Sunday, April 25, 2010

சிறுகதை: சக்கர வியூகம்

நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு போய் விட்டது. அப்போது அவர் இரவு உடையாக பழுப்பெறிய நான்கு முழ வேஷ்டியும் ஒரு முண்டா பனியனும் மட்டுமே அணிந்திருந்தார். மாற்று உடை அணிந்து கொள்ளக் கூட போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை. அவரின் படபடப்பு விலகுவதற்குள்ளாகவே அரெஸ்ட் வாரண்ட்டைக் காட்டி அவசரப் படுத்தினார்கள்.
ஆதிராமனின் மனைவி முருகேஸ்வரிக்குத் தூக்கக் கலக்கம் கலைவதற்குள்ளாகவே அவள் புருஷனை போலீஸ் அள்ளிக் கொண்டு போய்விட்டது.பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களின் பையனுக்கே விடிந்து எழுந்த பின்பு தான் விஷயமே தெரிந்தது. ஆனால் அதிகாலைப் பத்திரிக்கைகள் எல்லாம் ஆதிராமனின் கைது பற்றிய செய்திகளை அனல் பறக்கும் தலைப்புகளில் சுடச்சுட அலறின.
அணுவியல் விஞ்ஞானி ஆதிராமன் பொடாசட்டத்தின் கீழ்க் கைது;
தேசத்துரோகக் குற்றச்சாட்டு
செய்தியை வாசித்த முருகேஸ்வரிக்கும் அவளுடைய மகனுக்கும் என்ன நடக்கிறதென்றே எதுவும் புரிய வில்லை. அரசின் பாதுகாப்பு ரகசியங்களை ஆதிராமன் அயல் நாடுகளுக்கு விற்றுவிட்டதாக அவரின் மீது குற்றஞ் சாட்டப் பட்டிருந்தது. முருகேஸ்வரியும் அவளுடைய மகனும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு ஓடிப்போய் விசாரிக்கவும், இரவோடிரவாக தலைநகரக் காவல் நிலையத்திற்கு ஆதிராமன் கொண்டு செல்லப் பட்டதாக தகவல் சொல்லப்பட்டது.
ஒரு வக்கீலின் உதவியோடு காவல் நிலையத்தை அணுகுவதுதான் சரியாக இருக்குமென்று புரிந்தாலும் அவர்களுக்கு வக்கீல் யாரையும் தெரிந்திருக்க வில்லை. கிராமத்து மனிதர்கள். அதிகம் பேருடன் பரிச்சயமில்லாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கம்பெனி குடியிருப்பில் ஆதிராமனுடன் வேலை பார்க்கும் சக விஞ்ஞானிகள் மட்டும் தான். ஆனால் அவர்களும் இவர்களுக்கு உதவத் தயாராய் இல்லை என்பதுதான் இதில் பெரிய சோகம்.
நேற்றுவரைப் பிரியமாய்ப் பழகியவர்களும் பத்திரிக்கைச் செய்தியைப் படித்ததும் விரோதமாய்ப் பார்த்தார்கள். இரக்கம் சுரக்கும் சில ஈர நெஞ்சுக்காரர்களும் எங்கே ஆதிராமனுக்கு உதவப் போய் தங்களையும் சந்தேகப்பட்டு, தேசத் துரோகச் சதியில் சம்பந்தப் படுத்தி விடுவார்களோ என்று பயந்து 'நமக்கேன் வம்பு' என்று நல்ல பிள்ளைகளாய் ஒதுங்கிக் கொண்டார்கள்.
முட்டிமோதி ஒரு வழியாய் முருகேஸ்வரி அவளுடைய மகனுடைய கல்லூரி நண்பனின் உதவியுடன் ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குப் போய் விசாரித்தால், பொடா என்றும் தேசியப் பாதுகாப்பு என்றும் பெரிய பெரிய சட்ட வார்த்தைகளைப் பேசி போலீஸ் பயமுறுத்த, இவர்கள் அழைத்துப் போன கத்துக்குட்டி வக்கீல் மிரண்டு போய் விட்டார். ஜாமீனில் கூட விடமுடியாது என்று போலீஸ் வம்படியாய் மறுத்து விட தங்களின் விதியை நொந்தபடி வீடுவந்து சேர்ந்தார்கள். இருவருக்கும் பிழியப் பிழிய அழ மட்டுமே முடிந்தது. அழுவதையும் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டு மட்டுமே செய்தார்கள். தெருவில் இறங்கினால் எதிர்ப்படுபவர்களின் முகங்களில் கசியும் ஏளனமும் பரிதாபமும் ரொம்பவே வதைத்தது. உற்றமும் சுற்றமும் இவர்களைக் குற்றவாளிகளாய் நோக்க வீட்டையே சிறையாகப் பாவித்து ஒடுங்கிப் போனார்கள்.
காவல் துறையின் பெரிய அதிகாரிகள் ஐந்து பேர் ஆதிராமனைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேள்விகளால் வறுத்தெடுத்தார்கள். என்ன உங்கள் திட்டம்? இன்னும் யாரெல்லாம் இந்தச் சதியில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை இலட்சம் டாலர் உங்களுக்குக் கிடைத்தது? ஸுவிஸ் பாங்க் ரகசிய கணக்கு எண் என்ன? ஆதிராமனைச் சுற்றிலும் கேள்விகளே பாம்புகளாய்ச் சீறிக் கொண்டிருந்தன. அவருக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. பதிலற்ற கேள்விகளின் நெடியில் அவர் பெரிதும் மூச்சுத் திணறினார்.
‘நான் அந்த ரகமில்லை நண்பர்களே! சம்பளக் கவரை அப்படியே மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நானுண்டு என் ஆராய்ச்சியுண்டு என்று இயங்குபவன்; என் குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அவர்களை வெளியில் அழைத்துப் போய் சுற்றிக் காண்பித்ததில்லை. அதிகம் படிப்பறிவில்லாத மனைவி கூட அவளாகவே தான் இந்த டெல்லிக் குளிரையையும் வெயிலையும் ஹிந்தியையும் சமாளிக்கப் பழகிக் கொண்டாள். அதில் ஒரு துளிகூட நான் அவளுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை; உதவியாய் இருக்கவும் இல்லை.
எனக்கும் நிறையக் கனவுகள் உண்டு. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் சத்தியமாய் சம்பாதிப்பதிலும் சொத்து சேர்ப்பதிலும் இல்லை; அணுவியலில் புதிது புதிதாய் சாதிப்பதிலும் நம் மூளை பலத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தி அவர்களை ஆச்சிர்யமூட்டுவதிலும் தான். அந்த முயற்சியில் தான் என் நேரங்களை எல்லாம் செலவிட்டுக் கொண்டிருந்தேன். புரிந்து கொள்ளுங்கள் என் போலீஸ் நண்பர்களே!’ என்று மனசுக்குள் முனங்கியபடி பலகீனமான மௌனத்தால் போலீஸை எதிகொண்டார் ஆதிராமன்.
“ஒரு விஞ்ஞானி ஆச்சேன்னு மரியாதை கொடுத்து விசாரிச்சா, நீ மசியறதாய்த் தெரியலயே! இனிதான் நீ போலீசோட நிஜமுகத்தைப் பார்க்கப் போற…..” என்றபடி ஒரு அதிகாரி ஆதிராமனின் அந்தரங்க உறுப்பை நோக்கி தன் பூட்ஸ்காலை வீச, மற்றவர்களும் மிருகத் தனமாய்த் தாக்கத் தொடங்கினர். போலீஸின் வழக்கமான சித்ரவதைகளில் ஆதிராமன் துடித்துப் போனார்.
