Friday, January 29, 2010

கவிதை: முதுமை; சில முறையீடுகள்

முடியில் சாயம் பூசி கறுப்பாக்கலாம்;
முகச் சுருக்கங்களை
கிரீம்களில் அழுத்தி மறைக்கலாம்;
விரட்டலாம் முதுமையின் வீச்சங்களை
வாசணை திரவியங்கள் தெளித்து....
இஸ்திரி போட்ட உடைகளை இன்பண்ணி
இளமையாய் தோற்றமளிக்கலாம்;
வாலிபத்தைப் பெண்களிடம் நிரூபிக்க
லேகியங்கள் கிடைக்கின்றன நிறையவே!
ஆயினும்
ஞாபக அடுக்குகளில்
குவிந்து கொண்டிருக்கும் குப்பைகளும்
துடைக்கத் துடைக்க பெருகும்
தூசுகளும்
கடந்த காலங்களின் வயதைக்
காட்டிக் கொடுத்து விடுகின்றனவே
எப்படி மறைத்தாலும்.......!

Tuesday, January 19, 2010

சாருநிவேதிதாவிற்கு ஒரு மின்மடல்

அன்புள்ள சாரு,

வணக்கம். என் பெயர் சோ.சுப்புராஜ். இணையத்தில் நீங்கள் எழுதுபவைகளை ஒன்று விடாமல் வாசித்து விடுகிற வாசகன். இன்றைக்கு உங்களின் வாசகர் கடிதங்களுக்கு பதில் எழுதும் போது குங்குமம் உங்களை அவமானப் படுத்தி விட்டதாகவும் அந்தப் பத்திரிக்கை சில மளிகைப் பொருட்களுடன் தன்னுடைய பிரதிகளையும் வினியோகித்தது என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்; அதை நான் மிகவும் ரசித்தேன். நான் கூட அந்த இலவச விநியோகங்களைப் பற்றி ஒரு கவிதை எழுதி, அது 2006ம் வருஷத்தில் கீற்று மற்றும் திண்ணை இணைய இதழ்களில் பிரசுரமாகி இருந்தது. அந்தக் கவிதை உங்களின் நகைச் சுவையை வாசித்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

அந்தக் கவிதையை கீழே தருகிறேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

இலவசங்கள்

சமைக்க மசாலாக்கள்
சல்லாபிக்க காண்டம்கள்
சருமத்திற்கு களிம்புகள்
முகத்திற்கு பௌடர்
முலை வளர மூலிகைகள்
குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள்
பற்பசைகள்; தலைவலித் தைலங்கள்
மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும்
தீட்டுத் துணி பொட்டலங்கள்;
இன்னும் என்னென்னெவோ
எல்லாம் கிடைக்கும்
எங்கே? புத்தகக் கடைகளில்; அதுவும்
குறைந்த விலைகளில் கூடவே
மெலிந்த தமிழிதழ் ஒன்றும்
தருவார்கள் இலவசமாய்.....
வாசிக்க ஒன்றும் தேறாது; ஆயினும்
வாங்கி வர மறக்காதீர்கள்
குழந்தைகளின் மலந்துடைத்து
குப்பையில் வீச
உதவும் உத்திரவாதமாய்.......!

