் யாரிடமும் இதுவரை சொல்லியிருக்க வில்லை. அப்படி யிருக்கும் போது இந்தச் சிறுவன் எப்படி அத்தனை துல்லியமாய் கணித்துச் சொன்னான்?

                        ஒருவேளை அவன் குத்து மதிப்பாய் – இன்றைய தினங்களில் தான் குழந்தை இன்மை என்பது நிறைய தம்பதிகளிடம் உள்ள பிரச்னை தானே! – சொல்லியது தன் விஷயத்தில் சரியாகி விட்டதோ? முத்துப் பாண்டியின் முகக் குறிப்பிலிருந்து தான் சொன்னது சரிதான் என்பதைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் மேலும் தொடர்ந்தான்.

                        ”ஆனால் சாமி சஞ்சலப் பட வேண்டாம்; இன்னும் எண்ணிப் பத்தே நாள்ல ஒரு நல்ல சேதி கண்டிப்பா வரும்; இது நான் வணங்குற இராகவேந்தர் மேல ஆணை…. இராகவேந்திரர் சாமிக்கு ஒரே ஒரு பூஜை மட்டும் பண்ணிட்டா உன்னைப் பிடிச்ச பீடை எல்லாம் உடனே விலகிடும்…..” என்று நிறுத்தி முத்துப் பாண்டியின் முகம் பார்த்தான் அவன்.

            ”சரி நீ இவ்வளவு சொன்னதே போதுமப்பா….பூஜை பண்ணனும்னு தோணுறப்ப சொல்லி அனுப்பறேன்; இப்ப நீ கிளம்பு….” என்று சொல்லியபடி ஒரு 10ரூ.தாளொன்றை எடுத்து நீட்டினான். பவ்யமாய் பணத்தை வாங்கிக் கொண்டவன், கொஞ்சதூரத்தில்  நின்று இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிசேகரிடம் நகர்ந்து போய் “சாமிக்கு  யோக திசை திரும்பியாச்சு; இன்னியலருந்து ஏழே நாள்ல தென் திசையிலருந்து நல்ல சேதி ஒண்ணு வரப் போகுது…. அதுல சாமிகளோட மனசெல்லாம் குளுந்துரும்…..” என்றான். முத்துப்பாண்டி அவனிடத்தி லிருந்தபடியே அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

            மணிசேகர் கையிலிருந்த சிகரெட்டை அவசரமாய்க் காலில் போட்டு நசுக்கியபடி ஆச்சர்யமாய் அந்தச் சிறுவனைப் பார்க், ”இப்ப ஏதாவது ஒரு பூ பேர நெனைச்சுக்க சாமி; நான் கரெக்டா கண்டுபிடிக்கிறேன்….” என்று சொல்வதும், அப்புறம் முத்துப்பாண்டியின் இடத்திலிருந்து கிழித்துக் கொண்டு போன துண்டு காகிதத்தில் ஏதோ எழுதி அவனிடம் காண்பிப்பதும் தெரிந்தது. அதைப் பார்த்ததும் மணிசேகர் மலர்ந்து “அய்யோ… அசத்திட்டீயே, எப்படிய்யா  இது….”என்று கிட்டத் தட்ட கூவினான்.

            முத்துப்பாண்டி மனசுக்குள் சிரித்தபடி வாட்ச்மேன் வாங்கி வந்திருந்த பருப்பு வடையைக் கடித்துக் கொண்டு மதிய உணவைச் சாப்பிடத் தொடங்கினான். அவனின் அய்யாவிற்கு இந்த மாதிரியான ஜோதிடம், குறிகேட்பது போன்றவற்றி ளெல்லாம் தீவிர நம்பிக்கை. உள்ளூர் ஜோதிடரைக் கலந்து பேசாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். அவரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் ஏற்கெனவே எழுதித் தீர்மானிக்கப் பட்டு விட்டது. அந்த பிரம்மனின் எழுத்தை வாசித்து மொழி பெயர்ப்பவர்கள் தான் ஜோதிடர்களும், குறிகாரர்களும். அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களின் வழி காட்டுதல்களின் படியும் ஆலோசணைகளின் படியும் நகர்த்தினால் அது அதிக சிக்கலில்லாமல் போகும் என்று தீர்மானமாய்ச் சொல்வார். அவரின் அதீத நம்பிக்கையே  முத்துப்பாண்டிக்கு அவற்றின் மீது வெறுப்பாய்ப் படிய காரணமானது.

            முத்துப்பாண்டி ஒரு ஆடிமாதம் அதுவும் சனிக்கிழமையில் வந்து அவருக்கு மகனாகப் பிறந்து விட்டதில் அவருக்கு ஏக வருத்தம். நீண்ட நாட்களுக்கப்புறம் பிறந்ததாலும் அதுவும் ஒரே பிள்ளையாய்ப் போய் விட்டதாலும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டார். அப்படியும் அம்மாவை எப்போது பார்த்தாலும் ஆகாத வேளையில் பிள்ளையைப் பெற்று விட்டதற்காகக் கரித்துக் கொட்டுவார். அவனையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “ஆடிச்சனி; ஆடிச்சனி… ஆட்டி வைக்கிறியேடா…..” என்று அலுத்துக் கொள்வார்.

            முத்துப்பாண்டிக்கு பள்ளிக்கூடம் போகிற வயசு வந்ததும் அவனின் ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு சடாட்சரத்திடம் தான் ஓடினார் அய்யா. சடாட்சரம் அவர்களின் குடும்ப ஜோதிடர். அவரும் அவனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஏதேதோ கணக்குகளை எல்லாம் போட்டுப் பார்த்து விட்டு “பையனுக்கு கல்விக்கான யோகம் சுத்தமா இல்லையே சாமி….” என்று கை விரித்து விட்டார். அதனால் முத்துப்பாண்டியைப் படிக்க வைப்பது வேண் வேலை என்று முடிவு செய்த அய்யா அவனை பள்ளிக்கு அனுப்பவே சம்மதிக்க வில்லை.

