Wednesday, August 3, 2016

இன்றைக்கு ஒரு சிறுகதை:

நீண்ட நாட்களாக ப்ளாக் பக்கமே வராமல் இருந்து விட்டேன்.
இனி அவ்வப்போது வந்து பத்திரிக்கைகளில் பிரசுரமான என் ஆக்கங்களை இங்கே பதிவிடப் போகிறேன்.

தினமணியும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி 2016ல் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை இது.

சிறுகதை:
திரைகடலோடியும்….

                    இன்னும் இரண்டு நாட்களில் வரப் போகிற பொங்கல் பண்டிகையை எப்படி எப்படி எல்லாமோ கொண்டாடலாம் என்று மனம் நிறைய கனவுகளையும் அதற்கான திட்டமிடல்களையும் கொண்டிருந்தான் மாடசாமி. அவனுடைய சீன முதலாளியிடம் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டு மென்று கேட்டு அவரும் சம்மதித்திருந்தார்.
                       ஆனால்  பொங்கலுக்கு முந்தின தினம் அவன் சூப்பர் மார்க்கெட்டில்  பணியில் இருந்த போது காவல்துறை மேப்படியான்களால் சுற்றி வளைக்கப் பட்டான். அவர்கள் அவனிடம் பாஸ்போர்ட்டையும் ஒர்க் பெர்மிட்டையும் காண்பிக்கச் சொன்னார்கள்.                            
                       மாடசாமியிடம் அவன் மலேசியாவில் தங்கி வேலை செய்தற்குத் தேவையான எந்த விசாவும் இருக்க வில்லை.  அவனிடம் இருந்ததோ இரண்டு வருஷங்களுக்கு முன்பே காலாவதியாகிப் போன டூரிஸ்ட் விசா மட்டுமே. வந்தவர்கள் நேரிடையாக மாடசாமியை மட்டும் தான் சுற்றி வளைத்தார்கள்.
                       அங்கிருந்த மற்றவர்கள் யாரிடமும் அவர்கள் எதையும் காண்பிக்கக் கூடச் சொல்லவில்லை. யாரோ மாடசாமியைப் பற்றி அவர்களுக்குத் தகவல் கொடுத்துத் தான் அவனை மட்டும் குறி வைத்து வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்தது.
                       லியோஸிங் தான் காட்டிக் கொடுத்திருப்பான் என்று மாடசாமி யூகித்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் கடுமையான சண்டை. வாக்குவாதத்தின் போது லியோ மாடசாமியிடம், “நீயே திருட்டுத் தனமா இங்க தங்கியிருக்குற! நாளைக்கே போலீஸ் வந்து புடிச்சா உன்னை உன் நாட்டுக்கே அடிச்சுத் துரத்தீடும்..” என்று இளக்காரமாய்ப் பழிக்க, மாடசாமியும் பதிலுக்கு அவனைத் திட்டினான்.
                       ”எனக்காவது போலீஸ் புடுச்சா போறதுக்கு சொந்த நாடுன்னு ஒண்ணு இருக்கு. ஆனா உனக்குன்னு ஒரு நாடு இருக்கா? எந்த தேசத்துலயாவது உனக்கு வேர்கள் இருக்கா? நீ பிறப்பால் சீனன். ஆனா சீனாவுக்கு உன்னால போக முடியாது. ஏன்னா நீ அதோட பிரஜையே இல்லை. மலேசியாவுலயும் நீ மண்ணின் மைந்தனில்லை. இரண்டாம் தர மூன்றாம் தரகுடிமகன் தான்…..”
                       மாடசாமியின் வார்த்தைகள் லியோவைக் கடுமையாக சீண்டி விட்டிருக்க வேண்டும். அதற்கப்புறம் அவன் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான். அதை மனதில் வைத்திருந்து அவன் தான் மாடசாமி பற்றிய தகவலை போலீஸுக்குச் சொல்லி மாட்டி விட்டிருப்பான் என்று நினைத்துக் கொண்டான்.