துடிக்கத் துடிக்க நகக்கண்களில் ஊசி ஏற்றினார்கள். எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். ஐஸ் படுக்கையில் படுக்க வைத்து அலற அலற ஆசனவாயில் லத்தியை நுழைத்தார்கள். தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு கதறக் கதற அடித்து நொறுக்கினார்கள். வலி தாளாமல் ஆதிராமன் மயக்கமானால், தெளிந்ததும் மீண்டும் மூன்றாம் தர விசாரணை முறைகளைத் தொடர்ந்தார்கள்.
ஆறுமாதங்கள் இப்படியே இடை விடாமல் தொடர்ந்தார்கள். வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு வெவ்வேறு வார்த்தைகளில் திருப்பித் திருப்பிக் கேட்டதையே கேட்டடர்கள். ஆளாளுக்கு அடித்து துவம்சம் செய்தார்கள். வெளிநாட்டுக் காரர்களுக்கு ஆதிராமன் விற்றதாய் ஒரு வரைபடத்தின் நகலையும் அதன் விளக்கமான கம்யூட்டர் சி.டி.யையும் காட்டினார்கள். விற்றதற்கு ஆதாரமாய் சக விஞ்ஞானிகள் மூன்றுபேர் கூட்டாக ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார்கள்.
தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்க ஏதேதோ வியூகம் வகுக்கப்பட்டு தானும் தன்னை அறியாமலேயே அதற்குள் அகப்பட்டுக் கொண்ட மர்மம் ஆதிராமனுக்கு மெதுவாய்ப் புரியத் தொடங்கியது. ஏன் இதெல்லாம்? யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? நானுண்டு; என் வேலை யுண்டு என்று யாரிடமும் அதிகம் ஒட்டாமலிருந்தது பெரிய பிசகா? ஆதிராமனுக்குத் துக்கம் பொங்கியது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்கிற சிறு கிராமத்தில் தொடங்கியது ஆதிராமனின் பால்யம். அவனின் அப்பாவின் வாழ்க்கையும் கால்களும் பனைமரத்துடன் பிணைக்கப் பட்டிருந்தன. பனை ஏறுதலும் பனைப் பொருட்களைத் தயாரித்து விற்பதும் அவர்களின் தொழிலாய் இருந்தது. ஆதிராமனுக்கு படிப்பு இளநொங்காய் இனித்தது. கள்ளாய்ப் போதையூட்டியது. பனை வெல்லமாய் அடி நாக்கையும் தாண்டி இதயம் வரை தித்திதது. பனை ஏறுகிற குடும்பத்திலிருந்து ஒரு விஞ்ஞானி உருவானது என்பது இயற்கை நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களில் ஒன்று. அதற்கான விதை அவருடைய பதின்மூன்றாம் வயதில் அவருக்குள் விழுந்தது. அன்றைக்கு இரத்தினசாமி வாத்தியார் அணுவைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும்; எப்படி பாடங்களை மாணவர்களின் மூளைக்குள் நேரிடையாக விதைப்பது என்கிற சூட்சுமம்.
பாடம் தொடங்குவதற்கு முன் அவர் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆளுக்கொரு சிறு சாக்பீஸ் துண்டைக் கொடுத்து சிறு துகளாக உடைக்கச் சொன்னார். யார் இருப்பதிலேயே சிறிய துகளாக உடைத்துத் தருகிறார்களோ அவனுக்கு மூன்று முழு கலர் சாக்பீஸ்கள் பரிசு என்று அறிவித்தார். மற்றவர்கள் சிறிதும் பெரிதுமாய் உடைத்து ஆசிரியரிடம் காண்பிக்க ஆதிராமன் ஒரு புள்ளி அளவிலான துகளை பேப்பரில் வைத்து நீட்டினான். ஆதிராமனுக்குத் தான் பரிசு கிடைத்தது.
அப்புறம் இரத்தினசாமி ஆசிரியர் பாடத்திற்குள் புகுந்தார்.”இப்ப ஆதிராமன் உடைத்துக் கொடுத்ததையும் கூட இன்னும் பல லட்சம் துகள்களாக உடைக்க முடியும். கண்ணுக்கே புலப்படாத சக்திவாய்ந்த மைக்ரோஸ் கோப்புகளின் மூலம் மட்டுமே பார்க்க முடிகிற மிக நுண்ணிய துகள் தான் அணுவென்பது. இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு பொருளும் கோடானுகோடி அணுக்களால் தான் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அவற்றைப் பிணைத்து வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்றதும் அதைக் கடவுள்னு புரிஞ்சுக்கிடாதீங்க; அதன் பேர் எலக்ட்ரான்…..”
ஆசிரியர் பாடத்தைத் தொடர்ந்தார். ஆதிராமனுக்கு அணுவின் மீது ஈடுபாடும் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்கிற தீவிரமும் ஏற்பட்டது. தேடித் தேடிப் படித்தான். நியூக்ளியர் சயின்ஸில் பட்டமேற்படிப்பு வரைப் படித்துவிட்டு வேலை இல்லாமல் அல்லாடினான். வயிற்றுப் பாட்டுக்கே போதாத சம்பளத்தில் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராகக் கொஞ்சநாள் அவஸ்தைப் பட்டான். அப்புறம் தான் யூப்பிஎஸ்ஸி தேர்வெழுதி இளம் விஞ்ஞானியாக அந்த ஆராய்ச்சிக் கேந்திரத்துக்குள் அடியெடுத்து வைத்தான்.
விஞ்ஞானிக்குரிய எந்தப் பந்தாவும், வரவழைக்கப் பட்ட செயற்கையான மேதா விலாசமும் இல்லாமல் எளிமையான கிராமத்து மனிதனாய் இயல்பான பயத்துடன் முதல்நாள் அவன் வேலைக்குப் போனபோது, சக விஞ்ஞானிகள் பலரும் பரிகாசமாய்ப் பார்த்தார்கள்.
“ரிஸர்வேஷன் கோட்டாவுல வந்துருப்பான்; அரேபாபா, ஆராய்ச்சியில கூடவா ரிஸர்வரேஷன்?” இளக்காரமாய் முதுகுக்குப் பின்னால் சிரித்தார்கள். கேலியில் கிலியாகி தேம்பி அழுதவனை ஆராய்ச்சிக் கேந்திரத்தின் டீன் தேற்றினார்.
“இவர்களெல்லாம் சருகுகள்; சத்தம் போடத்தான் செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் ஆராய்ச்சி என்பது கனமான புத்தகங்களிலிருந்து காப்பி அடித்து கான்பிரன்ஸ்களில் கட்டுரை வாசித்து காலத்தை ஓட்டுவது. புதிதாய் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்! ஆனால் நீ தளிர்; கிளை விரித்துப் படறப் போகிறவன். இந்த வெட்டி ஆசாமிகளை எல்லாம் உதறிவிட்டு அடுத்தகட்டத்துக்குப் போகிற வழிகளைப்பார்….”