            உள்ளூர் ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து நச்சரிக்கவும், முத்துப்பாண்டியின் அம்மா தான் “நாமதான் படிக்காத கூ முட்டைகளாப் போயிட்டோம்; பையனாவது ஒரு கையெழுத்துப் போடவும், தெக்க வடக்க போனா, பஸ் பார்த்து ஏறுறதுக்குமாவது நாலெழுத்துப் படிக்கட்டு….” மென்று அய்யாவை சமாதானப் படுத்தி அவனை அவர்களுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

            ஆனால் ஜோதிடரின் கணிப்பை மீறி முத்துப்பாண்டி மிக நன்றாகப் படித்தான். வாத்தியார் களெல்லாம் வாயாரப் புகழ்ந்ததால் வேறு வழியில்லாமல் அவனை பாலிடெக்னிக் வரை படிக்க வைத்தார். பாலிடெக்னிக்கிலும் எந்த குரூப்பில் பையனைச் சேர்ப்பது என்று சடாட்சரத்திடம் கலந்து பேசித்தான் அவர் முடி வெடுத்தார். முத்துப்பாண்டிக்கு ஆங்காரம் பொங்கினாலும் அய்யாவை மீறி எதுவும் செய்ய முடியாததால் அமைதி காத்தான். சடாட்சரம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பாவணையில் பீடிகையுடன் பேசினார்.

            “பையனோட ஜாதக அம்சப்படி அவர் இவ்வளவு தூரம் படிச்சது தெய்வச் செயல்ன்னு தான் சொல்லனும்; ஏதோ ஒரு இழை சாதகமா இருந்து இழுத்துட்டு வந்துருக்கு; இனிமேத்தான் நாம ரொம்பவும் கவனமா இருக்கணும்…. குடுக்குறது மாதிரிக் குடுத்து ஒரே அடியா கவுத்தாலும் கவுத்துடும்….. அதனால கரண்டு, என்ஞின் சம்பந்தப்படாத படிப்பாப் படிக்க வைக்கிறது உத்தமமா இருக்கும்….” என்று அவர் சொல்லி விடவே, எலக்ட்ரானிக்ஸும் கம்யூட்டரும் மெக்கானிக்கலும் கோலோச்சிய கால கட்டத்தில் அப்போது வழக்கொழிந்து கொண்டிருந்த சிவில் என்ஜினியரிங்கில் கொண்டு போய் அவனை வலுக்கட்டாயமாக சேர்த்துவிட்டு வந்தார்.

            படித்து முடித்த பின்பும் கூட அய்யாவின் ஜோதிடக் கிறுக்கு அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டு தான் இருந்தது. அவன் சரியான வேலை எதுவும் கிடைக்காமல் தினக்கூலி அடிப்படையில் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்டாக அல்லல் பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில, தனியாக கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினெஸ் செய்து கொண்டிருந்த அவனின் சீனியர் ஒருவர் தனக்கு ஒரு பெரிய தொகைக்கு காண்ட்ராக்ட் கிடைத்திருப்பதாகவும் முத்துப்பாண்டி ஒன்று அல்லது இரண்டு லட்ச ரூபாய் புரட்டிக் கொண்டு வந்தால் அவனையும் தன்னுடைய கம்பெனியில் பார்ட்னராக சேர்த்துக் கொண்டு,  சேர்ந்து பிஸினெஸ் பண்ணலாமென்று வற்புறுத்தி அழைத்தார்.

            முத்துப்பாண்டியின் அய்யாவால் கொஞ்சம் முயற்சி செய்திருந்தாலே அந்தப் பணத்தைப் புரட்டித் தந்திருக்க முடியும். அவர் அப்போதும் சோதிடரிம் போய்த் தான் ஆலோசணை கேட்டார். அவரோ குரு, சூரியன், சுக்கிரன் என்று குருட்டுக் கணக்குகள் போட்டு விட்டு, “ஜாதகப்படி பையனுக்கு சொந்தத் தொழிலுக்கெல்லாம் பிராப்தமெ இல்ல; அதுவும் பார்ட்னர்ஷிப்பெல்லாம் படாதபாடு படுத்திரும்… நஷ்டப்பட்டு நாறிப் போயிரும் பொழைப்பு…. அதுக்கு மேல உங்க இஷ்டம்; ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல அரசாங்க உத்தியோகம் கேரண்டி….” என்று உளறினார். முத்துப்பாண்டிக்கும் அவனுடைய அய்யாவிற்கும் அன்றைக்கிலிருந்து பேச்சு வார்த்தை முறிந்தது. சென்னையில் ஒரு சிறு வேலை கிடைத்ததுமே அவரிடமிருந்து தப்பித்தால் போதுமென்று கிராமத்திலிருந்து ஓடி வந்து விட்டான்.

                        சாயங்காலம் மணிசேகர் முத்துப்பாண்டியிடம் வந்து அந்த குறி சொன்ன சிறுவனை வானளாவப் புகழ்ந்து தள்ளினான். “அந்தப் பையன் கிட்ட நிச்சயமா ஏதோ சக்தி இருக்கு ஸார்….. இந்த சின்ன வயசுலயே பெரிய ஞானம்….நடந்தது நடக்கப் போறது எல்லாத்தையும் அப்படியே புட்டுப் புட்டு வைக்கிறான்….”

                        ”முதல்ல என்னை ஒரு பூ பேர மனசுக்குள்ள நெனச்சுக்கச் சொன்னான்; எல்லோரும் பொதுவா மல்லி, முல்லை, கனகாம்பரம்,ரோஜான்னு தான் நினைச்சுக்கு வாங்க…ஆனா நான் மனசுல நெனச்சுக்கிட்டது அவ்வளவு ஈஸியா யாராலயும் யூகிக்க முடியாதது. நேத்து ராத்திரி தான் அந்தப் பூவோட பேர்ல வந்துருந்த பழைய படத்த டீ.வில பார்த்துருந்தேன்…. யோசிச்சு முடிஞ்ச அடுத்த நிமிஷம் ஒரு துண்டு சீட்டுல எழுதிக் காட்டுறான் – தாழம்பூன்னு… எப்படி சார் இது சாத்தியம்…..!

                         உங்களுக்குத் தான் ஏனோ இன்னும் அவன் மேல நம்பிக்கை வரல; ஆனா என் விஷயத்துல அவன் சொன்னது அத்தனையும் நூத்துக்கு நூறு உண்மை ஸார்…. முகத்தப் பார்த்ததும் பளிச்சுன்னு சொல்றான் – எனக்கு பெண்சாபம் இருக்குன்னு; அப்படியே ஆடிப் போயிட்டேன் ஸார்….” என்றான் மணிசேகர்..

                        “அப்படி என்ன உனக்கு பொல்லாத பெண் சாபம்….” என்றான் முத்துப்பாண்டி சுவாரஸ்யமில்லாமல்.