                       சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு எத்தனை கனவுகளோடு அவன் மலேசியாவிற்குப் பயணமானான். அவனுடைய அப்பா அவருடைய கையிருப்பில் இருந்த மொத்த சேமிப்பையும் போட்டு அவனுடைய தங்கையின் திருமணத்திற்காக வாங்கிச் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் விற்று அப்புறமும் ஒரு லட்ச ரூபாய் கடனை வாங்கி மொத்தமாய் இரண்டு லட்ச ரூபாய் கட்டி மலேசியாவிற்கு வந்திருந்தான்.
                       அலாவுதீன் டிரேடிங் இண்டர் நேஷனல் என்ற  கம்பெனியில் கணக்காளர் வேலை என்றும் – அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கூட அடித்துக் கொடுத்திருந்தார்களே  – தங்கும் அறை  தந்து மாதம்  அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் தருவார்கள் என்றும் சர்க்கரையாய்ப் பேசினானே கோயம்புத்தூர் ஏஜெண்ட்.
                       “மலேசியாவிற்குப் போய் இறங்கியதும் நான் வேலை பார்க்கப் போகிற கம்பெனிய ஈஸியா கண்டு பிடிச்சுப் போயிடலாமா ஸார்…. கம்பெனி அட்ரஸக் காண்பிச்சா வழி சொல்வாங்களா?” என்று மாடசாமி அப்பாவியாய்க் கேட்டதும் எத்தணை ஆரவாரமாய் சிரித்தான் அந்த படுபாவி.
                       ”நீ ஏன் யாரையும் தேடிப் போகனும்? நீ என்ன சாதாரணக் கம்பெனிக்கா வேலைக்குப் போற! உன்னைத் தேடி ஆளு வருமப்பா. நீ ஏர்போர்ட் போய் இறங்கியதும் கம்பெனிக்காரன் வந்து உன்னை கார் வச்சு அழைச்சிட்டுப் போவான். பயப்படாமப் போ…..”என்றானே!
                       ”அதுக்கில்ல ஸார். என்னை அவங்களோ நான் அவங்களையோ முன்னப் பின்னப் பார்த்ததில்லயே, அப்புறம் எப்படி ஒருத்தரை ஒருத்தர் கண்டு பிடிச்சிக்கிறதுங்குறதுக்காகத் தான் கேட்டேன்.”என்றான் மறுபடியும் தன் அசட்டுத்தனம் வழிந்தோடும் வார்த்தைகளில்.
                       ”என்னப்பா நீ இவ்வளவு கூமுட்டையா இருக்குற? கம்பெனி பேர எழுதி அதுக்குக் கீழ வெல்கம் மிஸ்டர் நாச்சிமுத்து மாடசாமி ஃப்ரம் இண்டியான்னு எழுதி யிருக்கிற அட்டைய கையில தூக்கிப் பிடிச்சிக்கிட்டு கம்பெனி ஆள் நிப்பாங்கப்பா. அதப் பார்த்ததும் நீ தான் அவங்ககிட்டப் போய் நான் இன்னார்னு அறிமுகப் படுத்திக்கிடனும். இதுல என்ன பெரிய குழப்பம்!
                       சீனாக்காரனோ மலாய்க் காரனோ தான் வந்திருப்பான். அவன்கிட்டப் போய் தமிழ்ல பேசிக்கிட்டு நிக்காத. அப்புறம் உன்னை அனுப்பி வச்ச என் கம்பெனி மானம் கப்பல்ல ஏறிடும். ஸ்டைலா இங்கிலீஸ்ல பேசு. வாரத்துக்கு குறைஞ்சது நாலு பேர அனுப்பிக்கிட்டு இருக்கிறேன். யாருமே இப்படிப் கேனத்தனமா கேள்வி கேட்டதில்லப்பா….” என்று  ரொம்பவும் கோபித்துக் கொண்டார்.
                       அப்புறமும் அவனின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அலை அடித்தன. முதல் மாதம் சம்பளம் வாங்குவது வரையான சாப்பாட்டுச் செலவுகளுக்கு என்ன செய்வது? கம்பெனியில் அட்வான்ஸ் தருவார்களா? மலேசிய உணவுகள் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளுமா? ரூமில் ஸ்டவ் வைத்து சமைத்துக் கொள்ள அனுமதிப்பார்களா? என்று….. ஆனால் ஏஜெண்ட் கோபப்படுவார் என்பதால் கேட்கவில்லை..