அணுவியல் பற்றிய ஆராய்ச்சிகள் ஒரு சுழல் மாதிரி ஆதிராமனை உள்ளிழுத்துக் கொண்டன. உயரதிகாரி கொடுத்த உற்சாகத்தில் ஊக்கம் பெற்று கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டு திகு திகுவென்று எல்லோரையும் எரித்துக் கொண்டு ஒளிர்ந்தான்.பேரும் புகழும் பதவி உயர்வுகளும் படிப் படியாய் வந்து சேர்ந்தன.
“அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்துல நியூக்ளியர் பிஷ்ஷன் சம்பந்தமான ஒரு ஃபெல்லோஷிப்புக்கு அரசாங்கமே உன்னை அனுப்பத் தீர்மானிச்சுருக்கு; இது மிகப்பெரிய கௌரவம். மறுக்காமப் போயிட்டு வா மேன்; அநேகமா அடுத்த உதவி டீன் நீ தான்….” தலைமை விஞ்ஞானி ஆதிராமனுக்கு கை கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஃபெல்லோஷிப் முடிந்து விடைபெறுகிற தினத்தில் ஆராய்ச்சிமையத்தின் தலைவர் ஃபிரடெரிக் ஜோன்ஸ் ஆதிராமனைத் தன் கேபினுக்கு அழைத்து அவர் அங்கு சமர்ப்பித்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைபற்றி வெகுநேரம் சிலாகித்துப் பேசினார்.
“மிஸ்டர் ஆதி, நீங்கள் ஏன் எங்கள் நாட்டிலேயே தங்கிவிடக் கூடாது? இங்கு உங்களால் இன்னும் சிறப்பாகப் பிரகாசிக்க முடியும். இந்தியாவில் இப்போது நிங்கள் சம்பாதிப்பதைப்போல் இருபது மடங்கு சம்பாத்தியம்; உங்கள் பையனுக்கு இங்கேயே ஒரு உயர்தரமான கல்வி… இன்னும் என்னென்ன வேண்டும் கேளுங்கள்; எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்; உங்களை மாதிரி விஞ்ஞானிகளுக்கெல்லாம் இங்குதான் சிறப்பான மரியாதைகளும் வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும்; சரியென்று சொல்லுங்கள்….”
“உங்களின் அன்பிற்கும் அழைப்பிற்கும் ரொம்பவும் நன்றி ஜோன்ஸ்; ஆனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் ஆஃபரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது… அரசாங்கச் செலவில் இங்கு கற்றுக்கொள்ள வந்தவன் நான்; இங்கு அறிந்து கொண்டதை அங்குபோய் இன்னும் மேம்பட்ட தரத்தில் அமல் படுத்திப் பார்க்க வேண்டும் ….ப்ளீஸ் என்னை விட்டு விடுங்கள்…” ஆதிராமன் ஒரு புன்னகையுடன் மறுத்தார்.
“சொன்னால் புரிந்து கொள்ளுங்கள் ஆதிராமன்; உங்களின் அறிவையும் உழைப்பையும் இந்தியா மாதிரியான ஒரு ஏழை வெப்பப் பிரதேசத்தில் போய் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்….! இந்த நாட்டுக்கு கற்றுக் கொள்ள வந்தவர்கள் எல்லோருமே இங்கு தங்கி விடுவது தான் வாடிக்கை; உங்களின் அரசாங்கம் உங்களை எதுவும் செய்துவிட முடியாது; இங்கு தங்க மறுத்து வெளியேறும் முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்…” செல்லக் கோபத்துடன் சீண்டினார் ஜோன்ஸ்.
“என்ன செய்வது ஜோன்ஸ்? நீங்கள் குறிப்பிடும் ஏழை வெப்ப பிரதேசத்தில் தானே என்னுடைய வேர்கள் விரவிக் கிடக்கின்றன. அவற்றை பிடுங்கிக் கொண்டு வருவது எனக்கு சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை; மேலும் என்னை உருவாக்கி விட்ட தேசத்திற்குத் தான் என்னுடைய அறிவும் உழைப்பும் பயன்பட வேண்டுமென்கிற பிடிவாதமும் உண்டு எனக்கு. வருகிறேன் நண்பரே!” ஜோன்ஸின் முகம் ஜிவு ஜிவுவென இரத்தச் சிவப்பாவதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஆதிராமன் கைகுலுக்கி விடைபெற்றார்.
அப்படி ஏன் ஓடி வர வேண்டும்? இங்கு வந்து என்ன சாதித்தோம்! தேசத் துரோகி என்கிற பட்டம் தான் கிடைத்தது! பொதுக் கழிப்பிடத்தை விடவும் மோசமான மூத்திர மலவாடை அடிக்கும் லாக்கப் ரூம்களில் அடைபட்டு அடிபட்டதுதான் மிச்சம்….. பேசாமல் ஜோன்ஸ் கொடுத்த வேலையை ஒத்துக் கொண்டு அங்கேயே சுகமாய் வாழ்ந்திருக்கலாம் என்று முதல் முறையாய் மனம் புழுங்கினார் ஆதிராமன்.
ஆட்சிமாறி பொடா சட்டம் விலக்கிக் கொண்டபோதும் ஆதிராமன் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியேற முடியவில்லை. ஆனால் ஜாமின் கிடைத்தது. வீட்டிற்குப்போய் மனைவியையும் மகனையும் பார்த்தவருக்கு இதயம் வெடித்து விடும் போலாகி விட்டது.இருவரும் துரும்பாய் இளைத்து அரை ஆளாய்க் கிடந்தார்கள்.முருகேஸ்வரி புருஷனைக் கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள். பையன் அனல் கக்கும் பார்வையால் ஆதிராமனை உலுக்கினான்.
“ஏம்ப்பா இப்படி பண்ணுன! உன்னைப் பத்தி எவ்வளவு உயர்வா நெனைச்சுக்கிட்டிருந்தேன் நான்; ஒரே ராத்திரியில எல்லாத்தையும் போட்டு ஒடச்சுட்டியேப்பா… என்னால காலேஸுக்குப் போக முடியல; அம்மாவால மார்க்கெட்டுக்குப் போக முடியல; கிராமத்துலருந்து வந்த நம்ம சொந்த பந்த மெல்லாம் காறித் துப்பிட்டுப் போயிட்டாங்க. ஆறுதலுக்குக் கூட ஆள் இல்லாம அனாதையா இந்த பட்டணத்துல அலையிறது எவ்வளவு கொடுமை தெரியுமா? உனக் கென்ன நீ பாட்டுக்கு ஜெயிலுக்குள்ள போயி ஹாய்யா உட்காந்துக்கிட்ட …..
“ஏன்ப்பா இதெல்லாம்… எனக்குத் துட்டுச் சேர்த்து வைக்கவா? 'கல்விதான் நம்மள மாதிரி ஆட்களுக்கு ஒரே சொத்து; அதால கவனமாப் படின்னு' எனக்கு அடிக்கடி அட்வைஸ் பண்ணீட்டு நீ புத்திய அலைய விட்டுட்டியேப்பா….!”முகத்தை மூடிக்கொண்டு அவன் குமுறி அழுதது ஆதிராமனைக் குலை நடுங்கச் செய்தது.காவல் நிலையங்களில் அவர் அனுபவித்த சித்ரவதைகளையும் விடக் கொடுமையானதாக இருந்தது அது.
