Wednesday, October 12, 2011

கவிதை - சாலையில் சில கடவுள்கள்

அரக்கன் ஒருவனை காலில் போட்டு மிதித்தபடி
களிநடனம் புரிந்து கொண்டிருந்தாள்
காளி தேவி ஒருநாள்!

சஞ்சீவ மலை தூக்கி
பயணப் பட்டுக் கொண்டிருந்தார்
அனுமன் இன்னொருநாள்......!

வில்லேந்தி போர்புரிய
தயாராக நின்றிருந்தார்
இராமபிரான் பிறிதொருநாள்....!


சிவபெருமான் பார்வதி தேவியுடன்
தரிசனம் தந்து கொண்டிருந்தார்
மற்றொரு நாள்.....!

வள்ளி தெய்வானையுடன்
வரம் தரும் திருக்கோலத்தில்
முருகன் ஒருநாள்....!


சிலுவையில் அறையப்பட்டு
சிரத்தையுடன் இயேசுவும்
இரத்தம் உதிர்த்து நின்றார்
இன்னொருநாள்....!

மற்றொரு நாள்
உடம்பெங்கும் அம்மைத் தழும்புகளாய்
சில்லறைக்காசுகள் சிதறிக் கிடக்க
கைதூக்கி ஆசிர்வதித்தபடி
கனிவுடன் நின்றிருந்தார் ஷீரடி பாபா!

அதே இடத்தில்
கடவுள்களுக்கு உயிர் கொடுத்த
தெரு ஓவியனும்
இறந்து கிடந்தான் ஒருநாள்
கேட்பாரற்று.....!


No comments:

Post a Comment