அன்புடன்
சோ.சுப்புராஜ்

Saturday, January 16, 2010

சிறுகதை - வலி உணர்ந்தவன்

கல்லூரிகள் எல்லாம் திறந்து ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, யூனிபார்ம் களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம் பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப் போய்க் கொண்டருக்க, அல்லது கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, இவற்றில் எதிலும் கலந்து கொள்ளாமல் பூக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப் பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது.
அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப் பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் இன்னும் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை படித்தது போதுமென்று நிறுத்தி விட்டார்களா? மனசுக்குள் உழலும் கேள்விகள் இவாஞ்சலினுக்கு மிகவும் கவலை யளித்தன. பூக்காரம்மாளிடம் இது பற்றி விசாரிக்கலா மென்றால், இப்போதெல்லாம் அவளைப் பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க் குழாயில் சந்தித்து கூட ரொம்ப நாளாகி விட்டது.
இவாஞ்சலினின் வீடு வாஸ்து சாஸ்திரக்காரர்கள் பயமுறுத்தும் தெருப்பார்வையில் அமையப் பெற்றது. அந்த வீட்டிற்கு நேர் செங்குத்தாக விரியும் தெருவின் இறுதியில் குறுக்காக வரிசை பிடித்து தீப்பெட்டிகளாக அடுக்கப் பட்டிருக்கும் ஓடு வேய்ந்த வீடொன்றில் தான் பூக்காரம்மாவும் அவளின் குடும்பமும் வாடகைக்கு வசிக்கிறது. அவர்களின் காம்பௌண்ட்டிற்கு வெகு அருகாமையில் தான் நகராட்சிக் காரர்கள் அமைத்திருக்கும் தெருக்குழாயும் இருக்கிறது.
பூக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு இலேசான பழக்கந்தான். எப்போதாவது தெருக்குழாயில் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் சிரித்துக் கொள்வார்கள்; அதிகாலையில் எழும்பி கோயம்பேடு மார்க்கெட்டிற்குப் போய் மொத்தமாய் பூ வாங்கி வந்து அதை சரமாய் தொடுத்து விற்பது தான் அவளின் பிரதான தொழில். இவாஞ்சலின் எப்போதாவது பூக்கேட்டால் தன் நீளமான கையினால் தாராளமாய் முழம் போட்டு ஒரு புன்னகைக் கீற்றையும் பூவுடன் ஒட்டவைத்துக் கொடுப்பாள். இவாஞ்செலினும் பேரம் எதுவும் பேசாமல் வாங்கிக் கொள்வாள்.
பூக்காரம்மாள் பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக, கருப்பென்றுசொல்லிவிடமுடியாத மாந்தளிர் நிறத்தில்,மினுமினுக்கிற தேக அழகுடன் இருப்பாள். அவளை மூன்று பிள்ளைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இதற்கு நேர்மாறாக அவளின் புருஷன் அடர்த்தியான கருப்பில் கட்டை குட்டையாக….கொஞ்சம் தவங்கித் தவங்கித் தான் நடப்பான். இருவரையும் ஒன்றாய்ச் சேர்த்து வாழ வைத்தது எந்த விதியோ என்று அவ்வப்போது தனக்குள் அங்கலாய்த்துக் கொள்வாள் இவாஞ்சலின்.
அன்றைக்கு இரண்டு குடங்களைத் தண்ணீர்க் குழாயில் வைத்து விட்டு தன்முறை வருவதற்கு கொஞ்சம் நேரமாகுமென்று தோன்றியதால் சமையலறையில் கைவேலையாக இருந்தாள் இவாஞ்சலின். வாசல் கேட்டை யாரோ கிணுக்குவது கேட்டு வெளியில் வந்து பார்த்தாள். இவளுடைய காலிக் குடங்களை கைகளில் வைத்துக் கொண்டு பூக்காரம்மாள் நின்று கொண்டிருந்தாள்.
“ரொம்ப நேரமா காலிங்பெல் அடிச்சடிச்சுப் பார்த்தேன்; சத்தமே கேட்கல; அதான் கேட்டை ஆட்டினேன்…..” வருத்தம் தொனிக்கிற குரலில் பேசினாள் அவள்.
“ஆமாங்க, கொஞ்ச நாளாவே காலிங் பெல் வேலை செய்யல; ரிப்பேர்ப் பண்ணச் சொன்னா இவர் சாக்குப் போக்குச் சொல்லி காலங் கடத்திட்டு இருக்கார்….அதுக்குள்ளயா தண்ணி நின்னு போச்சு?”
“இன்னைக்கு என்னன்னு தெரியல, சீக்கிரமே நின்னு போச்சு; எல்லாரும் அவங்கங்க கொடத்த எடுத்துட்டுப் போயிட்டாங்க….உன் கொடம் மட்டும் தனியாக் கெடந்துச்சு; எவளாவது லவட்டிக்கிட்டு போயிடப் போறாளேன்னு தான் கொண்டு வந்தேன்….” சிரித்தபடி சொன்னாள் பூக்காரம்மாள். இவாஞ்சலினுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பட்டணத்தில் இப்படியும் மனிதர்களா?
“இதென்ன தங்கமா, பித்தளையா திருடு போறதுக்கு? எவர் சில்வர் தான! உங்களுக் கெதுக்குங்க சிரமம்?” குடங்களைப் பெற்றுக் கொண்டு “வீட்டுக்குள்ள தான் வாங்களேன்…”என்றாள்.
“இல்லை தாயி நெறைய வேலை இருக்கு; எனக்கும் இன்னைக்கு ஒரு கொடம் கூடத் தண்ணி கெடைக்கல; அடிபம்ப்புலப் போயித் தான் அடிச்சிட்டு வரணும்…..நீயும் வர்றீயா?”
“அய்யோ நான் வரலைங்க; அவ்வளவு தூரத்துலருந்து என்னால தூக்கிட்டு வரமுடி யாது. அதோட அந்தத் தண்ணி அவ்வளவு நல்லாவும் இருக்காது; நாங்க கேன் தண்ணி வாங்கிக்கு வோம் …. “ என்ற இவாஞ்சலின் “ அப்புறம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்னு நெனச்சிருந்தேன்; நல்லாப் படிக்கிற உங்க பொண்ணோட படிப்ப ஏன் பாதியிலயே நிறுத்தீட்டீங்க? ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சுருக்கலாமில்ல…..!” என்றாள்.
பூக்காரம்மாளின் கண்களில் நீர் திரையிட்டது. “அந்தக் கொடுமைய ஏன் தாயி கேட்குற…..?” என்றபடி வாசல்படியில் கால் நீட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள். “என் பொண்ணு பத்தாப்புல நானூத்தி பதிநாலு மார்க்கு ; நம்ம தெருவே மூக்குல விரல் வச்சு சந்தோஷப் பட்டுச்சு; நான்தான் ப்ளஸ் டூ சேர்க்குறதுக்கு கவர்மெண்ட் பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன்; என்ன குரூப் வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்கு சொல்லத்
தெரியல! உன்னை மாதிரி விஷயம் தெரிஞ்ச மகராசி யாரையாச்சும் கூட்டிட்டாவது போயிருக்க லாம்; அப்பத் தோணாமப் போயிடுச்சு….
’ஏழை வீட்டுப் புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; உங்களுக்குக் கோடி புண்ணியம் கெடைக்கும்’ன்னு அவங்ககிட்டயே பொறுப்பக் குடுத்தேன். அவங்கதான் ஏதோ பேசன் டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்; ப்ளஸ் டூ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக் கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம் தான் அந்தப் படிப்போட வண்டவாளம் தெரிஞ்சுச்சு, வேலையும் கிடைக்கல; ஒரு மண்ணும் கிடைக்கல……
அந்தப் படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக் குரூப்ப மூடச் சொல்லீருச்சாம்; அப்படி மூடிட்டா எங்க அதைச் சொல்லிக் குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப் போயிருமோன்னு பயந்துக்கிட்டு கூட்டுக் களவாணி வாத்திமாருங்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துக் கிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை வீட்டுப் புள்ளைங்கள அமுக்கி அந்தக் குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்; இந்த உண்மையெல்லாம் இப்பத்தான் தெரியுது, என்ன செய்றது?
அந்தப் படிப்புலயும் கண்ணும் கருத்துமாப் படிச்சு ஆயிரத்துச் சொச்சம் மார்க் வாங்கி யிருந்தா என் பொண்ணு; சரி இன்னொரு மூனு வருஷம் வாய, வயிறக் கட்டி ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சா அது பொழைப்ப அது பார்த்துக்கிடட்டும்னு காலேஸ் தேடுனா, அக்கம் பக்கத்துல எந்தக் காலேஸுலயும் அந்தப் படிப்பு தட்டுப் படல: பெரிய பெரிய பணக்காரங்க படிக்கிற தனியார் காலேஷுல தான் அது இருக்காம்! அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போறது? அதான் போட்டோக் கடையில வேலைக்குப் போயிக்கிட்டு இருக்காள்…. எல்லாம் விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான் கெளம்புறேன்” என்றபடி எழுந்து போனாள்.
அன்றைக்கு இரவே அருள்தாஸிடம் சொன்னபோது அவனுக்கும் ஆத்திரம் பொங்கியது. “நானூறுக்கு மேல மார்க் எடுத்த பொண்ணுக்கு ஃபேஷன் டிசைன் குரூப் குடுத்தாங்களா? அந்த வாத்திமாருங்கள எல்லாம் நிக்க வச்சு சுடணும்! காலேஷுல போயி அந்தப் படிப்பப் படிச்சாலும் இந்தப் பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்! அதுக்கெல்லாம் கத்தை கத்தையா பணமிருந்தால் தான் முடியும்….” என்றான்.