“நான் ஒண்ணுமே பண்ணலைடா…. எப்படியோ பொய்யும் புரட்டுமா ஜோடிச்சு என்னை மாட்டி விட்டுட்டாங்கடா கண்ணு; என்னை நம்புடா…” அவனைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டு பலவீனமாய் முனங்கினார் ஆதிராமன். ஆனால் மாரிமுத்து அவரிடமிருந்து திமிறிக் கொண்டு, தமிழ், ஆங்கில மற்றும் ஹிந்திப் பத்திரிக்கைகளை அள்ளிக் கொண்டு வந்து அவருக்கு முன்னால் பரப்பினான். எல்லாவற்றிலும் ஆதிராமனே டாபிக்கல் செய்தியாக இருந்தார். அவர் செய்தது மிகப்பெரிய தேசத் துரோகம் என்று விலாவாரியான ஆதாரங்களுடன் பரபரப்பான செய்தி கட்டுரைகள் வெளியிடப் பட்டிருந்தன.
“இதெல்லாம் பொய்யாப்பா? ஏன் ஒட்டு மொத்தமா எல்லோரும் உனக்கெதிரா பொய் சொல்லனும்? உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலப்பா….” ஒரு தந்தை தானே தன் மகனுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட அவலம் எந்த தகப்பனுக்கும் வர வேண்டாம்; இவனைக் காப்பாற்றுவதற்காக வேனும் தன்னைக் குற்றமற்றவரென்று நிரூபிக்கிற வெறி கிளம்பியது ஆதிராமனுக்கு.
ஒருவழியாய் அவரின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதிராமனை பொடா சட்டத்தின் பிடியிலிருந்து ஆறாண்டுகளுக்கப்புறம் நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் அரசு இயந்திரத்தைக் கடுமையாக சாடி இருந்தார். ஒரு அப்பாவி விஞ்ஞானியின் மீது கொஞ்சமும் பொறுப்பில்லாமல், அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல், சட்ட ஷரத்துகளின் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட பொய்வழக்கு என்று. மேலும் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகளையும் காவல் துறையினரையும் அவர்களின் துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாகத் தண்டிக்கவும் பரிந்துரை செய்திருந்தார் அவர்
தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடித்ததும் ஆதிராமன் செத்துப் போகவும் தயாராய் இருந்தார். தான் நிரபராதி என்று இந்த சமூகத்திற்கு நிரூபிக்கத்தானே இத்தனை நாட்கள் அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். ஆனாலும் ஆதிராமனின் குடும்ப வாழ்க்கை அவரின் தீர்ப்பு நாளுக்கெல்லாம் காத்திருக்காமல் ஏற்கெனவே இருண்டு போகத் தொடங்கி இருந்தது.
நீதிமன்றம் ஆதிராமனைக் குற்றமற்றவரென்று விடுதலை செய்து, என்ன புண்ணியம்? காலத்தின் கைமீறி என்னென்னவோ நடந்து விட்டதே! ஒரே செல்ல மகன் மனநிலை பிசகி, அப்பாவைத் தூக்கில் போடுங்கள் என்று பேதலித்த புத்தியுடன் பிதற்றிக் கொண்டு வீதிகளில் அலைந்தான். மகனின் பரிதாப நிலையைக் காண சகிக்காமல் முருகேஸ்வரி எப்போதோ தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயிருந்தாள்.
ஆதிராமன் உடல், மனம் எல்லாம் சோர்ந்து போய் வீட்டிலிருந்தபோது, அந்தப் பெண் அவரை அணுகினாள். துரு துருவென்று அலைபாயும் கண்கள் அவளுக்கு. பத்திரிக்கை அல்லது டீ.வி.யின் நிருபராக இருப்பாள் என்று நினைத்துச் சத்தம் போட்டார்.
“எத்தனை தரம் சொன்னாலும் ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேனென்று அடம்பி டிக்கிறீர்கள்? யாருக்கும் என்னால் பேட்டி தர முடியாது… போலீஸ்காரர்களை மட்டும் விசாரித்து ஏதோ மர்மக் கதை போலத் திரித்துத் திரித்து எழுதித் தானே என் மகனைப் பைத்தியமாக்கினீர்கள்; என் மனைவியை சாவை நோக்கித் தள்ளினீர்கள்; இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா? தயவு செய்து என்னைத் தனியாக விட்டு விட்டு வெளியே போய் விடுங்கள்…..” கை கூப்பி கெஞ்சினார்.
அவள் மிக அமைதியாகச் சொன்னாள்.”மன்னிக்க வேண்டும். நான் நீங்கள் நினைக்கிற மாதிரி நிருபர் இல்லை. உங்களின் மனவலிக்கு மருந்து போட வந்திருக்கிறேன். என் பெயர் காத்ரீனா. ஃபிரடெரிக் ஜோன்ஸ் என்னை உங்களிடம் அனுப்பி வைத்துருக்கிறார்…..” என்றபடி ஒரு மூடிய உறையைக் கொடுத்து பவ்யமாய் வணங்கி நின்றாள்.
உறையை உடைத்துப் படித்ததும் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் உறையை மூடினார் ஆதிராமன். உள்ளே ஆதிராமன் ஃபிரடெரிக் ஜோன்ஸின் ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்வதற்கான அப்பாயின்மெண்ட் ஆர்டரும், விசா விண்ணப்பத்திற்கான பேப்பர்கள் மற்றும் ஏர் டிக்கெட்டும் இருந்தன.
அந்த வெளிநாட்டுப் பெண்ணை உற்றுப் பார்த்தபடி சொன்னார் ஆதிராமன்.“மிஸ்டர் ஜோன்ஸிடம் சொல்லுங்கள்; அவர் கொடுத்த வேலையை நன்றியுடன் நான் ஒத்துக் கொண்டதாக. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கு வந்து நான் வேலையில் சேர்கிறேன். இந்த நன்றி கெட்ட தேசத்திற்கு விசுவாசமாக இருந்து, நான் அனுபவித்த பலன்கள் இந்த ஜென்மத்திற்குப் போதும்…” அவள் ஒரு துள்ளலுடன் கிளம்பிப் போனாள்.
காத்ரீனா தான் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலின் தனியறைக்குள் போய் தாழ் போட்டுக் கொண்டு தீப்பெட்டி சைஸிலிருந்த கைத்தொலைபேசியில் எண்களை ஒற்றி காதோடு வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் பேசினாள். “ஜோன்ஸ்; நம்முடைய ஆபரேஷன் வெற்றி! மிஸ்டர் ஆதிராமன் நம்முடைய தேசத்திற்கு வந்து வேலையில் சேர சம்மதம் தெரிவித்து விட்டார்…”
எதிர்முனையிலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் குரலிலேயே பொங்கியது.”வெரிகுட்; வெரிகுட்…. நீதான் இதை முடித்தாய். எல்லாப் புகழும் உனக்கே!”
“நான் என்ன செய்தேன் ஜோன்ஸ்! நீங்கள் போட்டுக்குடுத்த பாதையில் பயணம் செய்தேன்; ஆதியின் சக விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் அபாரமாய் ஒத்துழைத்து நம்முடைய வேலையை மிகச் சுலபமாக்கி விட்டார்கள்…..”