            “நான் காலேஸுல படிச்சு முடிச்சுட்டு கிராமத்துல வேலை இல்லாமச் சுத்திக்கிட்டிருந்த சமயத்துல ஒரு பொண்ணக் காதலிச்சேன் ஸார்; நாங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்க சாத்தியமே இல்லாத வெவ்வேற ஜாதிகளச் சேர்ந்தவங்க; வசதி வாய்ப்புலயும் அவ மலைன்னா நான் வெறும் கடுகு; ஆனாலும் நாங்க தீவிரமாக் காதலிச்சோம். ஆனால் நாங்க காதலிக்கிற விஷயம் ஊருல ஒரு சுடு குஞ்சுக்கும் தெரியாது……

            திடீர்னு ஒருநாள் அவங்க வீட்டுல அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணீட்டாங்க… என்கிட்ட ஓடி வந்து ஓன்னு அழுதாள். என்ன பண்றதுன்னு எனக்கும் ஒண்ணும் புரியல. தீவிர யோசணைக்குப் பின்னால கல்யாணத்துக்கு முதல் நாள் ரெண்டுபேரும் ஊரைவிட்டு ஓடிப் போயிடுறதுன்னு முடிவு பண்ணினோம். அதன்படியே அன்னைக்கு அதிகாலையில அவள் வீட்லருந்து கிளம்பி இரயிலடிக்குப் போயிட்டாள்.

            எனக்குத்தான் கடைசி நிமிஷத்துல அடி மனசுல ஒரு பயம் வந்துடுச்சு; வேலை வெட்டி எதுவுமில்லாம, முன்னப் பின்ன பழக்கமில்லாத ஊருல, அதுவும் ஒரு பொண்ணக் கூட்டிட்டுப் போயி எப்படிப் பொழைக்கிறதுங்கிற நிதர்சனம் உறைச்சது. அதோட நாங்க ஊரை விட்டு ஓடிப்போன விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே அவங்க அப்பாவும் சாதிசனமும் சேர்ந்து எங்க குடும்பத்தயே குளோஸ் பண்ணிடுவாங்கன்கிற உண்மை புரிஞ்சதும், நான் இரயிலடிக்குப் போகாம வீட்லயே இருந்துட்டேன்.

அவளும் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்துட்டு வீட்டுக்குத் திரும்பிப் போயிடுவாள்னு நம்பிக் கிட்டிருந்தேன். ஆனால் பாவி மகள் நான் இரயிலடிக்கு வராதது தெரிஞ்சதும் ஓடுற இரயிலுல விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்; செய்தி கேள்விப்பட்டதும் எனக்கு சிலீர்னு ஆயிடுச்சு. நல்ல வேளையா எங்க காதல் விவகாரம் ஊர்ல யாருக்கும் தெரியாததால எங்க குடும்பம் தப்பிச்சிருச்சு…

                        ஆனாலும் என் மனச்சாட்சி இன்னைக்கும் என்னைக் கொன்னுக்கிட்டுத்தான் இருக்கு; ஒரு அப்பாவிப் பொண்ண காதலிச்சுட்டு, அப்புறம் அத எதிர் கொள்ள தைரியமில்லாம அவள் சாக நான் காரணமா இருந்துட்டேனேன்கிற உறுத்தல் இன்னும் இருக்கு…..இதை அந்த குறிசொல்லி எவ்வளவு சரியாக் கண்டுபுடிச்சுச் சொல்லீட்டான்; இது திறமை இல்லையா?” நீளமாய்ப் பேசி நிறுத்தினான் மணிசேகர்.

            இது மைண்ட் ரீடிங் சமாச்சார மென்று முத்துப்பாண்டிக்குப் புரிந்தது. ஆனால் அவன் மணிசேகரிடம் எதுவும் சொல்ல வில்லை.

            அந்த குறி சொல்லி வேலைத் தளத்திற்கு வந்து விட்டுப் போன ஏழாவது நாள் மணிசேகர் வேலைத் தளத்திலிருந்த போது அந்த செய்தி வந்தது டெலிபோனில். செய்தியைக் கேட்டதும் நெஞ்சைப் பிடித்தபடி உட்கார்ந்தான் மணிசேகர். அவன் முகம் இருளடைந்து போய்விட்டது. என்ன நடந்தது என்று அவனால் சொல்லக் கூட முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பின்னால் அவன் தலையில் இடி மாதிரி இறங்கிய செய்தியை அவன் அழுது கொண்டே சொல்லவும் முத்துப் பாண்டியும் சைட்டிலிருந்தவர்களும் வாயடைத்துப் போய் விட்டார்கள்.

                        மணிசேகரின் மனைவி அவர்களுடைய ஐந்து வயது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு, வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருக்கும் போது மோசமான விபத்தொன்றில் சிக்கி இருவரும் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தான் செய்தியின் சாரம். முத்துப்பாண்டி பதறிப்போய் மணி சேகரையும் இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான். இவர்கள் போவதற்கு முன்பே இருவரும் இறந்து போயிருந்தார்கள். என்ன ஒரு கோரமான விதி என்றிருந்தது முத்துப் பாண்டிக்கு. அவனுக்கு துக்கத்தில் நெஞ்செல்லாம் வலித்தது.

                        எல்லாம் முடிந்து மிகவும் சோர்ந்து போய் இரவு நெடுநேரம் கழித்துத் தான் முத்துப்பாண்டி வீட்டிற்குப் போனான்.  அப்போதும் பாக்கியலட்சுமி தூங்காமல் விழித்துக் கிடந்தாள். வேலைத் தளத்தில் நடந்ததை எல்லாம் அவளிடம் அவன் சொல்லி முடிக்கவும், அவனையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு “அப்ப அந்த குறிசொல்லி சொன்னது மாதிரியே உங்க நண்பரோட பெண்சாபம், அவரோட குடும்ப வாழ்க்கையையே நிர்மூலமாக்கிருச்சு இல்லையா?” என்றாள்.

                        ”அவன் ஒரு பிராடு; அவன் சொன்னதப் போயி பெருசு படுத்திக்கிட்டு…. அதோட அவன் நல்ல செய்தி இல்ல வருமின்னான்…. இந்த மாதிரி நடக்குமுன்னு எதுவும் சொல்லவே இல்ல; கோடிகூட காட்டலயே!”

                        ”ஒருவேளை அவருக்கிருந்த பெண்சாபம் தான் அவருக்கு வர வேண்டிய நல்ல செய்திய வழிமறைச்சு கெட்ட செய்தியா மாத்திருச்சோ என்னவோ….” என்றாள். அப்புறம் தான் முத்துப்பாண்டியை கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு கேட்டாள் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ”

                        ”இதென்ன அசட்டுத்தனம்! அந்தக் குறிகாரன் தான் ஏதோ பணம் புடுங்குறதுக்காக பெண்சாபம் அது இதுன்னு வாய்க்கு வந்த வார்த்தையச் சொன்னான்னா, நீயும் அதையே விடாமப் புடிச்சு வேதாளம் மாதிரி தொங்கிக்கிட்டு…. அதோட எனக்கு பெண்சாபம் எதுவும் இருக்குன்னு அந்தக் குறிகாரன் சொல்லலப்பா…” என்றான் முத்துப்பாண்டி.