அப்புறம் “வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச் சொல்லலாம்…..” என்று அவன் சொல்லவும் அவள் மலர்ந்து, “ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா….?” என்றாள்.
“அது சாத்தியமில்லப்பா…. ப்ளஸ் டூ ல மேத்ஸ்,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத் தான் இரண்டாவது வருஷத்துல சேர முடியும்; இந்தப் பொண்ண எஸ்.எஸ்.எல்.சி. மார்க்க வச்சு முதல் வருஷத்துல தான் சேர்த்து விடணும்…..” என்றான். “அப்ப ரெண்டு வருஷப் ப்ளஸ் டூ படிப்பு பாழ் தானா! சரி நான் நாளைக்கு அவங்க கிட்டப் பேசிப் பார்க்குறேன்…”என்றாள்.
அடுத்த நாள் பூக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப் பேசிய போது,”எனக்கென்னம்மா புரியுது இதெல்லாம்! நான் என் பொண்ணையே கூட்டிட்டு வாறேன்; அவள் கிட்டயே பேசு….” என்றபடி உடனே ஓடிப்போய் தன் பெண்ணை அழைத்து வந்தாள்.
அந்தப் பெண் நிறத்திலும் முக வார்ப்பிலும் அவளின் அப்பாவைப் போல் இருந்தாலும் பூக்காரம்மாவைப் போலவே சித்துப் பெண்ணாக பர்க்க லட்சணமாக இருந்தாள்.”உன் பேரென்னம்மா…? “ என்றாள் இவாஞ்சலீன் அவளின் தலையை வாஞ்சையாய் வருடியபடி. இத்தனை நாளில் இந்தப் பெண்ணின் பேரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள் அவள்.
“சுகந்தி ஆண்ட்டி….”என்று அவள் சொல்லவும், “அழகான பேரா இருக்கே, யாரு வச்சது?” என்றாள் இவாஞ்சலீன். “அவங்க அப்பாரு வச்ச பேரு தான்; நல்ல ரசணையான மனுஷன் தான்; இப்பத்தான் எதுக்கும் பிரயோசணமில்லாமப் போயிருச்சு ….” என்றாள் பூக்காரம்மாள் கண்களில் மின்னும் காதலுடன்.
“உன்னோட பிளான் என்ன சுகந்தி? போட்டோக் கடையிலேயே இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேலை பார்த்துட முடியும்னு நெனைக்குற?” என்று கேட்டாள் இவாஞ்சலின்.
“தெரியல ஆண்ட்டி; ஓடுற வரைக்கும் ஓடட்டும்…. கூடவே கரஸ்பாண்டன்ஸ்ல ஏதாவது படிக்கலாம்னு நெனைச்சிருக்கேன். வேறென்ன பண்ண முடியும்? “ கண்களில் கண்ணீர்.
“பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி? “என்று கேட்டாள் இவாஞ்சலின். அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தோஷம் பொங்க “சரி ஆன்ட்டி ….” என்று தலையை ஆட்டினாள் வேகமாக. படிக்க வேண்டுமென்கிற ஆசையும் வேகமும் அந்தத் தலையாட்டலில் தெரிந்தது.
“முதல் வருஷத்துல தான் சேர்த்துக்குவாங்களாம்; ரெண்டு வருஷம் வீணாப் போயிருச் சுன்னோ, நம்மவிட வயசுல சின்னவங்களோட சேர்ந்து படிக்குறது மாதிரி ஆயிடுச்சேன்னோ ஃபீல் பண்ணக் கூடாது சரியா?” என்று ஆறுதலாய்ப் பேசினாள் இவாஞ்சலின்.“அதெல்லாம் பரவாயில்ல ஆண்ட்டி…..” சுகந்தி தெளிவாய்த் தான் பேசினாள். அடுத்து வந்த நாட்களில் பூக்காரம்மாளும் இவாஞ்சலினும் பாலிடெக்னிக் பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்.
இருவரும் சில நாட்கள் சில பொழுதுகளாவது ஒன்றாகத் திரிய நேர்ந்ததில் இவாஞ் சலின் பூக்காரம்மாளின் வாழ்க்கை பற்றிய நிறைய விபரங்களை அறிந்து கொண்டாள். ஒருமுறை இவாஞ்சலின், அவளிடம் “நீங்க பள்ளிக் கூடத்துக்கே போனதில்லையா?” என்று கேட்கவும், “அதெல்லாம் போனேன் தாயி; நாலாப்பு வரைக்கும் படிச்சேன். அப்புறம் எனக்கொரு தம்பி பிறக்கவும் என் படிப்பை நிறுத்தி என்னைய புள்ளை தூக்கப் போட்டுட்டாங்கல்ல…” என்றாள் கடந்த காலத்தின் கசப்புகளை விழுங்கியபடி.
இன்னொரு சமயம் “சுகந்தி அப்பாவ நீங்க எப்படி கல்யாணம் கட்டிக்கிட்டீங்க! வீட்டுல வற்புறுத்தி கட்டி வச்சுட்டாங்களோ…” என்று கேட்டாள் சிரித்தபடி. “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தாயி; நாங்க காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டிக்கிட்டோம்…” என்றாள். இவாஞ்சலின் முகத்தில் ஆச்சர்யம் காட்ட அவளே விளக்கமாய்ச் சொல்லத் தொடங்கினாள்.
“நாங்க பக்கத்து பக்கத்து ஊரு; சுகந்தி அப்பா பிராயத்துல கருப்பா இருந்தாலும் நல்லா களையா இருக்கும். அப்பல்லாம் நல்லா மேளம் வாசிக்கும். கல்யாணம், கருமாதி, ஊர்த் திருவிழான்னு அததுக்குத் தகுந்தபடி அபாரமா வாசிக்கும். அப்ப அதோட கழுத்தசைவையும் விரலோட நாட்டியத்தையும் பார்த்துப் பார்த்து நான் சொக்கித் தான் போனேன். ரொம்பத் தெறமை யான மனுஷன்ம்மா... நான் தான் மொதல்ல அதுட்டப் போயி, ‘எனக்கு உன்மேல ரொம்ப இஷ்டம்; என்னையும் உன்கூடவே கூட்டிட்டுப் போயிரு; உன் மேள வாசிப்பக் கேட்டுக்கிட்டே இருக்கனும் போலருக்கு’ன்னு சொன்னேன். அது முதல்ல ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிட்டுப் போயிருச்சு….
நான் திரும்பத் திரும்ப அதுகிட்டப் போயி இதையே சொல்லவும், சரி வான்னு கூட்டிட்டுப் போயி ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டிருச்சு; நாங்க வேற வேற ஜாதி; அதால ரெண்டு குடும்பத்திலயும் எங்கள ஏத்துக்காம, வெட்டுவோம், குத்துவோம்னு மெரட்டுனாங்க…..உங்களால ஆனதப் பார்த்துக்கங்கன்னுட்டு ஊரை விட்டு இந்த பட்டணத்துக்கு வந்துட்டோம். ஆரம்பத்துல எல்லாம் என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான் இருந்துச்சு…. ஏனோ பட்டணத்துக்கு வந்ததும் மேளம் வாசிக்கிறத விட்டுருச்சு. அதுக்குப் பதிலா சென்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம் வந்துச்சு.சொந்தமா கான்ட்ராக்ட் கூட எடுத்துப் பண்ணுச்சு….
ஒரு சமயம் மூணாவது மாடியில சென்ட்ரிங் வேலை செஞ்சுக்கிட்டு இருக்குறப்போ சாரம் சரிஞ்சு கீழ விழுந்துருச்சு. புட்டாணி போயிருச்சு. பொழச்சு வந்தது அந்த கடவுள் கிருபை; சேர்த்துவச்ச பணமெல்லாம் அதோட மருத்துவ செலவுலேயே காலியாயிருச்சு; உடம்பு ஒடுங்கி பாதி ஆளாப் போயிடுச்சு; தொடர்ந்து வேலைக்கும் போக முடியல. இப்படி ஒண்ணுக்கும் உதவாமப் போயிட்டமேன்கிற மன உளைச்சல்ல ரொம்பவும் ஒடைஞ்சு போயிட்டுது….
சென்ட்ரிங் சாமான்களை யெல்லாம் கூட்டாளிங்களே வித்துத் தின்னுட்டாங்க; வீட்டுல பசியும் வறுமையும் …. கஞ்சிக்கில்லைன்னா சண்டை சச்சரவுதான வரும்; அதான் நடக்குது எங்க வீட்லயும்; ஒருத்தருக்கொருத்தர் முகங்குடுத்து பேசுறதயே நிறுத்திக்கிட்டோம்……மூனு புள்ளைங்கள வச்சுக்கிட்டு எனக்கு முழி பிதுங்கிப் போச்சு. என்ன பண்ற துன்னே புரியல; அப்புறம் தான் எனக்குத் தெரிஞ்ச பூக்கட்டி விற்குற இந்த வேலையில ஏதோ வயித்துப் பாட்டுக்கு வஞ்சணையில்லாம காலம் ஓடிக்கிட்டு இருக்கு தாயி……” மூச்சுவிடாமல் பேசி நிறித்தினாள் பூக்காரம்மாள்.
பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில் ப்ளஸ் டூ வில் சம்பந்த மில்லாத குரூப்பைப் படித்த பெண்ணை சேர்த்துக் கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். ஓரிரு அரசு உதவி பெறும் பாலி டெக்னிக்குகளோ சுகந்தி எஸ்.எஸ்.எல்.சி. யில் எடுத்திருக்கும் மார்க் இடம் கிடைப்பதற்கு போதாது என்று சொல்லி விண்ணப்பப்பாரம் தருவதற்கே மறுத்து விட்டார்கள். சுய நிதி பாலிடெக்னிக்கு களில் டொனேஷன் அது இதென்று கட்டணம் எக்குத் தப்பாய்க் கேட்டார்கள். கடைசியில் ஒரு முஸ்லீம் மைனாரிட்டி பாலிடெக்னிக்கில் விசாரித்தபோது ஆறுதலாயும் நம்பிக்கையாயும் பேசினார் கள். ஆனால் அங்கு சேர்வதற்கும் வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம் ரூபாய்த் தேவைப் படுமென்று தெரிந்தது. “இதெல்லாம் கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி; அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்…..” என்று சொல்லி பூக்காரம்மாள் விடை பெற்றுக் கொண்டாள்.
இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை.எந்த வகையிலாவது அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டுமென்று மனசு கிடந்து துடித்தது. “இப்படி பாலிடெக்னிக் படிக்கிற ஆசைய அந்தப் பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது இப்ப முடியாமப் போயிடும் போல இருக்குங்க….” அருள்தாஸிடம் சொல்லிப் புலம்பினாள். “நாம வேணுமின்னா பணம் கட்டி அந்தப் பொண்ண படிக்க வைக்க லாம்ப்பா….” என்றான் அவன். “நெசமாவா….பணம் கட்டுவீங்களா?” பதட்டப்பட்டாள் அவள்.