“அதுவும் சரிதான்; ஆதிதான் புவர் ஃபெல்லோ… அன்றைக்கே அவரை நம் ஆராய்ச்சி நிலையத்தில் வேலையில் சேர்ந்து விடும்படி எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர்தான் புரிந்து கொள்ளவே யில்லை. தேவையில்லாத சித்ரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்த பின்பே இறங்கி வந்திருக்கிறார். சரி இனியும் நீ அங்கிருப்பது அவசியமில்லை. நாம் அமைத்த குற்ற வியூகத்திற்கு உதவி புரிந்த எல்லோருக்கும் எலும்புத் துண்டு உண்டு என்று உறுதியளித்து விட்டு சீக்கிரம் இங்கு வந்து சேர்…. நான் அவர்களின் இரகசியக் கணக்குகளில் டாலர்களை வரவு வைத்து விடுகிறேன்….” கைத் தொலை பேசியை அணைத்து விட்டு காத்ரீனா தன் அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயுத்தமானாள்.
-- முற்றும்


Sunday, April 18, 2010

சிறுகதை - இவர்களும் சுவர்களும்


கடினமாக இருந்தாலும்
பெரும் போராட்டத்திற்கு பிறகாவது
வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி
விஸ்தீரணமாய் எழும்பி நின்ற
சாதீயச் சுவர்களை
உடைத்து விட்டோம் ; ஆனால்
மனவெளிகளில் மதிலுகளாய்
உயர்ந்து நிற்கும் உத்தப்புரச் சுவர்களை
உடைப்பது எப்போது....!

அங்கு மட்டுமா அந்தச் சுவர் என்னும் தலைப்பிட்டு இளமாறன் எழுதிய சிறு கவிதை அதிகம் பெயர் தெரியாத அந்த சிறுபத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவன் எழுதி அச்சில் வந்த முதல் கவிதை. ஒவ்வொரு எழுத்தாக வாசித்து மனசுக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான். இதை யாரிடமாவது வாசித்துக் காட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இந்த அலுவலகத்தில் யாருக்காவது கவிதை பிடிக்குமா என்பது பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. அப்போது ஆவுடையப்பன் இளமாறனுக்கு தேனீர் கொண்டு வந்தான்.
இளமாறன் தனக்குப் பரிமாறப்பட்டிருந்த தேனிரை மிகவும் ரசித்துக் குடித்தான். குடித்து முடித்ததும் ஆவுடையப்பனை மனதாரப் பாராட்டினான். “டீ போடுறதுல நல்லா தேறீட்ட ஆவுடையப்பா….நீ போடுற டீக்கு நான் அடிமை ஆகிக்கிட்டே வர்றேன்; இப்பல்லாம் காலையில நீ போட்டுக் குடுக்குற டீயக் குடிச்ச பெறகு தான் வேலையே ஓடுது….” என்றான்.
அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸரே மனதாரப் பாராட்டிய பின்பும் ஆவுடையப்பனின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் வாட்டமே மிகுந்திருந்தது. ”நீங்க பாராட்டுறீங்க; ஆனா மத்தவங்க…? இன்னைக்கும் யாரும் எதுவுமே குடிக்கல ஸார்; மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு…..” என்றான் அழுதுவிடுகிற தொனியில்.
“இதுல உன்னோட தப்பு எதுவுமில்ல ஆவுடை ; இது எனக்கும் அவங்களுக்குமுள்ள சின்ன ஈகோ பிரச்னை…சீக்கிரம் தீர்த்துடலாம்…. கொஞ்சம் பொறுமையா இரு…..”
“அது இல்ல ஸார்; இப்பவும் நாலஞ்சு நாளா இப்படித்தான் நடக்குது…. கலந்த காஃபி, டீயெல்லாம் ஒவ்வொரு நாளும் அப்படியே கீழ கொட்டும் போது தாங்க முடியல…. சாயங்காலமும் இப்படித்தான் ஆகுது; ஸ்நாக்ஸும் சாப்பிட மாட்டேங்குறாங்க…. எதுக்கு இந்தப் போராட்டம்? நான் வேணும்னா ஊருக்கே திரும்பிப் போயிடட்டுமா ….?”
“நோ நோ… அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாத ஆவுடை….” என்ற இளமாறன் திடீரென்று இவனிடம் காட்டினால் என்ன என்று எண்ணமிட்டபடி கவிதை வந்த இதழை அவனிடம் விரித்துக் காட்டி படித்துப் பார்க்கச் சொன்னான். “நீங்க எழுதுனதா ஸார்.... நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா ஸார்....” என்றபடி ஆர்வமாய் வாசிக்கத் தொடங்கினான். படித்து முடித்ததும் “எனக்கு சொல்லத் தெரியல்; ஆனா ரொம்ப நல்லா இருக்கு ஸார்....” என்றபடி காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு போனான்.
இன்றைக்கும் அலுவலகத்தில் யாருமே காஃபி, தேனீர் எதுவும் குடிக்கவில்லை. எல்லோருடைய மேஜைகளிலும் பீங்கான் கோப்பைகளில் பரிமாறப் பட்டிருந்த காஃபியும் தேனீரும் அலுங்காமல் குலுங்காமல் அப்படி அப்படியே வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த மூடிகளால் மூடப் பட்டிருந்தன. அவை குளீரூட்டப்பட்ட அறையின் குளிர்ச்சியில் வேக வேகமாய்த் தன் வெப்பத் தன்மையை இழந்து கொண்டிருந்தன.
இளமாறன் தன் அறை ஜன்னலில் தொங்கிய வெனீஸியன் பிளைன்டை விலக்கிப் பார்த்தான். அனைவரும் இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்து வேலைத் தளத்திற்கு வெளியே கீற்றுக் கொட்டகையில் இயங்கும் அவசர டீக்கடை நோக்கி மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சென்னையின் தலைமை அலுவலகத்திலிருந்து வைஸ்பிரஸிடென்ட் பிரபுபட்டேலின் வாகனம் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வாகனத்தை நிறுத்தி, கார்க் கண்ணாடியை இறக்கி விட்டு, கொத்துக் கொத்தாய்ப் போய்க் கொண்டிருப்பவர்களில் ஒருத்தனை அழைத்து அவர் ஏதோ விசாரிப்பதும், அவன் ஏதோ பதில் சொல்வதும், இங்கிருந்து தெரிந்தது. இன்றைக்கு கண்டிப்பாய் பிரச்னை வெடிக்கப் போகிறது என்று இளமாறன் நினைத்துக் கொண்டார். அவர்களும் இதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள்.
இது மிகச்சிறிய மார்க்கெட்டிங் அலுவலகம். 15 பேர் தான் வேலை பார்க்கிறார்கள் - இரண்டு பெண்களையும் சேர்த்து. சென்னையிலிருந்து 40கி.மீ.தூரத்தில் பிரதான சாலையிலிருந்து வெகுவாக தள்ளி பெரும் பசி கொண்ட நகரத்தால் வேக வேகமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில், சுற்றிலும் விவசாயம் செய்யப் படாமல் வெறுமனே போடப்பட்டிருக்கும் நிலங்களால் சூழப்பட்டு, புத்தம் புதுப் பொலிவுடன் இப்போது தான் கட்டிமுடிக்கப் பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது. சுற்றிலும் தரிசாகப் போடப்பட்டிருக்கும் நிலங்களில் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளும், ஐ.டி.பார்க்குகளும் கட்டப்போகிறார்கள். அவற்றை விற்பனை செய்வதற்கான அலுவலகம் தான் இது.