                        “நம்மளோட ஆணாதிக்க சமூகத்துல எல்லா ஆம்பிளைகளுக்கும் பெண்களோட சாபம் இருந்தே தீரும்ப்பா; நம்ம வளர்ப்பு முறையும் வாழ்க்கையும் அப்படி… என்ன பெரும்பாலான பெண்கள், ஆண்கள பெருந்தன்மையா  மன்னிச்சுடுவாங்க; அவ்வளவு தான்…..நீயும் யோசிச்சுப் பாரு” என்றாள் விடாப்பிடியாக..                                “என் வாழ்க்கையில என் அம்மாவுக்கப்புறம் குறுக்கிட்ட ஒரே பெண் நீதான்; எங்க அம்மாவ அவங்க கடேசி காலத்துல என்னால சரியா கவனிச்சுக்க முடியாமப் போயிருச்சு; ஆனாலும் அவங்க எனக்கு சாபம் எதுவும் குடுத்துருக்க வாய்ப்பே இல்ல…. இனிமே நீ ஏதாவது சாபம் குடுத்தாத் தான்…..” என்றான் சிரித்தபடி.

                        ”சாபமின்னா, நேரடியா மண்ணை வாரித் தூத்தி, நீ அழிஞ்சு போயிடுவ; உன் வம்சம் வெளங்காமப் போயிடும்ன்ங்குற மாதிரி சபிக்கிறதுன்னு அர்த்தமில்லப்பா; உன்னையும் அறியாம நீ செஞ்ச அல்லது செய்யாமப் போன காரியங்களால யாராவது மன வேதணை அடைஞ்சு…. அதுவே நமக்கு சாபமா மாறி இருக்கலாமில்லையா?

நாமளும் ஒரு குழந்தை பெத்துக்கிறதுக்காக எவ்வளவு பாடு படுறோம்; மருத்துவ ரீதியா நமக்கு எந்த பிரச்னையும் இல்லாம இருந்தும் ஏன் இன்னும் நமக்கு குழந்தை பொறக்கல…. கண்ணுக்குத் தெரியாத ஏதோ காரணம் – ஏன் அந்த குறிகாரன் சொன்ன மாதிரி பெண் சாபம் மாதிரி ஏதாச்சும் இருக்கலாமில்லையா?” என்றாள்.  

                         முத்துப்பாண்டியின் நினைவடுக்குகளில் மெதுவாய் பச்சையம்மாள் மேலெழும்பி வந்தாள். பத்து வருஷங்களுக்கும் மேலாக அடி மனதின் ஆழத்தில் உறங்கியபடி அவனை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை இந்த நிமிஷம் சொல்லி விடலாமா என்று யோசித்தான் முத்துப்பாண்டி. எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பித்து பச்சையம்மாளின் கதையை சொல்லத் தொடங்குவது? எதையெல்லாம் சொல்வது? எதையெல்லாம் மனசுக்குள்ளேயே போட்டு அமுக்குவது? முதலில், சொல்லித்தான் ஆக வேண்டுமா? மாஜிக் காதலிகள் பற்றி எல்லாம் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளலாமா? அதன் மூலம் புதிய பூகம்பங்கள் புறப்பட்டு  சீராகப் போய்க் கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏதும் விளைந்து விடாதா? த்தனை வருஷங்களுக்கப்புறம் அவளைப் பற்றி வெளியே சொல்லி இப்போது ஆகப் போவதென்ன? முத்துப்பாண்டிக்கு பெரும் குழப்பமாக இருந்தது. அவனின் மனதுக்குள் ஒரு போராட்டமே நிகழ்ந்தது.

                        அவன் சென்னையில் ஒரு காண்ட்ராக்டரிடம் வேலையிலிருந்த போது அவர்களின் கம்பெனிக்கு திருவண்ணாமலையில் மின்சார வாரியத்தின் கட்டிடம் கட்டும் பணி ஒன்று கிடைத்தது. அதற்காக அவன் திருவண்ணாமலையில் போய்த் தங்கி அந்தக் கட்டுமானப் பணியிலிருந்த போதுதான் பச்சையம்மாளைச் சந்தித்தான். பச்சையம்மாள் ஒன்றும் பெரிய அழகி இல்லை என்றாலும் பார்க்கத் தூண்டுகிற பளபளப்பும் முக வசீகரமும் பொருந்தியவள். அட்டைக் கருப்பு என்று சொல்ல முடியாதபடி இலேசான புது நிறப்பெண். இவனிடம் சித்தாளாக வேலை செய்து கொண்டிருந்தாள். ஒருநாள் வேலைத் தளத்தில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்து விட்டு இவனின் அலுவலகத்திற்குள் வந்து பொட்டலத்தை நீட்டி “இனிப்பு எடுத்துக்கங்க ஸார்….” என்றாள்.  

                        ஒரே ஒரு சாக்லெட்டை எடுத்தபடி “என்னம்மா விஷேசம்….” என்றான் அசிரத்தையாக.

                        “நான் +2 பாஸ் பண்ணிருக்கிறேன் ஸார். அதான்….” என்றாள் முகமெல்லாம் மலர. முத்துப்பாண்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளைப் பார்த்தால் +2 படிக்கிற வயசுக்காரியாகத் தெரியவில்லை.

                         “ஸ்கூலுக்குப் போய் படிக்கல ஸார்; பிரைவேட்டா எழுதிப் பாஸ் பண்ணேன்” என்று சிரித்தாள். அவளின் சிரிப்பில் ஒரு வைராக்கியமும் வசீகரமும் தெரிந்தது.

                        அப்புறம் வந்த நாட்களில் பச்சையம்மாளின் வாழ்க்கையைப் பற்றி பலரிடமும் கொஞ்சம் கொஞ்சமாய் விசாரித்து அவன் அறிந்து கொண்ட தகவல்கள் மனதில் இரத்தம் கசிவதாய் இருந்தது. பச்சையம்மாள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது அவளுடைய அப்பா இறந்து போனார். அன்றோடு அவளின் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அம்மாவின் தொழில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது; அவளுடைய தம்பியுடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்தாள். வேறொருவனுடன் சேர்ந்து வெளிப்படையாய்க் குடித்தனமும் நடத்தினாள். அந்தப் பெண்களின் வாழ்க்கையில் அதெல்லாம் மிகச் சாதாரணம். 