பூக்காரம்மாளையும் சுகந்தியையும் அழைத்து விவரம் சொல்லவும் அவர்களால் இதை நம்பவே முடியவில்லை.இரண்டு பேர்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர். பூக்காரம் மாள் தடாலென்று இவாஞ்சலினின் கால்களில் விழுந்து விட்டாள். இவாஞ்சலின் பதறிப்போய் “அய்யோ என்னங்க இதெல்லாம்…. “ என்று அவளை எழுப்பி சோபாவில் உட்கார வைப்பதற்குள் போதும் போதென்றாகி விட்டது. அப்புறமும் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.
“சொந்த பந்தங்களே ஒரு பைசா தந்துதவாத காலம் தாயி இது; முன்னப்பின்ன பழக்கமில்லாத எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையக் கட்டி படிக்க வைக்குறேன்றியே, நெசமா
லுமே நீ தெய்வம் தாயி….” என்று அரற்றினாள்.
காரியங்கள் சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும் போய் விண்ணப்ப படிவம் வாங்கி வந்தார்கள். அன்றைக்கே மூவரும் உட்கார்ந்து அதை நிரப்பத் தொடங்கினார்கள். இவாஞ்சலின் ஒவ்வொரு பகுதியாக வாசித்து, சுகந்தியும் பூக்காரம்மாளும் சொல்வதை படிவத்தில் நிரப்பிக் கொண்டிருந்தாள். ஜாதி பற்றிய கட்டத்தை நிரப்புவதற்காக , “நீங்க என்ன கம்யூனிட்டி சுகந்தி?” என்று கேட்கவும் “எஃப். சி. ஆன்ட்டி ….” என்றாள் சுகந்தி.
“அந்தக் வயித்தெரிச்சல ஏன்ம்மா கேட்குற! நாங்க கோயிலுக்கு பூக்கட்டி பொழைக்குற பண்டாரம் ஜாதி; ஆண்டிப் பண்டாரம்னு போட்டுருந்தா பிற்படுத்தப்பட்ட வகுப்புன்னு பதிவாயிருக் கும்; எங்க ஆளுங்க எல்லாம் அப்படித்தான் பதிஞ்சிக்கிறாங்க…. பிள்ளைங்கள பள்ளிக் கூடத்துல சேர்க்குறதுக்குத் தூக்கிட்டுப் போன கூறுகெட்ட மனுஷன் வெறுமனே ‘பண்டாரம்’ ஜாதின்னு சொல்லிப் பதிஞ்சிட்டு வந்துருச்சு; பண்டாரம்னா முற்போக்கு ஜாதியாம், சலுகை எதுவும் கெடைக்காதாம். அப்புறமும் மனுக் குடுத்து மாத்தச் சொல்லி எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தேன்; ஒரே அடியா முடியாதுன்னுடுச்சு….அதை விட இன்னொரு கொடுமை தாயி; என் ஜாதியில பிள்ளைங்கள சேர்க்காம இவ அப்பனோட ஜாதியில பிள்ளைங்களச் சேர்த்திருந்தா இன்னும் விசேஷமா நிறைய சலுகைகள் கெடைச்சிருக்கும்…..” என்றாள்.
“ஏன் அவரு அப்படி என்ன ஜாதி” என்றாள் இவாஞ்சலின் ஆர்வம் மேலிட. பூக்காரம் மாள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில் ”அவரோட ஜாதி என்னன்னு இந்தப் பட்டணத்துல யாருக்குமே தெரியாது; உன்கிட்ட மட்டும் சொல்றேன்; நீயும் உன் மனசோட வச்சுக்கோ…” என்று பெரும் பீடிகைக்குப் பின் சொன்னாள். ”அது எஸ்.ஸி. கம்யூனிட்டி தாயி;துப்புக் கெட்ட மனுஷன் அது ஜாதியிலயும் பிள்ளைகளச் சேர்க்காம, என் ஜாதியையும் முழுசாச் சொல்லாம படுபாவி பிள்ளைகளுக்கு ஒரு சலுகையும் கிடைக்க விடாமப் பண்ணீருச்சு…”
இவாஞ்சலினுக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது. எத்தனையோ பேர் தாங்கள் வசதி வாய்ப்புகளோடிருந்தும் தங்களின் பிறந்த ஜாதியை மறைத்து பொய்ச் சான்றிதழ் கொடுத் தேனும் சலுகைகள் அனுபவிக்கத் துடிக்கிறார்கள். அவளுடைய சொந்த கிராமத்தில் நிலபுலன்களும் தோட்டந் துறவுகளும் நிறைந்த ஒரு பெரும் பணக்காரக் குடும்பம்; தாங்கள் பிறந்த ரெட்டியார் ஜாதியை கஞ்ச ரெட்டி என்று மாற்றிக் கொண்டால், மலை ஜாதி மக்களுக்கான சலுகைகள் கிடைக்குமென்று அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்கி, அவர்களின் மாவட்டத்திலேயே அப்படிப்பட்ட ஜாதிப் பிரிவினர் வசிக்கவில்லை என்று தாசில்தார் சான்றிதழ் தர மறுத்தும் தன்னுடைய பணத்தையும் செல்வாக்கை யும் பயன்படுத்தி வேறொரு மாவட்டத்தில் போய் அப்படிப் பட்ட சான்றிதழ் பெற்று, சலுகைகளை அனுபவிப்பதை நேரிடையாகவே அவள் அறிவாள். அப்படிப் பட்ட மனிதர்களுக்கு மத்தியில் உண்மையிலேயே தாழ்த்தப் பட்ட குடியில் பிறந்திருந்தும் அதைத் தன் பிள்ளைகளுக்குத் தராமல் மறைத்துவிடும் மனுஷன். அறியாமையாலா? ஆணவத்தாலா? இவாஞ்சலினுக்குப் புரியவில்லை.
ஒரு நல்ல நாளில் பூக்காரம்மாளையும் அவளின் பெண்ணையும் அழைத்துக் கொண்டு போய் பணம் கட்டி பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டு வந்தாள் இவாஞ்சலின்.அன்றைக்கும் இரு வரும் கை கூப்பி கண்ணீர் பெருக்கினார்கள். இரண்டு நாள் சென்றிருக்கும். பூக்காரம்மாளின் புருஷன் மட்டும் இவாஞ்சலினின் வீட்டிற்கு வெளியே வந்து நின்றார். அப்போது அருள்தாஸும் வீட்டிலிருந்தார். “எங்க குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுருக்கீங்க; கோடானுகோடி வருஷத்துக்கு நீங்க சுகமாய் இருக்கனும்…” என்று கண்ணீருடன் கை கூப்பி வணங்கினார். ”எதுக்குப் பெரிய வார்த்தையெல்லாம் …..” என்றபடி அவரைச் சமாதானப் படுத்தி இருவரும் வற்புறுத்தி வீட்டிற்குள் அழைத்துப் போனார்கள். அவருக்கு சாப்பிட ஏதாவது தரலாமென்று இவாஞ்சலின் சமையலறைகுள் போனாள்.
அருள்தாஸ் தான் கேட்டார்.”என்னைய்யா இப்படி அசட்டு மனுஷனா இருக்குற! உன் ஜாதியில புள்ளைங்கள பதிஞ்சு வைச்சிருந்தீன்னா எவ்வளவு சலுகைகள் கெடைச்சிருக்கும்? வேலை யிலயும் முன்னுரிமையெல்லாம் கெடைச்சுருக்குமில்ல; அத விட்டுட்டு எஃப்.சி.ன்னு பதிஞ்சு பிள் ளைங்களுக்கு ஒண்ணும் கிடைக்காமப் பண்ணீட்டீயே….”
அவர் அருள்தாஸை தீர்க்கமாகப் பார்த்தார். அப்புறம் பேசினார் “சலுகைகள் கிடைக்கும் தான். கூடவே என் ஜாதிக்கான இழிவும் அவங்க மேல படிஞ்சுடுமே! அதால இந்த சமூகம் அவங்களுக்குத் தர்ற வலி, அவமானம் எல்லாத்தையும் அவங்க அனுபவிச்சாகனுமே! எல்லோருக்கும் தலித்துகள் அனுபவிக்குற சலுகைகள் மட்டும் தான் கண்ண உறுத்துது; அதுக்கு அவங்க குடுக்குற வெலை யாருக்குமே தெரிய மாட்டேங்குது….. கிராமத்துல போயி பள்ளனா, பறையனா, சக்கிலி யனா ஒரே ஒரு நாளாவது வாழ்ந்து பார்த்தாத்தான் அந்த வலியும் வேதணையும் புரியும்….
மேளம் வாசிக்குறது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம் பட்டணத்துக்கு பொழைக்க வந்ததும் நான் அதக் கூட விட்டுட்டேன்; ஏன்னா அதுல என் ஜாதி அடையாளம் ஒட்டிட்டு இருக்கு; அதன் மூலமாக் கூட என் ஜாதி என்னன்னு தெரிஞ்சு என்னைச் சுத்தி இருக்குற வங்க என் குடும்பத்தையும் என் பிள்ளைங்களையும் இளக்காரமாப் பார்க்குறத நான் விரும்பல அதான்…என் பிள்ளைகள பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது சாதி இல்லைன்னு தான் போடனும்னு ஆசைப் பட்டேன்; ஆனா என்ன மாதிரி சாமானியன் அப்படிச் சொன்னா அத பள்ளிக் கூடத்துல ஏத்துக்குவாங்களா என்ன! அதான் என் பொஞ்சாதியோட சாதியில சேர்த்தேன்…..
நானும் படிக்க ஆசைப்பட்டு சின்ன வயசுல கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போனேன் ஸார்; அந்த நாட்கள்ல ஊருக்குள்ளதான் சேரின்னு எங்கள ஒதுக்கி வச்சிருந்தாங்கன்னா, பள்ளிக் கூடத்துலயும் அதே கதை தான்…. வகுப்புல தனியா உட்கார வச்சாங்க; மதிய உணவுக்கு தனி வரிசை; குடிக்குற தண்ணிக்கு தனி தம்ளர்; இழிந்த சாதின்னு வாத்தியார்களும் சக மாணவர் களும் எங்க மேல செலுத்துன அதிகாரம் இருக்கே, அப்பப்பா! அந்த வலியும் வேதணையும் இப்ப நெனைச்சாலும் மனசு நடுங்குது.
நான் ஆறாப்பு படிச்சுக்கிட்டிருந்த சமயம்; சின்ன வகுப்புல கிளாஸ் ரூமுலேயே யாரோ ஒரு பையன் வெளிக்குப் போயிட்டான்னு சொல்லி என்னைக் கூப்புட்டு ‘அதை’ச் சுத்தப் படுத்தச் சொன்னாங்க… இத்தனை பேரு இருக்கும் போது நான் ஏன் பண்ணணும்னு கேட்டேன்; என் ஜாதியச் சொல்லி, இதையெல்லாம் நீங்க தாண்டா பண்ணனும்னாங்க; முடியாதுன்னுட்டு என் வகுப்புக்குப் போயிட்டேன்; ஹெட் மாஸ்டர் கூப்புட்டு, ‘ஏண்டா நாயெ! உனக்கு அத்தனை திமிறா?’ன்னு அடிச்சார்…. அன்னைக்கோட படிப்பே வேணாமின்னுட்டு ஓடி வந்துட்டேன் ஸார்…..
அந்த நிலைமை என் பிள்ளைகளுக்கு வர வேணாமின்னு தான் அவங்களுக்கு என் ஜாதியத் தரல…. ஜாதி இழிவுகளோட வலிய அனுபவிச்சு உணர்ந்த எனக்கு, சலுகைகள் பெரிசாத் தெரியல; நான் பிறந்த ஜாதியோட நிழல் கூட, என் பிள்ளைங்க மேல படிய விட மாட்டேன் ஸார்…” என்றார் தீவிரமான குரலில்.
-- முற்றும்
(நன்றி: தினமலர் – வாரமலர் 13.12.2009