இந்த அலுவலகத்திற்கு ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்குத் தான் இளமாறனுக்கு சட்டென்று ஆட்கள் அகப்படவில்லை.எலக்ட்ரிக் வேலைகளுக்கு பக்கத்து கிராமத்திலிருந்து ஒருவனை நியமித்து விட்டான். இன்னொரு ஆள் வேண்டும். அவன் ஆல் ரவுண்டராக - ஆபிஸ் பையனாக, காஃபி, டீ கலந்து தருபவனாக, அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்குவனாக,முக்கியமாக தினசரி ஒருமுறையாவது கழிவறைகளைச் சுத்தப் படுத்துபவனாக - இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். எவ்வளவு முயன்றும் அப்படி ஓர் ஆள் அவருக்கு அகப்படவே இல்லை.
பக்கத்து கிராமத்திலிருந்து வேலை கேட்டு வருபவர்களும் கழிவறைகளைச் சுத்தப் படுத்த வேண்டுமென்று சொன்னதும் முகஞ்சுழித்துப் போய்விட்டார்கள். ஏதாவது ஏஜென்சியை நியமிக்கலாமென்றால் இரண்டே இரண்டு சிறிய கழிவறைகளை தினசரி ஒருமுறைச் சுத்தப் படுத்துவதற்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் வேண்டுமென்று கேட்டார்கள். சென்னையிலிருந்து தூர மென்றும், அக்கம் பக்கத்தில் வேறு அலுவலகம் ஏதும் இல்லாததால் இந்த வேலைக்கென்று தனியாக முழு நேரமாகத்தான் ஆட்களை நியமிக்க வேண்டுமென்றும் காரணம் சொன்னார்கள்.
ஒருமுறை நீண்ட இடைவேளைக்கப்புறம் இளமாறன் தன் சொந்த கிராமத்திற்குப் போயிருந்த போது சங்கரலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் இவர்களின் தோட்டத்தில் பண்ணையாளாக வேலை பார்த்தவர். இளமாறனின் அப்பா பெரியாரிடம் தீவிர ஈடுபாடு கொண்டவராய் இருந்ததால் ஜாதி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களின் வீடுகளில் சகஸமாகப் புழங்க அனுமதிக்கப் பட்டவர். இளமாறனை சிறு வயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர்.
“என் பையன் ஆவுடைக்கு ஏதாவது வழி பண்ணக் கூடாதா தம்பி? வேலை வெட்டி எதுக்கும் போகாம, ஊர்க் காரங்களோட சண்டையும் சச்சரவுமா அலையுறான். புதுசு புதுசா பிரச்னைகளையும் இழுத்து விட்டுக்கிறான்….கூப்பிட்டு கொஞ்சம் புத்தி சொல்லிட்டுப் போங்க தம்பி ; நீங்க சொன்னாக் கொஞ்சம் கேப்பான்….”.
உள்ளூர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்புறம் நான்குமைல் நடந்து போய்ப் பக்கத்து ஊரில் படிக்க பால்மாறிக் கொண்டு, படிப்பை எட்டாவதோடு நிறுத்திக் கொண்டு, காடுமேடுகளில் காலித்தனமாய் அவன் அலைந்து கொண்டிருப்பதாகவும், இப்போது ஒரு பெரிய பிரச்னையில் வேறு அவன் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
அவர்களின் ஊரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் வெகுவாகக் குறைந்து விட்டது என்றும், டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை எல்லாம் இல்லவே இல்லை என்றும் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அந்த செய்தியைப் படித்த கோடானு கோடிப்பேர் மனசுக்குள் சிரித்தபடி கடந்து போய்விட, ஆவுடையப்பனுக்கு மட்டும் பலியாய் கோபம் வந்திருக்கிறது.
அமைச்சரின் சொந்த கிராமத்திலேயே தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடுவதையும் , டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை இன்னும் அமலில் இருப்பதை ஆதாரங்களுடன் விவரித்தும், அவரின் மாவட்டத்தில் மட்டும் இன்னும் எங்கெல்லாம் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப் படுகிறது என்று ஒரு பெரும் பட்டியலையும் தயாரித்து அந்த செய்தி வந்த பத்திரிக்கைக்கே வாசகர் கடிதமாக எழுதி விட்டான்.
எதிர்க் கட்சிக்கு ஆதரவான அந்தப் பத்திரிக்கைக்காரனுக்கு இந்த விஷயம் லட்டு மாதிரி. அவனுடைய பத்திரிக்கையிலேயே குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர வேறு யாரும் உள்ளே போய் எட்டிப் பார்த்துவிடக் கூட முடியாது; ஆனாலும் அவர்கள் ஏதோ ஜாதிக்கு எதிரிகள் மாதிரி பாய்ந்து கொண்டு, தங்களுடைய நிருபரை அனுப்பி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கவைத்து ஆவுடையப்பனைப் பேட்டி கண்டு நீண்ட கட்டுரையாக எழுதி முதல் பக்கத்திலேயே

அமைச்சரின் ஊரிலேயே தீண்டாமைக் கொடுமைகள்; டீக்கடைகளில் இன்னும் தொடரும் இரட்டை டம்ளர் அவலம்

என்று கொட்டை எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டு விட அமைச்சருக்கு மானமே போய்விட்டது. அன்றைக்கிலிருந்து அமைச்சரின் உறவினர்களும் கட்சிக்காரர்களும் ஆவுடையப்பனுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். தகுந்த வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டார்கள் என்பதால் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான்.
இளமாறன் ஆவுடையை அழைத்துப் பேசினான்.
”எங்க அப்பன் தலையால அடிச்சிக்கிச்சு படிக்கச் சொல்லி…உங்கள மாதிரி நானும் ஒழுங்காப் படிச்சிருந்தா இந்தப் பாழாப்போன ஊரை விட்டுப் போயி கௌரவமா பொழச்சிருக்கலாம்……. உலகம் எங்கயோ போயிட்டுருக்கு; ஆனால் இன்னும் நம்ம மாதிரி கிராமங்கள்ல, அய்யா, சாமின்னு துண்டை எடுத்து கக்கத்துல வச்சுக் கூழைக் கும்புடு போட்டுக்கிட்டு, குடியான வங்க குண்டியைத் தாங்கிக்கிட்டு அடிமையா வாழ வேண்டியிருக்கு..! இதெல்லாம் மாற இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆகணுமோ?” என்றான் விசனத்துடன்.
“ஜாதிங்கிறது நம்ம இந்திய சமுதாயத்தோட இரத்தத்துலயே இருக்குற வியாதி ஆவுடை… கிராமங்கள்ல மட்டுமில்ல; பட்டணத்துலயும் கண்ணுக்குத் தெரியாம இருக்கத் தான் செய்யுது….” என்று அவனை ஆறுதல் படுத்த முயன்றான் இளமாறன்.
“அங்கெல்லாம் இலைமறை காய்மறையா இருக்கலாம் ஸார்; ஆனா கிராமங்கள்ல தான் வெட்ட வெளிச்சமா எந்த குற்ற உணர்ச்சியுமில்லாம பிறந்த ஜாதிக்காக ஒரு கூட்டம் பெருமைப் பட்டுக்கிட்டும் இன்னொரு கூட்டத்த சிறுமைப் படுத்திக் கிட்டும் இருக்காங்க…. என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுங்களேன் ஸார்….. ஆப்புட்ட வேலை செஞ்சு பொழச்சுக்கிறேனே….”
