Monday, September 13, 2010

கல்கியில் எனது கவிதை:

தூக்கம் இழந்த பொம்மைகள்

இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!

பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்....!

பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;

ஆசிரியையாக
பாடம் சொல்லித் சொல்வாள்;

பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;

தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்......!

விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்.....

இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி.......!

(நன்றி: கல்கி 12.09.2010)