Wednesday, January 13, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்காக....

கதையல்ல; நிஜம்

அன்றொரு நாள் அதிகாலையில்
கரடு முரடான
கிராமத்து சாலையின் வழி
பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து......

ஆண் பெண் இருக்கைகளுக்கு மத்தியில்
நின்றிருந்த நாற்பது கடந்த
நடுத்தர வயதினன்
மயங்கி விழுந்தான் சட்டென;
கிராமத்திலொருவன் மயங்கி விழ
காரணங்களுக்கா பஞ்சம்!
கூட்ட நெரிசலோ பசி மயக்கமோ
வேறெதுவும் தள்ளாமையோ.....

விழுந்தவனின் கைகள் காற்றில் துழாவின
கம்பிகளைப் பிடித்துக் கொள்ள....
ஒருகையில்
ஆண்கள் பகுதியின் கம்பியை பிடித்தவனின்
இன்னொரு கைக்கு அகப்பட்டது
இருக்கையில் அமர்ந்திருந்த
இளம்பெண் ஒருத்தியின் முழங்கை;
முழுதாய்ப் பற்றுவதற்குள்
அசூசையுடன் தட்டிவிட்டாள் கைகளை

காக்கை எச்சத்தைப் போல.....
ஆடவன் ஒருவனின் கைகள்
தன்மேல் பட அனுமதிப்பாளா
கண்ணகி வழியில் வந்த
கற்புள்ள தமிழ்ப்பெண்?

நின்று கொண்டிருந்த
இன்னொரு பெண் ஓடிவந்து
விழுந்தவனை மடியில் போட்டு
நீவி விட்டாள் நெஞ்சை;
மயக்கம் தெளிந்தவனுக்கு
தன் இருக்கையைத் தந்து
எழுந்து கொண்டான் இன்னொருவன்....

இறங்கும் போது
இன்னொருவளிடம் கேட்டேன்
மயங்கி விழுந்தவன் தெரிந்தவனா?
அதெல்லாமில்லை; அய்யோ பாவம்
விழுந்தவன் அறியாதவ னென்றாலும்
வேடிக்கையா பார்க்க முடியும்?
என்றபடி
கடந்து போனாள் தன் வழியில்.....

உலகம் இயங்குவது
கற்புள்ள பெண்களால் அல்ல;
கரிசனமுள்ளவர்களால்........!