            பச்சையம்மாள் அந்தச் சூழலுடன் ஒட்டாமல் வளர்ந்தாள். அவள் நிறையப் படிக்க வேண்டு மென்று ஆசைப் பட்டாள். கட்டுமானப் பணிகளிலும், காடு கழனிகளிலும், செங்கல் சூளைகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்ப் படிக்கத் தொடங்கினாள். பிரைவேட்டாக பரீட்சை எழுதி எஸ்.எஸ்.எல்.சி முடித்து, இப்போது +2வும் பாஸ் பண்ணி விட்டாள்.

                        முத்துப்பாண்டிக்கு ஒரு கீழ்மட்டப் பெண்ணிற்கு இருக்கும் படிப்பாசை ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கு ஏதாவது உதவ வேண்டுமென்று, அவளை அழைத்துப் பேசினான். அவளின் விருப்பம் தெரிந்து தொலைதூரக் கல்வியில் பி.காம். படிக்கப் பணம் கட்டி, தேவையான புத்தகங்களும் வாங்கிக் கொடுத்தான். யாருக்கு வேலை இல்லை என்றாலும் அவளுக்கு மட்டும் தினசரி வேலை கொடுக்கும் படி மேஸ்திரிக்கு உத்தரவிட்டான். அதுவும் கடினமில்லாத எளிதான வேலைகளில் மட்டும்  – அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்குவது, மணல் சலிப்பது, தண்ணீர் ஊற்றுவது மாதிரியான வேலைகளில் – அவளை ஈடுபடுத்தச் சொன்னான்.

                        ஒருமுறை முப்பதடி உயரத்திலிருந்த நீளமான பீமிற்கு கயிற்றில் நடப்பவளின் லாவகத்தோடு அவள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று வீசிய காற்றில் சேலையும் பாவாடையும் பந்துபோல் விரிந்து மேலே தூக்கத் தொடங்க, பெண்மைக்கே உரிய பதட்ட உணர்வில் உடைகளை ஒழுங்கு படுத்த முனைந்ததில் கைப்பிடியை நழுவ விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள். நல்ல வேளையாக அங்கு குவிக்கப் பட்டிருந்த மணல் மேட்டின் மீது விழுந்ததால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பித்தாள். ஆனாலும் கால் எழும்பு முறிந்து விட்டது.

                        பச்சையம்மாளை உடனே ஒரு பெரிய பிரைவேட் மருத்துவமனையில் சேர்த்து, அவள் பரிபூரணமாய் குணமாகும் வரை அங்கேயே தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தான். மருத்துவச் செலவுகளைக் கம்பெனி ஏற்க முன்வராத போது இவனுடைய சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்தான். அதுபோக அவளின் வீட்டுச் செலவுகளுக்கும் அவ்வப்போது பணம் தந்து உதவினான். வேலைத்தளத்தில் இவை எல்லாம் வேறுமாதிரி அர்த்தப் படுத்தப்பட்டு அசிங்கமான கதைகள் உலவின. இருவருமே அதைப் பற்றி சட்டை செய்யவில்லை.

                        கட்டுமானப் பணி முழுவதும் முடிந்து திருவண்ணாமலையிலிருந்து முத்துப்பாண்டி கிளம்ப இருந்த தினத்தில், அவனைப் பார்த்துப் போவதற்காக பச்சையம்மாள் வந்திருந்தாள். நிரந்தரமாய்ப் பிரியப் போகிற மன நெகிழ்ச்சியும், இதுவரை மனசுக்குள் பொத்தி வைத்திருந்த நேசமும், நன்றி பெருக்கும், தனிமையான சூழலும் கலந்த பலவீனமான ஒரு தருணத்தில் இருவரும் உடலோடு உடல் கலந்து விட்டார்கள்.

                       எந்த நிர்ப்பந்தமும்  நெருக்குதலுமில்லாமல் வெகு இயல்பாகத் தான் அவர்களுக்குள் அந்த கலவி நிகழ்ந்தது. ஆனாலும் தான் அவசரப்பட்டு விட்டதாக   முத்துப்பாண்டிக்கு  குற்ற உணர்ச்சி பீறிட்டது.

                        “மன்னிச்சிரு பச்சை. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்; கடைசியில சைட்டுல எல்லோரும் நம்மைப் பற்றிக் கட்டி விட்ட கதைகள உண்மையாவே ஆக்கிட்டனே….!” தொடர்ந்து வார்த்தை வராமல் தவித்தான் அவன்.

                        ”அடப் போங்க ஸார்…. நீங்க வேற, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக் கிட்டு… என்னை மட்டும் மறந்துட மாட்டீங்கள்ல ஸார்…..” என்று மீண்டும் நெருங்கி வந்து உதடுகளைக் கவ்வி அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு விடுவிடென்று கிளம்பிப் போய்விட்டாள்.

                        இரண்டு மாதங்களுக்கப்புறம் முத்துப்பாண்டி ஃபைனல் பில் சம்பந்தமாக திருவண்ணாமலை போயிருந்த போது பச்சையம்மாளின் வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டிருந்தது. அவளின்  அம்மாவும், மாமாவும்  காய்ச்சி விற்ற சாராயம் குடித்த சிலர் செத்துப் போயிருந்ததால், இருவரையும் போலீஸ் வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய்விட பச்சையம்மாள் நிர்கதியாய் நின்றாள். முத்துப்பாண்டியைப் பார்த்ததும் கதறி அழுதாள்.

         அப்புறம் மிகவும் இரங்கத் தக்க குரலில் சொன்னாள். “தயவு பண்ணி என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க ஸார்…..இங்க விட்டுட்டுப் போனிங்கன்னா, போலீஸும் பொறுக்கிகளும் என்னை சீரழிச்சு சின்னா பின்ன மாக்கிடுவாங்க…. நான் உங்களுக்கும் உங்க குடும்ப வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் குடுக்க மாட்டேன்…நீங்களும் எனக்கு எந்த அந்தஸ்தும் தர வேண்டாம்; சும்மா உங்களோட ‘வப்பாட்டி’ மாதிரி வச்சுக்கிட்டு, அப்பப்ப ஆண் துணையா மட்டும் வந்து போயிட்டிருந்தீங்கன்னாப் போதும்….” நெஞ்சே வெடித்து விடும் போல கதறி அழுபவளைப் பார்த்ததும் முத்துப்பாண்டிக்கும் கண்ணீர் பொங்கியது.

