Friday, December 18, 2009

மூன்று கவிதைகள்

நவீன தாலிகள்
நவீன பெண்களுக்குத் தான்
எத்தனை எத்தனை தாலிகள்!

கம்பீரமாய் கழுத்தில் தொங்கும்
கம்பெனியின் அடையாள அட்டை;
மாலையாய்த் தழுவி
மனதை நிறைக்கும் கைத்தொலைபேசி!

மருத்துவரென்றால் ஸ்டெத்தாஸ்கோப்;
கணிணி நிபுணி என்றால்
கழுத்திலொரு ஈ.பேனா
இன்னும் என்னென்னவோ
அத்தனையையும் சுமக்கிறார்கள்
அலாதியான சந்தோஷங்களுடன்....!

புருஷர்கள் அணிவிக்கும்
பொன் தாலிகள் தான்
காலத்திற்கும் கனக்கும் நகரவிடாமல்.....!
யானைகளுக்கு அங்குசங்கள்;
நம் பெண்களுக்கு
தாலி என்னும் மஞ்சக்கயிறு!

விக்கல்; சில நினைவுகள்

தலையில் தட்டவும் யாருமற்ற
தனிமையில் இரையெடுக்கும் போது
முதல் கவளம் சோறே விக்கிற்று!
சிறுவயதில் அடிக்கடி விக்கும்;
அப்போதெல்லாம்
ஆறுதலாய் தலையில் தட்டி
அன்பாய் சொல்வாள் அம்மா
'உன்னை யாரோ நினைக்குறாங்கடா'!
இப்போது.....
யாரிருக்கிறார் நினைப்பதெற்கு?
ஞாபக அடுக்குகளில் துழாவினால்
பெருமூச்சே மிஞ்சிற்று!

பால்யகால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளொன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே....
பாடியதோடு கலைந்து போயிற்று !

கல்லூரி கால நட்போ
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா; எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகி
வருஷத்துக் கொருமுறை
வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!

அலுவலக உறவுகளெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்;
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்....

சொந்தம் சுற்றமெல்லாம்
சடங்கு சம்பிரதாயங்களில்
முடங்கிப்போய் வெகு நாளாயிற்று!

இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
யாரும் யாரையும்
நெஞ்சார்ந்து நினைப்பதற்கு நேரமேது?

எதிரெதிர் இலக்குகள்

அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில் நமது இலக்குகள்!

ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய் நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது அவரவர் இலக்கை.....?

சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்.....!

No comments:

Post a Comment