Thursday, January 7, 2010

சிறுகதை:வேரற்றுப் போகிறவர்கள்

அலுவலக வாசலில் காத்திருந்த மாடசாமிக்கு அலுப்பாகவும் ஆயாசமாகவு மிருந்தது. எத்தனை எத்தனை காத்திருப்புகள்! பாதி ஆயுள் காத்திருப்புகளிலேயே கழிந்து விடும் போலிருக்கிறது. இந்த தொழிற்சாலை வாசலில் காத்திருந்த நிமிஷங்களைக் கணக்கெடுத்தாலே...... கண்மூடி யோசனையிலிருந்தவனை உலுக்கினான் அதிகாரியின் உதவியாளன்.
"என்ன அதுக்குள்ள தூக்கமா? உள்ள கூப்புடுறாங்க, போ.....நீயும் விடாம வந்துக்கிட்டுத் தான். இருக்குற! இவனுங்க எதுவும் செய்ய மாட்டானுங்கப்பா...இவனுங்களயே நம்பி வீணாப் போகாம, வேற ஏதாவது முயற்சி பண்ணிப் பாரேன்....." என்றபடி அறைக்குள்ளே அனுப்பி வைத்தான் அவன்.
இவன் கை கூப்பியபடி உள்ளே நுழைந்ததும், கோப்புகளில் தீவிரமாக மூழ்கி இருப்பது போன்ற பாவனையுடன் உட்கார்ந்திருந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி மாடசாமியிடம் எரிந்து விழுந்தார்.
"ஏன் திரும்பித் திரும்பி வந்து என் உயிரை எடுக்குற? உனக்குப் பொருத்தமான வேலை எதுவும் இந்தத் தொழிற்சாலையில இல்லைன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு....."
"அப்படி எல்லாம் ஒரேயடியா இல்லைன்னு சொல்லீடாதிங்க ஸார் ... பொண்டாட்டி புள்ளைக எல்லாம் பட்டினியாக் கெடக்குறாங்க.....கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஏதாவது சின்ன வேலையாவது - டெம்ப்ரரினாலும் பரவாயில்ல - போட்டுக் குடுத்தீங்கன்னா பொழச்சுக்குவோம்....." அழுகிற தொனியில் அவன் கெஞ்சினான்.
"இது வெளிநாட்டுக்காரன் கம்பெனிப்பா, நீயோ SSLC பெயிலு; இங்கிலீசும் பேச வராது; இங்க உனக்கு நான் என்ன வேலை தர முடியும் சொல்லு! இரும்படிக்குற எடத்துல ஈக்கென்ன வேலை? சொன்னாக் கேளு; இப்ப நீ கெளம்பு...உனக்குத் தோதான வேலை வந்ததும் கண்டிப்பா சொல்லி அனுப்புறேன்; அப்புறம் வந்து பாரு....."
"இந்த வார்த்தைகளக் கேட்டுக் கேட்டு என் காதே புளிச்சுப் போச்சு ஸார்.....அன்னைக்கு உங்க பெரிய அதிகாரி - அந்த இங்கிலீசுக்காரர்கிட்ட நான் நியாயம் கேட்டப்போ, நீங்க என்ன சொல்லி என்னை வெளியில கூட்டிட்டு வந்தீங்க.....! எனக்கு எப்படியும் ஏதாவது வேலை போட்டுத் தர்றதா உறுதி சொன்னீங்கள்ல... இப்ப ஏன் வேலை இல்லைன்றீங்க?" கோபப்பட்டான் மாடசாமி.
"மாடசாமி சொன்னாப் புரிஞ்சுக்கோ...இங்க ஏற்கெனவே ஆட்கள் நிறையா இருக்காங்கன்னு, ஆட்குறைப்பு பண்ணச் சொல்லி அதே வெளிநாட்டுக்காரன் தான் என்னை நச்சரிச்சுக்கிட்டு இருக்கான். யாரை அனுப்புறதுன்னு நான் மண்டையப் போட்டு உடைச்சுக்கிட்டிருக்கேன். இதுல நீ வேற புதுசா வேலை கேட்டு வந்து வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்காத....! எனக்கு நெறையா வேலை கெடக்கு; ஒன்னோட மல்லுக்கெட்றதுக் கெல்லாம் நேரமில்ல...." என்றபடி மீண்டும் கோப்புகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டார் அவர்.
"இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு முடிவு தெரியாம இங்கருந்து நான் வெளிய போகப் போற தில்ல ஸார். ஒண்ணு எனக்கு வேலை போட்டுக் குடுங்க; இல்லைன்னா உங்க இங்கிலீசுக்கார பெரிய அதிகாரிய இன்னொரு தடவை பார்க்க விடுங்க......" அலுவலகத்தின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான் மாடசாமி. கொஞ்ச நேரம் அவனைக் கவனிக்காமல் விட்டு விட்டால் அவனாகவே எழுந்து போய் விடுவான் என்ற எண்ணத்தில் - இதற்கு முன்பும் சில சந்திப்புகள் இப்படித்தான் முறியடிக்கப் பட்டிருக்கின்றன - அவரும் அவனது இருப்பை உதாசீனப் படுத்திவிட்டு தான் வேலையில் மும்முரமாய் இருப்பதாக பாவணை செய்யலானார்.
அப்போதெல்லாம் - அதாவது மாடசாமி பிறப்பதற்கெல்லாம் முன்பு - அவனது சிறு கிராமம் சென்னையிலிருந்து விலகி, வெகு தூரத்தில் ஆழ்கிணற்றுத் தண்ணீரைப் போல் அமைதியாக குளிர்ச்சியாக இருந்தது. ஊரில் விவசாயம் செழித்து, திருவிழாக்கள் களைகட்டி இருந்த காலமது. அவர்கள் அபூர்வமாகத் தான் அதுவும் விஷேஷங்களுக்கு ஜவுளி எடுக்க, பண்ட பாத்திரங்கள் வாங்க என்று முக்கியமான தருணங்களில் மட்டுமே சென்னைக்குப் போவார்கள்.
அதுவும் நிறைய திட்டமிட்டு சொந்தபந்தங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு, கட்டுச் சோறு கட்டிக் கொண்டு, மாட்டு வண்டி பூட்டி அதில் வைக்கோலைப் பரப்பி, அதன் மீது பவானி ஜமுக்காலம் விரித்து, நாள்க் கணக்கில் பயணித்து.... பயணங்களைக் கொண்டாடிய காலமது. அப்படியும் போய்விட்டுத் திரும்பியதும் நாலைந்து சொந்தங்களாவது தங்களையும் கூட்டிப் போகவில்லை என்று மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு சடவாய்த் திரிவார்கள். சின்ன வயதில் மாடசாமியின் பாட்டைய்யா கதைகதையாய்ச் சொல்லி இருக்கிறார் இதையெல்லாம்.
முதலில் ஊருக்கு வெளியே சாலைகள் போடப்பட்டன. அதில் மாடசாமி குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக நிலம் கொஞ்சம் பறி போனது. மாடசாமியின் பாட்டைய்யா மிகச் சந்தோஷமாக நிலங்களை ஒப்படைத்தார். மின்சாரமும் சாலைகளும் கிராமங்களை வளர்ச்சியின் பாதைக்கு வழி நடத்தும் என்று நிலம் போனதற்காக வருத்தப் பட்டவர்களிட மெல்லாம் எடுத்துச் சொன்னார்.
சாலையை ஒட்டி புதிய குடியிருப்புகள் முளைத்தன. பாட்டைய்யா அதை விரும்பவில்லை.ஆனால் அவர் எவ்வளவோ தடுத்தும், எடுத்துச் சொல்லியும் கேட்காமல் மாடசாமியின் அப்பா, தாராளமாக நிலங்களை குடியிருப்புகள் கட்டித் தருபவர்களிடம் விற்றார். பருத்தியும், கடலையும், பருப்பும், சோளமும், வரகும், கேப்பையும் சடை சடையாய் காய்த்துத் தொங்கிய நிலங்களில் எல்லாம் சதுரஞ் சதுரமாய்க் கட்டிடங்கள் முளைத்து, புதிது புதிதாய் மனிதர்கள் குடி வந்தார்கள். எங்கு பார்த்தாலும் விதவிதமான கடைகளே காட்சிகளாகி, பட்டணத்தின் பவிசும் மினுக்கும் கிராமத்திற்குள்ளும் வாளைக் குமரிகளாய் வலம் வரத் தொடங்கின.
பஸ் வசதி பெருகவும் தூரங்கள் தொலைந்து போய் பட்டணம் பக்கத்தில் கூப்பிடு தூரத்திற்குள் வந்தது. மாடசாமியின் அப்பா நிலம் விற்ற காசை எல்லாம் குடியிலும், பட்டணத்திற்கு அடிக்கடி போய் அதன் சொகுசிலும் உல்லாசங்களிலும் பறி கொடுத்தார்.வானம் பொய்த்து விவசாயம் கொஞ்சம் சுணங்கியதாலும், விவசாயம் செய்ய உடம்பு வளையாததாலும் மிச்ச நிலங்களையும் தரிசாகவே போட்டிருந்தார். குந்தித் தின்றதில் குன்றும் குறைந்து, கையிருப்பெல்லாம் காலாவதியாகி, கடன்கள் பெருகி, கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி தாங்காமல் ஒருநாள் மாடசாமியின் அப்பா ஊரைவிட்டே ஓடிப்போனார்.
மாடசாமிக்கு, அப்புறம் தான் குடும்ப நிலைமை உறைத்தது. சென்னைக்குப் போய் வீதி வீதியாய் அலைந்து வேலை தேடினான். பத்தாம் வகுப்பில் பெயிலான அவனது காகிதப் படிப்பிற்கு காரியமாகவில்லை. பட்டணம் பரிகாசம் செய்து துரத்தி அடிக்க மீண்டும் சொந்தக் கிராமத்திற்கே திரும்பிப் போனான். "எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு மறுபடியும் ஏரப் புடிய்யா.. நம்ம குடும்பம் தலையெடுக்க அது ஒண்ணுதான் வழி..." என்று பாட்டைய்யா காண்பித்த வழியில் பயணிக்கத் தொடங்கினான்.
ஒரு டிராக்டர் வாங்கி அப்பா தரிசாகப் போட்டிருந்த நிலத்தை உழுது, கரடு வெட்டி, பக்குவப் படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கினான். குடும்பமே மிகக் கடுமையாக உழைத்தது. ஆரம்ப நாட்கள் இறுகிக் கிடந்த நிலம் போல அவர்களின் வாழ்க்கையும் வெக்கையும் வெடிப்புமாகவே கழிந்தன. நிலம் நெகிழ நெகிழ அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் குலை தள்ளத் தொடங்கியது. பொட்டைக் காடு பூப்பூக்கத் தொடங்கியது. அவர்களைப் பார்த்து கிராமத்தில் இன்னும் சிலரும் தங்கள் நிலங்களைப் பதப்படுத்தி விவசாயம் செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது தான் அந்தச் செய்தி ஊருக்குள் உலாவரத் தொடங்கியது - அந்த கிராமத்தில் வெளிநாட்டுக்காரன் ஒரு கார்த் தொழிற்சாலை தொடங்கப் போவதாக. ஊரில் கார்த் தொழிற்சாலைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குழுக்கள் உருவாயின. ஆதரவு கூட்டம் - ஊரில் தொழில் வளமும் வேலை வாய்ப்பும் பெருகும்; ஊரே சுபிட்ஷமாகும் - என்றது. எதிர் கோஷ்டியோ - கிராமத்தின் இயல்பும் ஒழுங்கும் பாழாகும்; சுற்றுச் சூழல் நாசமாகும்; விவசாயம் நசிந்து போகும் - என்றது.
"விவசாய நிலத்துல கார்த் தொழிற்சாலை கட்டீட்டு, அப்புறம் பசிக்கு காரையா பிய்ச்சுத் திம்பீங்க.....!" என்றார்கள் வயசாளிகள்.
அரசாங்க வாகனங்கள் ஊருக்குள் அடிக்கடி அலையலாயின. வட்டாட்சியர்களும், வருவாய்த் துறை அதிகாரிகளும் தொழிற்சாலைக்கு நிலம் பிடித்துத் தரும் வேலையில் இறங்கினர். ஊர்ப் பெரியவர்களையும் நிலமிருப்பவர்களையும் சந்தித்து குழையக் குழையப் பேசி அடிமாட்டு விலைக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்தார்கள். "எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழிலு விவசாயம் தான்; அதுக்கான நிலங்களை உங்களுக்கு வித்துட்டா, அப்புறம் வயித்துப் பாட்டுக்கு நாங்க என்ன செய்யிறது?" என்ற அப்பாவிகள் சிலரின் கேள்விக்கு "நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினர்களில் தலா ஒருவருக்கு அவர்களின் தகுதிக்குத் தக்கபடி கார்க் கம்பெனியிலேயே வேலை போட்டுத் தரப்படும்..." என்று சொல்லி வாயடைத்தார்கள்.