                        “என்ன பச்சை இப்படிச் சொல்லீட்ட! கண்டிப்பா உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குறேன்…” என்று சொன்ன கையோடு அவளையும் அழைத்துக் கொண்டு  ஊருக்குப் போனான்.

                        முத்துப்பாண்டியின்  அய்யாவிற்கு இரண்டு விஷயங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒன்று ஜாதி; இன்னொன்று சோதிடம்! அதுவும் இரண்டாவதில் அதீத நம்பிக்கை. அய்யா இவன் சொன்னதை யெல்லாம் கேட்டதும் தாம் தூமென்று குதித்தார்.

         “கல்யாணம்ங்குறது வெளையாட்டுக் காரியமில்லடா; அது ஆயிரங் காலத்துப் பயிரு…. நம்ம சந்ததி தழைக்கச் செய்யிற ஏற்பாடு; நோங்குன பொம்பளைய எல்லாம் பொண்டாட்டியா ஆக்கிக்கிட முடியாது… நாலு நல்ல விஷயங்களையும் பார்த்துப் பண்ணனும்; நீ என்னடான்னா, தராதரமே இல்லாம ஒரு சித்தாளு சிறிக்கிய இழுத்துட்டு வந்து, கல்யாணம் கட்டி வைங்கிறீயே, உனக்கு புத்தி கித்திப் பெசகிப் போச்சா? ஜோசியர் அன்னைக்கே சொன்னார்; வெளியூர்க்கெல்லாம் பையன அனுப்புனா, பிள்ளை கை மீறிப் போயிடுவான்னு… அவர் சொன்ன மாதிரியே வந்து நிக்கிறியேடா…”

                        முத்துப்பாண்டி பிடிவாதம் பிடிக்க, அவனின் அம்மா தான் அய்யாவிடம் அழுது அரற்றி, “அவன் தான் ஆசைப் பட்டுக் கூட்டிட்டு வந்துட்டான்ல; உனக்கெதுக்கு இத்தனை வீம்பு… நம்பி வந்த பொம்பளப் புள்ளய என்ன செய்யறது இப்ப! அவளையே தான் அவனுக்கு கட்டி வச்சு தொலையேன்…. உன் கிரீடம் ஒண்ணும் எறங்கிடாது?” என்று சண்டை போட்டாள்.

                        பச்சையம்மாளின் ஜாதகக் குறிப்புகளைக் கொண்டு வந்தால், ஜோசியரிடம் காட்டிப் பொருத்தம் பார்த்துவிட்டு, பொருந்தினால் கல்யாணம் பண்ணி வைப்பதாக அய்யா இறங்கி வந்தார்.

                        முத்துப்பாண்டி அந்த ஏற்பாட்டையும் ஒத்துக் கொள்ளாமல் அவருடன் சண்டைக்குப் போனான். பச்சையம்மாள் தான் குறுக்கிட்டு இந்த சின்ன விஷயத்திற்காக அப்பாவும் பிள்ளையும் அடித்துக் கொள்ள வேண்டாமென்றும் தான் ஊருக்குப் போய் தன்னுடைய ஜாதகக் குறிப்புகளைக் கொண்டு வருவதாகவும் கிளம்பிப் போனாள்.

          அவளைத் தனியாக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தது தான் முத்துப்பாண்டி செய்த பெருந் தவறு. அந்த நேரம் பார்த்து, அவன் வேலை பார்த்த கம்பெனி  அவனை அவசர வேலை காரணமாக டெல்லிக்குப் போய்வரப் பணித்ததால், பச்சையம்மாளைத் தனியாக திருவண்ணாமலைக்கு அனுப்பி விட்டு, இவன் டெல்லிக்குப் பயணமானான்.            

                        பத்து நாட்களுக்கப்புறம் அவன் டெல்லியிலிருந்து திரும்பி ஊருக்குப் பொனபோது,  பச்சையம்மாள் திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வந்திருக்கவில்லை. ஆனால் அவளிடமிருந்து  ஒரு கடிதம் வந்திருந்தது. ’அவன் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி என்றும், தான் அவனுக்குப் பொருத்தமான மனைவியாக இருக்க மாட்டாள் என்றும் அதனால் அவள் முத்துப்பாண்டினின் வாழ்விலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதாகவும்‘ உருக்கமாக எழுதி இருந்தாள்.

            இடையில் என்ன நடந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. அய்யா தான் ஏதோ சதி பண்ணி அவள் மனதைக் கலைத்து அவளை திருப்பி அனுப்பி விட்டதாய் தோன்றி அவருடன் சண்டைக்குப் போனான். அவர் தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று சாதித்து விட்டார். அவனின் அம்மாவும் “அந்தப் புள்ள ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வரவே இல்லய்யா…” என்றாள்.

                        அவசரமாய் திருவண்ணாமலைக்குப் போய்த் தேடி அலைந்ததில் அவள் அகப்படவே இல்லை. அவள் அங்கு போகவே இல்லை என்ற தகவல் தான் கிடைத்தது. பச்சையம்மாளின் அம்மாவும் மாமாவும் ஜெயிலில் இருந்ததால் அவள் எங்கு போயிருக்கக் கூடும் என்கிற விபரத்தை விசாரித்து அறியவும் வழியில்லாமல் போய்விட்டது. அப்புறம் அம்மாவின் வற்புறுத்தலால் அய்யா ஏற்பாடு செய்த பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்டான்.

                        பச்சையம்மாளுக்கும் தனக்குமான சில அந்தரங்கங்களைச் சென்சார் பண்ணி விட்டுத் தான் முத்துப்பாண்டி பச்சையம்மாளின் கதையை பாக்யலட்சுமியிடம் சொன்னான். அவள் கொஞ்ச நேரம் எதுவும் பேசவே இல்லை. அப்புறம் பெண்மைக்கே உரிய உக்கிரத்துடன் பெரிதாய் சீறினாள்

                        ”நீ யெல்லாம் ஒரு மனுஷனா? ஒரு அப்பாவிப் பெண்ணோட வாழ்க்கையில இஷ்டம் போல விளையாடிட்டு, எதுவுமே நடக்காதது மாதிரி பேசுற! இதப் பத்தி என்கிட்ட இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட சொன்னதில்ல; நம்பி வந்தவள நட்டாத்துல விட்டுருக்கியே…. இதுக்காகவே ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கு மன்னிப்பே கிடையாதே….”