இளமாறனுக்கு தன்னுடைய புது அலுவலகத்திற்கே ஒரு ஆள் தேவை என்பது உறைக்க உடனே சரி என்றான். வேலை பற்றியும் விவரித்தான்.”பட்டணத்துக்குக் கூட்டிட்டு வந்து நம்மல இப்படி கக்கூஸ் கழுவ விட்டுட்டானே நம்ம ஊர்க்காரன்னு என்மேல வருத்தப் படக் கூடாது ஆவுடை… உன் மனசுக்கு ஒப்புச்சுன்னா மட்டும் என்கூட கிளம்பி வா…நாளைக்கே போகலாம்….”
“எந்த வேலையும் எனக்குச் சம்மதந்தான்… இப்போதைக்கு இந்த சனியம்புடிச்ச ஊருலருந்து தப்பிச்சுப் போனாப் போதும்….” என்று சொல்லி மாறனுடன் கிளம்பி வந்து விட்டான்.
வேலை எளிமையாகவும் சந்தோஷமாகவுமே இருந்தது. காலையில் ஆவுடைதான் அலுவலகத்தைத் திறந்து வைத்து, மேஜை நாற்காலிகளைத் துடைத்து, அறைகளையும் பெருக்கி, கழிவறைகளையும் சுத்தப் படுத்தி அலுவலகத்தை தயார்ப் படுத்துவான். காலை 10மணிக்கு ஒரு முறையும் மாலை 4 மணிக்கு இன்னொரு முறையும் எல்லோருக்கும் காஃபி, டீ கலந்து தருவான். அப்புறம் நகல் எடுப்பது, கேட்பவர்களுக்கு வெளியில் போய் சாப்பாடு வாங்கி வருவது என்று அவ்வப்போது இடப்படுகிற வேலைகளையும் சுணங்காமல் செய்வான். பத்து நாட்களுக்கு மேல் எந்தப் பிரச்னையுமில்லாமல் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தது.
ஒருநாள் மிகச் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்ட கோபாலன், ஆவுடையப்பன் கழிவறைகளை கழுவுவதைப் பார்த்ததும் பதறிப் போய் விட்டான். அவனிடம் எதுவும் சொல்லாமல் இளமாறன் வந்ததும் அவருடன் சண்டைக்குப் போனான்.
“என்ன அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸர் நீங்க? கக்கூஸ் கழுவுறவனையா காஃபி டீ கலந்து கொடுக்குச் சொல்றது….”
“ஏன் இதிலென்ன தப்பு? ஒவ்வொண்ணுக்கும் தனித் தனியா ஆள் போடுறதுக்கு இதென்ன அவ்வளவு பெரிய ஆபிஸா என்ன?” என்று கேட்டான் மாறன்.
“அதெப்படி, கக்கூஸ் கழுவுறவன், காஃபி டீ கலந்து கொடுத்தா அது ஹைசீனிக்கா இருக்குமா என்ன!”
“ஏன் இருக்காது? நீங்க எல்லாம் கக்கூஸ் போயி கழுவிட்டு அப்புறம் காபி டீ குடிக்கிற தில்லையா? அல்லது சாப்புடுறது தான் இல்லையா?”
“இது விதண்டாவாதம்! நானும் அவனும் ஒண்ணா உங்களுக்கு? நான் கக்கூஸ் உள்ள போயிட்டாளே, சோப்புப் பட்டு கம்பிளீட்டா கழுவிட்டுத்தான் வெளியவே வருவேன்; அதே அளவுக்கு சுத்தமும் அக்கறையும் இவன்கிட்ட எதிர்பார்க்க முடியுமா? கண்டதையும் ஒழப்பிட்டு அப்படியே வந்து காஃபி டீ கலந்து குடுத்துட்டான்னா, அதை குடிக்குற நம்மளோட ஆரோக்கி யத்துக்கு யாரு பொறுப்பு?” என்று சீறினான்.
“இங்க பாருங்க கோபாலன்; தேவை இல்லாம பிரச்னை பண்ணாதீங்க… அவன் எட்டாவது வரைப் படிச்சிருக்கான்; சுத்தம் பத்திய அடிப்படையான விஷயங்கள் அவனுக்கும் தெரியும்; நானும் அவனைக் கண் காணிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்; அதனால நீங்க பதட்டப் படுற மாதிரி எதுவும் நடந்துடாது…” இளமாறன் பொறுமையாய் எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானமாகாமல் திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். கக்கூஸ் கழுவுகிறவனை காஃபி, டீ, கலந்து கொடுக்க அனுமதிக்கக் கூடாது என்று.
இளமாறனுக்கு கோபம் வந்து விட்டது. “””’”உங்களுக்கு இதுல இஷ்டமில்லைன்னா, அசூசையா ஃபீல் பண்ணீங்கன்னா நீங்க வேணு மின்னா ஆபிஸ்ல எதுவும் குடிக்காம இருந்துக்குங்க…..” என்றான் வெடுக்கென்று. அவனும் கோபமாய் முறைத்து விட்டுப் போய் விட்டான். அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றவர்களிடமும் சொல்லி, அவர்களுக்கும் பீதியைக் கிளப்பி விட்டு எல்லோரும் ஆவுடையப்பனைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டார்கள் மௌனமாய்.
எதிர்பார்த்தபடி வைஸ்பிரஸிடென்ட் அனைவரையும் ஒரு அவசர மீட்டிங்கிற்கு அழைத்தார். நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “இளமாறன் என்னப்பா இதெல்லாம்? ஸ்டாஃப் வெல்பேர் அரேன்ஞ்மென்ட் இவ்வளவு மோசமாவா பண்றது? ஹைஸீனிக்கா இருக்காதுன்னு ஃபீல் பண்ணாங்கன்னா ஆள மாத்துறத விட்டுட்டு இதென்ன அக்கப்போர்….?”
“ஸார், மன்னிக்கனும்; இது ஹைஸீனிக் சம்பந்தப்பட்ட பிரச்னை இல்ல. அதுதான் உண்மையின்னா இப்ப இவங்கல்லாம் காஃபி, டீ, குடிக்கிற கீத்துக் கொட்டகை ஓட்டலுக்குள்ள ஒரே ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வாங்க….ஈயும் எறும்புமாய் எவ்வளவு அருவருப்பா இருக்குன்னுட்டு… அதுமட்டுமில்ல; அங்க ஒரே வாளி தண்ணில தான் காலையிலருந்து இராத்திரி வரைக்கும் எச்சிக் கிளாஸ முக்கி முக்கி கழுவுறதா பேர் பண்றாங்க…. பார்த்தாலே குமட்டலெடுக்கும் அந்த சூழல்ல எப்படி சந்தோஷமாக் குடிக்குறாங்க?” என்றான் இளமாறன்.
வீ.பீ. கோபாலனைப் பார்த்தார். “எங்களுக்கு வேற வழி இல்லாததால தான் அங்க போய்க் குடிக்குறோம் ஸார்…பிரச்னையையே புரிஞ்சுக்க மாட்டங்கறார் ஸார்…” என்றான் அவன்.