'நாமதான் நிலத்தோட மல்லுக்கட்டி, ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போனோம்; நம் பிள்ளைகளாவது சொகுசான வேலை செய்து சுகப்படட்டும்...." என்ற நப்பாசையில் போட்டி போட்டுக் கொண்டு நிலங்களை கார்க் கம்பெனிக் காரர்களிடம் ஒப்படைத்தார்கள் குடியானவர்கள். எந்த உத்திரவாதத்திற்கும் மசியாமல் சிலர் நிலங்களைக் கொடுக்க மறுத்து அரசாங்கத்துடன் சண்டைக்குப் போனார்கள். அவர்களில் மாடசாமியின் குடும்பமும் ஒன்று.
மாடசாமியின் பாட்டைய்யா இதில் மிகத் தீவிரமாய் இருந்தார். கார்க் கம்பெனி மென்று செரிக்க நினைத்த பகுதியில் தான், அவர்கள் சமீபத்தில் பக்குவப் படுத்தி பயிர்கள் தழைக்கத் தொடங்கி இருந்த நிலமும் இருந்தது. அவர் நிலம் கொடுக்க ஆட்சேபிப்பவர்களைத் திரட்டிக் கொண்டு அரசாங்கத்திற் கெதிராக போராடினார். உண்ணாவிரதமிருந்தார்; சாலை மறியல் செய்தார்.
ஒருமுறை போலீஸ் அவரைக் கைது செய்து கொண்டு போய், பிணமாக திருப்பிக் கொண்டு வந்து போட்டு விட்டுப் போனது. அந்த வயசாளியை அடித்தே கொன்று விட்டு மாரடைப்பில் மரணித்துப் போனதாக ரிப்போர்ட் கொடுத்தது. அதற்காக தாசில்தாரின் பேற்பார்வையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கூட இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மாடசாமியின் பாட்டைய்யா இறந்த பின்பு போராட்டம் பிசுபிசுத்துப் போய், எல்லோரும் தங்கள் நிலங்களை கார்க் கம்பெனிக்கு எழுதிக் கொடுத்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
கார்க்கம்பெனி கட்டுமானம் தொடங்கியது. இராட்சஷ இயந்திரங்கள் வந்து இறங்கின. இரவும் பகலும் ஒரே இரைச்சலும் புகையுமாய் அந்த சூழலே இரணகளப் பட்டது. பச்சைக் குழந்தைகளை மிதித்தே கொல்வது போல பசும் பயிர்கள் எல்லாம் அழிக்கப் பட்டன. மரங்கள் வேரோடு வீழ்த்தப் பட்டதில் கூடுகளை இழந்த பறவைகளின் கூக்குரல் அந்தப் பிராந்தியத்தையே பதைபதைக்கச் செய்தன. ஆனாலும் நிலம் கொடுத்தவர்கள் பலருக்கும் கட்டுமானக் கம்பெனியிலும் அதன் உதவிக் கம்பெனிகளிலும் தற்காலியமாகவும் தினக்கூலி அடிப்படையிலும் வேலை கிடைத்தது. மாடசாமியும் கட்டுமானக் கம்பெனியில் நேரக் காப்பாளராக நியமிக்கப் பட்டான். பதினெட்டு மாதங்கள் பிரச்னை இல்லாமல் போனது.
கார்க் கம்பெனி தரையிலிருந்து மேலெழும்பி உற்பத்தியைத் தொடங்கியது. நெல்லும் கரும்பும் விளைந்த நிலங்களில் அல்லும் பகலும் அழகழகாய்க் கார்கள் முளைத்து அணி வகுத்தன. வண்ணமயமான கார்கள் வரிசைகட்டி நிற்பதைப் பார்க்க பார்க்க பிரமித்துப் போனார்கள் யாவரும். அப்புறந்தான் ஆரம்பித்தது பிரச்னை. கட்டுமானக் கம்பெனி உள்ளூர் ஆட்களை எல்லாம் ஒரேநாளில் கை கழுவி விட்டு போய்ச் சேர்ந்தது.
வேலை இழந்தவர்கள் கார்க் கம்பெனியை முற்றுகையிட்டு முறையிட செல்வாக்கான சிலருக்கு மட்டும் வேலை கிடைத்தது - அத்தனையும் சின்னச் சின்ன அடிப்படை வேலைகள். அதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷமானார்கள். வேலை கிடைக்காத பெரும்பாலோர் போராடிப் பார்த்து விட்டு தேறாது என்று தெரிந்ததும் வேறு பிழைப்பு தேடிப் போனார்கள். சிலர் சூழலை சாதகமாக்கி கடைகளும் தொழில்களும் தொடங்கி வளரலானார்கள். மாடசாமியும் மற்றும் சிலரும் எப்படியாவது கார்க் கம்பெனியில் வேலை பிடித்தே தீர்வதென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கோப்பில் முகம் புதைத்துக் கிடந்த அதிகாரி, முகந்தூக்கி மாடசாமியிடம் "இன்னுமா இங்க இருக்க? கிளம்பு; நான் வெளியில போகணும்....." என்றார். "என்னோட வேலை பத்தி ஏதாவது முடிவு தெரியாம கிளம்புறதா இல்ல ஸார்...." என்றான் உறுதியான குரலில்.
"என்ன தெரியணும் உனக்கு? தகராறு பண்றதுக்குன்னு வந்துருக்கியா....? உனக்கு வேலை தரணும்னு எங்களுக் கென்ன கட்டாயம்? பேசாம ஒழுங்கு மரியாதையா வெளியில போயிடு....."
"வேலை குடுக்கணும் ஸார்; குடுக்குறோம்னு இளிச்சு இளிச்சுப் பேசித்தான் எங்க நிலங்களை எல்லாம் எழுதி வாங்கி கார்க் கம்பெனி கட்டியிருக்கீங்க....இப்ப நீங்க ஒய்யாரமா உட்கார்ந்திருக்கிறது என்னோட நிலத்து மேல தான்; எங்க ஜீவனத்துக்கான ஆதாரத்தையே புடுங்கிக்கிட்டு, சட்டம் பேசுறீங்களே, வெளிநாட்டுக்கெல்லாம் போயி இதத்தான் படிச்சுட்டு வந்தீங்களா? ஏழைங்கள ஏமாத்தாதிங்க ஸார்....எங்க சாபம் உங்களச் சும்மா உடாது....." கண் கலங்கினான் மாடசாமி.
"இங்க பாரு மாடசாமி; சும்மா அனாவசியமாப் பேசி என் நேரத்த வீணாக்கிக்கிட்டு இருக்காத....நீ என்ன சும்மாவா நிலம் கொடுத்த? சுளையா பணம் வாங்கல....! அவ்வளவு தான் உனக்கும் கம்பெனிக்குமான உறவு...." எகிறினார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.
"பணம்; பெரிய பணம்!பிசாத்து பிச்சைக் காசு. அது என் பிள்ளைக்கு பீத்துணி வாங்கக் கூட போதாது...பணத்துக்காகவா நிலம் கொடுத்தோம்? வேலை தருவீங்கன்னு நம்பித் தான ஸார் நிலத்தக் கிரயம் பண்ணிக் குடுத்தோம். இப்படி மோசம் பண்றீங்களே....!" - மாடசாமி அழுதே விட்டான்.
"நாங்க வேலை கொடுப்போமின்னு எப்பவும் யார்கிட்டயும் சொன்னதேயில்ல...அரசாங்கம் அப்படிச் சொல்லி யிருந்தா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது....ஏதோ நிலம் கொடுத்துருக்கியேன்றதுக்காகத் தான் இவ்வளவு நேரம் நிக்க வச்சுப் பேசிக்கிட்டு இருக்கேன்; இதுக்கு மேலயும் நீ வெளிய போகலைன்னா நான் போலீசுல புகார் கொடுத்துடுவேன். அப்புறம் நீ முழுசா வீடு போய்ச் சேர மாட்ட. உங்க தாத்தாவுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்; நான் அவ்வளவு தான் சொல்வேன்...."
மாடசாமிக்கு பயமாக இருந்தது. இவர்கள் செய்யக் கூடியவர்கள் தான். போலீஸ், அரசாங்கம் எல்லாம் இவர்களுக்குத் தான் சாதகமாய் இருக்கின்றன. எத்தனை மனுக்கள்! எத்தனை சந்திப்புகள்! எதுவும் பலனளிக்கவில்லை. அதற்கு மேல் என்ன செய்வதென்று அவனுக்கும் தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டுமென்று அதிகாரியை கைகூப்பி வணங்கியபடி, "நான் தப்பா எதுவும் பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க ஸார்.....உங்களால முடிஞ்சா ஏதாவது கருணை காட்டுங்க..." என்றபடி வெளியேறினான். அதிகாரி ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவன் போவதை வெற்றிக் களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
சோர்ந்து போய் வீடு திரும்பியவனை, "அப்பா சாப்பிட ஏதாச்சும் வாங்கி வந்தியா?" என்றபடி குழந்தைகள் எதிர் கொண்டன. நான்கு வயதிலும், ஐந்து வயதிலுமிருந்த பெண் குழந்தைகள். "இல்லைடா செல்லங்களா......!" என்றதும் ஏக்கத்தோடு, விளையாடுவதற்கு வெளியே ஓடின மறுபடியும்.
"என்னங்க, போன காரியம் இப்பவும் காய் தானா? அதான் உங்க முகக் குறியே சொல்லுதே! நான் தான் படிச்சுப் படிச்சுச் சொன்னனே, அது பாறைங்க; அதுல முட்டுனா நம்ம தலைக்குத் தான் வலியும் வேதனைன்னு... நீங்கதான் சொல்லச் சொல்லக் கேட்காம போயிப்போயி முட்டிட்டு இப்ப இரத்தத்த எல்லாம் இழந்துட்டு வந்து நிக்கிறீங்க......" என்றாள் மனைவி.
"நீ வேற நோகடிக்காத புஸ்பா...! பேசாம கொஞ்சம் விஷம் வாங்கி நாமளும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் குடுத்து செத்துப் போயிடலாம் போலத் தோணுது....இப்ப எல்லா ஊர்கள்லயும் விவசாயிங்க அதைத்தான செஞ்சுக்கிட்டு இருக்காங்க..." என்றான் கண் கலங்கியபடி.
"அடப்பாவி மனுஷா, உன் புத்தி ஏன் இப்படிப் போகுது! பொசுக்குன்னு செத்துப் போறதுக்கா மனுஷ ஜென்மம் எடுத்தோம். போராடி வாழணும்யா. இன்னொரு தடவை இப்படிப் பேசாத...." என்றாள்.
"எனக்கும் அது தப்புன்னு தான் தோணுது; ஆனா பசியோட இருக்கிற புள்ளைங்க முகம் பார்த்ததும் மனசு பதறுதே, நான் என்ன தான் செய்யட்டும் சொல்லு?" உடைந்து அழுது விட்டான் மாடசாமி.அவனை இழுத்து அணைத்து, தோள் தட்டியபடி, "ஆம்பள அழுவாதய்யா; பார்க்கவே அசிங்கமா இருக்கு....நான் ஒரு வழி சொல்றேன்; கேக்குறியா...?" என்றபடி புருஷனின் முகம் பார்த்தாள் புஸ்பா.
"சொல்லு...." என்று தலை யாட்டினான் மாடசாமி.
"இங்க கார்க்கம்பெனி வந்துட்டதால இப்ப இந்தப் பகுதியில நில விலை யெல்லாம் ஏகத்துக்கு ஏறிக் கெடக்கு. நம்ம வீட்டையும் வீட்டடி மனையையும் வித்துடலாம்; அந்தப் பணத்தை வச்சு கொஞ்ச நஞ்சம் இருக்கிற கடனை யெல்லாம் அடச்சுட்டு, கண்காணாத இடத்துக்கு - இன்னும் விவசாயம் உயிப்போட இருக்குற - ஏதாவது சின்ன கிராமத்துக்குப் போவோம்..."
"போயி....அங்க என்ன பண்றது?" - இடைமறித்தான் மாடசாமி.
"அவசரப்படாம பொறுமையாக் கேளுய்யா...அங்க போயி, மிச்சமிருக்குற காசுல கொஞ்சம் காடு கழனின்னு வாங்கி, நமக்குத் தெரிஞ்ச விவசாயம் பண்ணிப் பொழச்சுக்குவோம்...சரியா?" என்றாள்.
மாடசாமி கொஞ்சம் யோசித்தான். "எல்லோரும் கிராமத்துலருந்து பட்டணத்துக்குப் போவாங்க பொழைக்குறதுக்கு....நீ என்னடான்னா அப்படியே தலை கீழா மாத்தி பட்டணமா வளர்ந்துட்டு வர்ற ஊரை விட்டுட்டு குக்கிராமத்துக்குப் போகணும்கிறீயே! அது சரியா வருமா?" என்றான் சந்தேகமாக.
"சரியா வரும்யா....நமக்குத் தெரிஞ்ச தொழிலு எங்க நடக்குதோ அங்க தான நாம போகணும்; அப்பத்தான் பொழைக்க முடியும்..." என்றாள் உறுதியாக.
"இருந்தாலும் பூர்வீகமா இருந்த இடத்தை வித்துட்டு வெளியிடம் போறதுன்னா.. கொஞ்சம் தயக்கமா இருக்கே புஸ்பா..." மருகினான் மாடசாமி.
"அப்படியெல்லாம் அனாவசியமா தயங்காதய்யா...முதல்ல உயிர் பொழைச்சுக் கெடக்குறது முக்கியமில்லையா! மனுஷ வாழ்க்கையே நாடோடித் தனமானது தான்யா...உனக்கும் எனக்கும் இந்த இடம் பூர்வீகம்னா, போற இடம் நம்ம புள்ளைங்களுக்குப் பூர்வீகமாயிட்டுப் போகட்டும்......."
"சரித்தான்; உன் யோசணைப்படியே செய்வோம்......" தீர்மானமாகச் சொன்னான் மாடசாமி. மேகத்துக்குள் மறைந்து கிடந்த உச்சிச் சூரியன் மெல்ல மெல்ல வெளியேறி, பிரகாசமாகி உறைக்கத் தொடங்கியது.
- முற்றும்