                        ”இதுல நான் செஞ்ச தப்பு என்ன இருக்கு! அவளே என் வாழ்க்கையிலருந்து வெலகிப் போயிட்டா…”

                        ”அவளே எப்படி வெலகிப் போவா? உங்க அப்பாவும் அம்மாவும் தான் ஏதாவது பண்ணியிருப்பாங்க; நீ இன்னும் நாலு எடம் போயி அவளோட சொந்தக்காரங்கள் கிட்ட விசாரிச்சிருந்தீன்னா அவள் கிடைச்சிருப்பா….”

                        ”சரி காலம் கடந்து போயாச்சு; இப்ப என்ன தான் பண்ண முடியும்?”

                        ”அப்படியெல்லாம் விட முடியாதுப்பா; எனக்கென்னமோ நீயும் உன் குடும்பமும் பச்சயம்மாள மோசம் பண்ணுனதால தான் நமக்கு குழந்தை இல்லாமப் போயிடுச்சோன்னு தோணுது… அதனால நீ தெரிஞ்சோ தெரியாமலோ பண்ணுன பாவத்துக்கு நாம பிராயச்சித்தம் ஏதாவது பண்ணனும்; அதுக்கு நீ பச்சயம்மாளத் தேடிக் கண்டுபிடிக்கனும்; நாளைக்கே ஒரு நாலைஞ்சு நாள் லீவப் போட்டுட்டு நீ அவளத் தேடிக் கண்டுபிடிக்கிற வழியப் பாரு….” என்றாள் தீர்மானமாக.

                        பாக்யலட்சுமி சொன்னால் சொன்னது தான்; அவளின் பிடிவாதம் பிரசித்தி பெற்றது. சைட்டில் நடந்ததை ஏன் இவளிடம் சொன்னோம் என்றிருந்தது முத்துப் பாண்டிக்கு.

                        அவன் திருவண்ணாமலைக்கு கிளம்பிப் போய் பச்சையம்மாள் முன்பு குடியிருந்த பகுதியில் போய் விசாரித்துப் பார்த்தான்.            அந்தப் பகுதியின் முகமே மாறிப் போய்க் கிடந்தது. குடிசைகள் இருந்த இடமே தெரியாமல் அழகழகான பெரும் கட்டிடங்கள் முளைத்திருந்தன. மருந்துக்குக் கூட தெரிந்த முகம் எதுவும் தென்படவில்லை. எதிர்ப்பட்ட ஒன்றிரண்டு பேர்களிடம் விசாரித்துப் பார்த்ததிலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

                        சென்னைக்கே திரும்பிப் போய்விடத் தீர்மானித்து பேருந்து நிலையம் போனான். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பரிமாறிய சர்வர் இவனையே குறுகுறுவெனப் பார்ப்பது போலவும் இவனிடம் ஏதோ கேட்க விரும்புகிறான் என்றும் தோன்றியது. அடர்த்தியான தாடி மீசையும் காவி உடையுமாயிருந்தவனை முத்துப்பாண்டிக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை.

                        இவன் சாப்பிட்டுக் கை கழுவி விட்டு கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருப்பவரிடம் காசு கொடுத்து விட்டு வெளியேறப் போகையில் அவன் இவனிடம் ஓடி வந்தான்.

                        “ஸார் நீங்க ஈ.பி. ஆபிஸ் கட்டுன கான்ட்ராக்டரோட என்ஜினியர் தான?”

                        “ஆமா, நீ யாருப்பா…? எனக்கு யாருன்னே சுத்தமா அடையாளம் தெரியலயே….”

                        “நான் பச்சையம்மாவோட மாமா ஸார்….” என்று சிரித்தான்.

                        முத்துப்பாண்டிக்கு முன் ஒரு வெளிச்சம் படர்ந்தது போல் இருந்தது. கண்டிப்பாக இவனுக்குப் பச்சையம்மாள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும். அவளை நெருங்கி விட்டது போல் ஒரு சந்தோஷம் மனசுக்குள் துளிர்த்தது.

                        அவன் கொடுத்த தகவலின்படி முத்துப்பாண்டி சேலம் போய் அங்கிருந்து உலிப்புரத்தை விசாரித்துப் போனால் பச்சையம்மாள் அங்கு இல்லை. ஆனால் அவளின் உறவுக்கார பெண்ணொருத்தியின் மூலம் அவள் இப்போது ராசிபுரத்தில் இருப்பது தெரிந்தது.

                        அவன் ராசிபுரம் போய் அந்தப்பெண் கொடுத்திருந்த முகவரியை விசாரித்துப் போனபோது, அங்கும் பச்சையம்மாள் தட்டுப் படவில்லை. ஒரு காம்பௌண்டிற்குள் தீப்பெட்டி தீப்பெட்டிகளாய் வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த லைன் வீடொன்றில் ஒரு ஆறேழு வயதுப் பெண் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருந்தது. முகத்தில் பச்சையம்மாளின் சாயலிருந்தது. இவன் வாசலில் தயங்கி நிற்பதைப் பார்த்து, உள்ளேருந்து எழுந்து வந்து ”நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள்.

                        “இங்க பச்சையம்மாள்ங்குறது…..”

                        “என்னோட அம்மாதான்…..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்தபடி பச்சையம்மாள் வந்தாள். அவளைப் பார்த்ததும் முத்துப்பாண்டிக்கு திக்கென்றிருந்தது. ரொம்பவும் மெலிந்து வாடிப் போயிருந்தாள்.  இவனைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்து “ஸார் நீங்களா? வாங்க….வாங்க…” என்று வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.

                        பச்சையம்மாளைப் பார்க்கப் பார்க்க முத்துப்பாண்டிக்கு மனசைப் பிசைவதாக இருந்தது. அவனுக்கு குமுறி அழ வேண்டும் போலிருந்தது. ”என்னாச்சு பச்சை! ஏன் இப்படி இருக்குற? “ – அவனது குரல் உடைந்து வந்து விழுந்தது.

                        “எனக்கென்ன சார்; நான் நல்லாத்தான் இருக்குறேன்…..” என்றவள் “என்னை விடுங்க ஸார்…நீங்க நல்லா இருக்குறீங்களா?” என்றாள்.