“என்னோட சின்ன வயசுல எங்க கிராமத்துப் பள்ளிக் கூடத்துல சத்துணவு சமைக்கிறதுக்கு ஒரு தலித் பெண்ண நியமிச்சார் ஹெட்மாஸ்டர்….ஊர்க்காரங்கல்லாம் ஒண்ணாச் சேர்ந்துக் கிட்டு தங்கள் பிள்ளைகள சாப்பாடு வாங்க அனுப்பாமப் புறக்கணிச்சாங்க….ஒரு தலித் சமைச்சத தாங்கள் சாப்பிடுறதாங்கிற ஜாதித் திமிர் அது…. அதேதான் இங்கேயும் நடக்குது; படிச்ச பட்டணத்துக் காரங்களுக்கும் படிக்காத கிராமத்துக்காரங்களுக்கும் ஜாதி பார்க்குறதுல மட்டும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லன்னு நிரூபிக்கிறாங்க….” என்றான் இளமாறன்.
கோபாலன் அவசரமாய் இடை மறித்தான். “எல்லாத்துலயும் ஜாதிக்கண்ணாடி மாட்டிக்கிட்டு குதர்க்கமாப் பார்க்காதீங்க ஸார்.. ஆவுடையப்பன் என்ன ஜாதீன்னு இதுவரைக்கும் எங்க யாருக்கும் தெரியாது; அதைப் பத்தி எங்களுக்கு அக்கறையும் இல்ல…. ரெண்டு வேலையையும் ஒருத்தரே செஞ்சா கண்டிப்பா ஹைஸீனிக்கா இருக்காதுன்னு நெனைக்கிறோம்; அதான் எதிர்க்குறோம்…”
“என்ன கோபாலன் ஹைஸீனிக் ஹைஸீனிக்குன்னு ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க; அவன் என்ன கைய உள்ளவுட்டா கக்கூஸ் கழுவுறான்….எல்லா வேலைக்கும் டூல்ஸ் இருக்கு; ஸொலுசனைத் தெளிச்சு, பிரஸ்ஸால தேய்ச்சு,ஃபிளஸ்ஸவுட்ட திறந்துவிட்டா கிளீனிங் முடிஞ் சது…கையில கிளவுஸ் மாட்டிருக்கான்; முகத்துலயும் கவசம் அணிஞ்சுதான் வேலை பார்க்குறான்… இதுல எங்கருந்து ஹைஸினிக் பிராப்ளம் வருதுசொல்லுங்க… நம்ம வீடுகள்ள எல்லாம் நம்ம பொண்ணுங்க கழிவறைய கிளீன் பண்ணீட்டு வந்து சமையல் கட்டுல வேலை பார்க்குறதில்லையா? அவங்க சமைச்சத நாம சாப்புடுறதுதான் இல்லையா?
ஆவுடையோட ஜாதி என்னன்னே தெரியாதுன்னு அப்படியே அப்பாவி மாதிரி பேசறீங்களே! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க…. கக்கூஸ் கழுவ சம்மதிச்சு வர்றாங்கன்னாலே அவங்க தலித் ஜாதியாத் தான இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? அந்த அடிப்படையில தான அவன் காஃபி, டீ, கலந்து தர்றத எதுக்குறீங்க…?” இளமாறன் நீளமாய்ப் பேசிக் கொண்டே போக வீ.பி. இடையில் புகுந்தார்.
“இளமாறன் உங்க லெக்சரக் கேட்க இப்ப நாம கூடி இருக்கல! அதோட இதை ஜாதிப் பிரச்னையா நீங்க மாத்த முயற்சி பண்ணாதீங்க…. நம்ம வீடுகள்ளயே ஒரே ஓவர்ஹெட் டேங்க்லருந்து தான் சமையலறைக்கும் தண்ணி வர்றது; கழிவறைக்கும் வர்றது; சமையலறை குழாய்லருந்து ரெம்ப சாதாரணமா தண்ணி புடிச்சுக் குடிப்போம்; ஆனால் கழிவறை குழாயிலருந்து தண்ணி புடிச்சுக் குடிக்க நமக்கு மனசு ஒப்புமா? அசூசையா ஃபீல் பண்ணுவமா இல்லையா? அது ஹுமன் சைக்காலஜி அவ்வளவு தான்; இங்கயும் அதுதான் பிரச்னைன்னு நான் நெனைக்கிறேன்…அதனால ரெண்டு வேலையையும் ஒருத்தன செய்ய விடாதீங்க; பிரிச்சுடுங்க….” என்றார் தீர்மானமாய்.
“சரி ஸார்; இன்னையிலிருந்து ஆவுடையப்பன் காஃபி, டீ மட்டும் கலந்து குடுப்பான்; கக்கூஸ் கழுவுறதுக்கு நான் வேற ஆள் ஏற்பாடு பண்ணிக்குறேன்….” என்றான் இளமாறன்.
அவசரமாய் ஆட்சேபித்தான் கோபாலன் “நோ…நோ…அதெல்லாம் சரியா வராது ஸார்; ஆவுடை கக்கூஸ் வேணா கழுவட்டும்….காஃபி, டீ கலக்குறதுக்கு வேற ஆள் போடச் சொல்லுங்க…”
“ஏன் ஸார் அப்படி….” சிரித்தபடி கேட்டான் இளமாறன்.
“பொதுவாவே அவங்க சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குறத எப்படி ஸார் எல்லோரும் குடிக்க முடியும்?”
இளமாறனுக்கு ஆக்ரோஷமாய்க் கோபம் வந்தது. அப்படியே பொங்கினான். “ஏன் ஸார் இப்படி இருக்கிறீங்க? இதை நான் தான் ஏதோ வலிஞ்சு ஜாதிப் பிரச்னையா மாத்திறேன்னு சொன்னீங்களே, பார்த்தீங்களா ஸார் இவரோட அடி மனசோட விகாரத்த…இப்படித் தான் அர்த்த மில்லாம எதையாவது சொல்லி காலங்காலமா அவங்கள ஒதுக்கி வைச்சுருக்கோம்…. அவங்க குளிச்சு சுத்தபத்தமா இல்லாததால தான் கோயிலுக்குள்ள விடுறதில்லைன்னு அபத்தமா சொல்லிக்கிட்டும் திரியறோம்….என்ன கொடுமை ஸார் இதெல்லாம்…!
உத்தப்புரம்ங்குற கிராமத்துல தீண்டாமையின் சின்னமா இருந்த ஒரு நீண்ட சுவரக் கண்டுபிடிச்சு ரொம்பப் பெரிய போராட்டத்துக்கப்புறம் அதோட ஒரு சிறு பகுதிய அரசாங்கம் தலையிட்டு உடைச்சிருக்காங் களாம்…நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க, அந்த மாதிரிச் சுவர் அங்க மட்டுந்தான் இருக்கா? அந்த உயர் ஜாதி மனோபாவமும் அகம்பாவமும் நம்ம எல்லோருடைய உள்ளுணர்வுலயும் இல்லையா? அதனால தான தலித்துகள்னா சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குற காஃபி, டீ எல்லாம் ஹைஸீனிக்கா இருக்காதுன்னு கண்டபடி கதை கட்டிக்கிட்டு அவங்களத் தொட்டா தீட்டு பார்த்தா பாவம்னுட்டு ஒதுக்கி வச்சுக்கிட்டு இருக்குறோம்….” மூச்சு விடாமல் பேசியதும் அந்த இடத்திலிருந்து எழுந்து கோபமாய் வெளியேறினான் இளமாறன். அடுத்த நாள் இளமாறனும் ஆவுடையப்பனும் அந்தக் கம்பெனி வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

-- முற்றும்