(நன்றி : கல்கி தீபாவளிமலர் 2007)

Wednesday, January 6, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்காக....

பொங்கலோ பொங்கல்.....

உறை மட்டும் வந்தது வாழ்த்துச் சொல்லி...
உள்ளீடுகள் ஒழுகிப் போயிருக்கலாம்;
திருடும் போயிருக்கலாம்....!

சந்தோஷங்களைத் தொலைத்த
சலனமே இல்லாது
கடந்து போகிறது பொங்கலின் கூடு....!

முட்கம்பிச் சிறைகளுக்குப் பின்னால்
மூன்று லட்சம் தமிழர்கள்!
உறைந்த விழிகள்
உதிர்க்கும் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறது பொங்கல்!

*** *** ***
நெற்றி முத்துக்கள்
முற்றி விளையும் நெல்மணிகள்!
காலடி விரல்கள் கிளைக்கும்
கரும்பின் வேர்களாய்....
பச்சையும் மஞ்சளும் பயிராகும்
நெஞ்சின் பாத்திகளில்.....

மரபணு மாற்றப்பட்ட
விதைகளின் திணிப்பில்
பறிபோகும் பாரம்பரியங்கள்!

விஷத்தை அள்ளி அள்ளி
விழுங்கச் சொல்லும் அவலம்;
சுவடுகள் கருகும் சூரிய மேய்ச்சலில்.....
நாக்குகள் பொசுங்கும்
தாம்பூலத் தரிப்புகளில்...!

லாட ஆணிகளை உதிர்த்து
நடக்கும் காளைகளின்
கால்களெங்கும் கொப்புளங்கள்!

நெல்லும் கரும்பும் விளைத்தும்
பதருக்குள் அரிசி பொறுக்கி
புலம்பல் நுரைத்துப் பீறிட
’பொங்கலோ பொங்கல்...!’

*** *** ***
பால்யநாட்களின் பொங்கல் தினத்தில்
தூங்கும் போது எழுப்பி – அம்மா
பாயில் போட்டுப் போன
தோசையின் இளஞ்சூடு
இன்னும் இருக்கிறது நெஞ்சில்....


அதிகாலைக் குளிரின் நடுக்கத்தை
அனுபவித்தபடி
சோளத் தட்டையின்
நுனி மடக்கி காரோட்டி
காடுகளுக்குப் போய் காப்புகள் கட்டி....

வீதியெங்கும் அலைந்து
வீடுகளின் கோலங்களை அளந்து
சாணி உருண்டையில் சொருகிய
பூசணிப் பூக்களாய் மலர்ந்து....

கூட்டாளிகளோடு
பலகாரங்களைப் பகிர்ந்து
புதுச் சட்டைகளைப் பற்றிப் பேசி
அக்காக்களின் மடிகளில்
அமர்ந்தபடி கதைகள் கேட்டு...

பொங்கல்பானையில் பூத்த நுரைக்கு
குலவையிடத் தெரியாமல் கூச்சலிட்டு
பூஜை முடியும் வரை
பொறுக்க முடியாமல் பொருமி
விரயமாகும் தேங்காய்த் தண்ணீருக்காய் வருந்தி..

மாடுகளைக் குளிப்பாட்டும் சாக்கில்
ஒரே நாளில் நிறையத் தடவைகள்
குளிர்ந்த நீரில் குதியாலம் போட்டு
கொம்பு வர்ணங்களில்
கட்சி கட்டி சண்டையிட்டு....

பொங்கலும் கரும்பும்
மாடுகளுக்குக் கொடுத்து – அவை
ஆசை ஆசையாய் உண்பதை ரசித்து....
இன்னும் இன்னுமென
ஏராளமாய் நினைவுகள்....!

எப்போது வருமென்று ஏங்கி
வந்து போனதும்
அதற்குள் முடிந்து போனதே
என்று வருந்தி
அடுத்த பொங்கலுக்காய்
ஆவலோடு எதிர் பார்ப்பதெல்லாம்
சிறுவயதிற்கே உரிய
சீதனங்கள் போலும்....!

Monday, January 4, 2010

கவிதை - பெய்யெனப் பெய்யும்

கோயிலுக்கெல்லாம் போவதில்லை அவள்;
கொழுநன் தொழுவதெல்லாம்
கழுவேற்ற வேண்டிய
சடங்குகளில் ஒன்றென்பாள்;
பெண்ணுக்கு அழகென்று வள்ளூவன்
பரிந்துரைத்த பழக்கங்களையெல்லாம்
தீயிலிட வேண்டுமென்பாள் தீவிரமாய்!
ஆயினும்......
காகிதப் பூக்களே கவர்ச்சி என்றும்
கட்டிடங்களின் பிரம்மாண்டமே
நாட்டின் வளர்ச்சி என்றும்
கற்பிதங்கள் நிறைந்த
கடும்பாலை வெளியில் வாழ நேர்ந்த
வெயில் கொளுத்திய ஒரு நாளின்
மங்கிய மாலை வேளையில்
வெளியில் கிளம்பிய புருஷனிடம்
மழை பெய்யுமின்று மறக்காமல்
குடைகொண்டு போங்களென்றாள்;அவன்
மறுத்தபோதும் திணித் தனுப்பினாள்!
கட்க்கத்தில் கனக்கும் குடையுடன்
மனைவியை மனதுள் வைதபடி
வெளியில் சென்ற வேலை முடித்து
வீட்டுக்குத் திரும்பும் வழியில்
அதிசயமாய்ப் பிடித்தது அடைமழை!
துளியும் நனையாமல் வீடு திரும்பியதும்
மனைவியிடம் கேட்டான்
எப்படி அறிந்தாய்
இன்று மழை பெய்யுமென்று?
நீயும் பத்தினி தான்........!
முறைத்தபடி சொன்னாள் அவள்;
மன வலியை
முகத்தில் படிக்க முடிவது போல்
மழைவழி அறிய வானத்தை
வாசிக்கத் தெரிந்தால் போதும்.....!
பத்தினி என்கிற
பாசாங்குகள் தேவையில்லை;