                        அவள் பழைய கதைகளைச் சொல்லத் தொடங்கினாள். முத்துப்பாண்டி டெல்லிக்குக் கிளம்பிப் போனதும் பச்சையம்மாள் அவளின் ஜாதகக் குறிப்பை எடுத்து வருவதற்காக அவனுடைய கிராமத்திலிருந்து கிளம்பி யிருக்கிறாள்.  அவளின் ஜாதகக் குறிப்பு திருவண்ணாமலையில் இல்லை என்பதும் அது சேலத்தில் அவர்களின் பூர்வீக வீட்டில் அவளின் அப்பாவைப் பெற்ற பாட்டியிடம் இருப்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

                        அதனால் அவள் சேலத்திற்கு வந்து பாட்டியிடமிருந்து குறிப்பை வாங்கிக் கொண்டவள் ‘உடனே முத்துப்பாண்டினின் ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறோம்? அவன் டெல்லியிலிருந்து வரும் வரை பாட்டியுடனே கொஞ்ச நாள் தங்கி இருக்கலா மென்று’ முடிவு செய்து அதன்படி சேலத்திலேயே தங்கி இருந்தாள்.

            அவள் சேலத்திற்கு வரும்போதே முத்துப்பாண்டியின் ஜாதகத்தையும் அவனின் அய்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். சேலத்திலேயே இருவர் ஜாதகத்தையும் காட்டிப் பொருத்தம் பார்க்கலாமென்று அவளின் பாட்டி ஒரு ஜோசியரிடம் அழைத்துப் போனாள்.

            அவர் இருவர் குறிப்பையும் பார்த்து சில கணக்குகளையும் போட்டுவிட்டு “பையனின் தோப்பனார் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டார். இவள் ஆமாம் என்று சொல்லவும் அப்படி என்றால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமென்றும் அப்படி கல்யாணம் பண்ணிக் கொண்டால் பெண்ணின் மாமனார் இறந்து விடுவார்…” என்றும் சொல்லி விட்டார்.          

            மேலும் வேறு இரண்டு ஜோசியர்களிடமும் ஜாதகத்தைக் காட்டியதில் அவர்களும் முதல் ஜோசியர் சொன்னதையே உறுதிப் படுத்தினார்கள். பச்சையம்மாளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முத்துப்பாண்டிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்பதும் அவன் கண்டிப்பாக அவனது அய்யாவிடம் சண்டை போட்டு இவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்பதும் அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.

                        ஆனாலும் ஜோதிடத்தைத் திடமாக நம்புகிற அவனது அய்யா மிகவும் பதறிப் போய்விடுவார். அதுவும் தன் உயிருக்கே ஆபத்து என்பதை அறிய நேர்ந்தால் எந்த மனிதன் தான் நிம்மதியாக இருக்க முடியும்?

            அவளுக்கும் ஜோதிடர்கள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவர்கள் சொல்வதை மீறி இருவரும் கல்யாணம் செய்து கொண்டு  ஒருவேளை முத்துப்பாண்டினின் அய்யா உண்மையிலேயே இறந்து விட்டால், அந்தக் குற்ற உணர்ச்சி வாழ்நாளெல்லாம் தன்னை உறுத்திக் கொண்டிருக்குமே என்று மனசுக்குள் மறுகினாள்.

            அவளின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டபோது அவளும் “வேண்டாம் தாயி; விட்டுடு….இத்தனை தயக்கத்தோட ஒரு கல்யாணம் நடக்குறது உங்க ரெண்டு பேருக்குமே நல்லதில்லை…..” என்றாள்.

            பச்சையம்மாள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு முத்துப்பாண்டியின்  வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாய் விலகிக் கொளண்டாள். அப்புறம் சேலத்திலேயே பாட்டியுடன் தங்கி கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். 

            தொலைதூரக் கல்வியைத் தொடர்ந்து தன்னுடைய பி.காம். பட்டப் படிப்பை முடித்தாள். அதை வைத்து ஒரு தனியார் அலுவலகத்தில் உதவிக் கணக்காளராக வேலைக்குச் சேர்ந்தாள். கல்யாணமே வேண்டா மென்றிருந்தவளை பாட்டி தான் வற்புறுத்தி ஆதிகேசவனை மணமுடித்து வைத்தாள்.

            ஆதிகேசவன் லாரி டிரைவராக வேலை பார்த்தான். மூன்று வருஷம் கூட அவர்களின் தாம்பத்யம் நீடிக்கவில்லை. ஒரு தொலைதூரப் பயணத்தில் இவன் ஓட்டிப்போன லாரி அதிவேகமாய் வந்த அரசுப் பேருந்துடன் மோதியதில் ஆதிகேசவன் அந்த இடத்திலேயே செத்துப் போனான். பச்சையம்மாளுக்கு மிஞ்சியது அவன் மூலம் அவளுக்குக் கிடைத்த ஒரு பெண் குழந்தையும், எயிட்ஸ் வியாதியும் தான்!

       பச்சையம்மாள் தன் மகளை வயிற்றில் சுமக்கும் போது செய்து கொண்ட வழக்கமான இரத்தப் பரிசோதனையின் போது தான் ஆதிகேசவன் அவளுக்கு எயிட்ஸைப் பரிசளித்திருந்த விபரமே தெரிந்திருக்கிறது. நல்லவேளையாக ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால் கருவிலிருக்கும் குழந்தைக்கு எயிட்ஸ் தொற்ற விடாமல் மருத்துவர்கள் பார்த்துக் கொண்டார்கள்

            பச்சையம்மாளின் கதையைக் கேட்ட முத்துப்பாண்டி இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசவில்லை. அப்புறம் மெதுவாய்ச் சொன்னான். “சரி போனதெல்லாம் போயிருச்சு; இப்ப நீ குழந்தையையும் கூட்டிக்கிட்டு என்கூடவே வந்துடு பச்சை; அங்க வந்து உனக்கு சிகிச்சையும் உன் பொண்ணுக்கு ஒரு நல்ல கல்வியும் ஏற்பாடு பண்றேன்….” என்றான்.

            இல்லைங்க ஸார்; அது சரியா வராது. என் வாழ்க்கை இந்த ஊர்லயே முடிஞ்சு போகட்டும். என் பொண்ணத்தான் அனாதரவா விட்டுட்டுப் போயிடுவனோன்னு ரொம்பவும் பயந்துக் கிட்டு இருந்தேன்; கடவுளாப் பார்த்துத் தான் உங்களை அனுப்பி வச்சிருக்கார்; என் பொண்ண உங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க…  உங்களுக்குந்தான் குழந்தையே இல்லைன்குறீங்களே! இவள உங்க பொண்ணா வளர்த்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுங்க….” என்றபடி கண் கலங்கினாள்.

            முத்துப்பாண்டி எவ்வளவோ வற்புறுத்தியும் பச்சையம்மாள் அவனுடன் வரச் சம்மதிக்கவில்லை. அவளின் பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினான் முத்துப்பாண்டி.

 

Ø  முற்றும்

(உயிரெழுத்து மார்ச் 2013)