Monday, October 11, 2010

கவிதை - இரவின் நிழல்

அனேக நேரங்களில் - நீயென்
தோளில் முகம் புதைத்து
அழுவதில்
ஆறுதல் அடைந்திருக்கிறாய்;

சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என்
மடியில் படுத்துறங்குவதில்
மகிழ்வு கண்டிருக்கிறாய்;

வெறுமை தகிக்கும் உன்
விடுதிச் சூழலிலிருந்து விடுபட்டு
எங்களின் வீட்டிற்கு
ஓடி வரும் போதெல்லாம்
துப்பட்டாவையும் துயரங்களையும்
களைந்து வீசி விட்டு
விடுதலை பெற்ற
சிறுபறவையாய்
சந்தோஷச் சிறகை விரித்திருக்கிறாய்.....

இப்போதெல்லாம் நீ
என் அருகில் அமரவே
அச்சப்படுகிறாய்;

தனித்திருக்கும் தருணங்களைத்
தவிர்க்கவே விரும்புகிறாய்;

கண் பார்த்து நான் பேசினாலும்
துப்பட்டாவை அடிக்கடி
இழுத்து விட்டு இம்சிக்கிறாய்;

இருவருக்கும் இடையில்
இப்போது விழுந்து கிடக்கிறது;
எனக்குள்ளிருந்த
ஆணெனும் மிருகம் விழித்து
உலாவத் தொடங்கிய
கனத்த இரவொன்றின் நிழல்
கடக்கவே முடியாதபடி.....

No comments:

Post a Comment