                       கோயம்பத்தூர்க்காரர் சப் ஏஜெண்ட் தான். மெயின் ஏஜெண்ட் சென்னையில் இருக்கிறார். அவரிடம் போய் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னைக்குக் கிளம்பினான். அங்கு போனபின்பு அவர்கள் இவன் பேசுவதற்கே வாய்ப்புத் தரவில்லை.
                       இவனிடம் மிச்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் விமான டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் கையில் திணித்து ஜல்தி ஜல்தி என்று ஹிந்தியில் பேசி அவனை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாய் இருந்தார்கள்.
                       அதனால் கேள்விகளை யெல்லாம் மனதுக்குள்ளேயே புதைத்து விட்டு ஏர் போர்ட்டிற்குக் கிளம்பிப் போனான். அங்கு போய்த் தான் பாஸ்போர்ட்டைப் பிரித்து விசா முத்திரை இடப்பட்டிருந்த பக்கத்தைப் பார்த்தான். ஆங்கில எழுத்துக்கள் தான் ; ஆனால் வார்த்தைகள் எதுவும் அர்த்தமாக வில்லை. மலாய் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது என்பதையும் ஆங்கில லிபியில் தான் அவர்கள் எழுதுவார்கள் என்பதையும் மலேசியாவிற்குப் போய் சில நாட்களுக்கு அப்புறம் தான் அவன் அறிந்து கொண்டான்.  
                       கோலாலம்பூரில் இறங்கியதும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது அவனுக்கு. இவனுடன் விமானத்தில் பயணித்தவர்களைப் பின் தொடர்ந்தே போனதில் ஒரு வழியாய் விமான நிலையத்திற்கு வெளியே வந்து சேர்ந்து விட்டான். ஆனால் அங்கு அவனை வரவேற்கத் தான் யாரும் வந்து காத்திருக்கவில்லை. தாமதமாக வருவார்களோ என்று அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான்.
                       மலேசியாவில் நேரம் பத்து மணியைக் கடந்த பின்பும்  யாரும் வரவில்லை என்றதும் மாடசாமிக்கு பயம் வந்தது. அகோரமாய் பசிக்க வேறு செய்தது. ஒரு டாக்ஸி பிடித்து டிரைவரிடம் கம்பெனி அவனுக்குத் தந்திருந்த  அப்பாயிண்ட் மெண்ட் லெட்டரிலிருந்த முகவரியைக் காண்பித்தான்.
                       டாக்ஸி டிரைவரும் மாடசாமியை ஏற்றிக் கொண்டு ரோடு ரோடாக அலைந்தும் ஆர்டரில் இருந்த முகவரியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனும் சலித்துப் போய் ஜலான் மஜீத் இந்தியா என்பது இது தான்…. ஆனால் இங்கு அந்தக் கம்பெனி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்று ஓட்டை ஆங்கிலத்தில் சொல்லி ஒரு மசூதிக்கு அருகில் இறக்கி விட்டுவிட்டுப் போய் விட்டான்.
                       கொஞ்ச தூரம் நடந்த போது குறிஞ்சி உணவகம் என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை கண்ணில் பட்டதும் புதுத் தெம்பு வந்தது. மரத்துப் போயிருந்த பசியும் மறுபடியும் உயிர் பெற்றது. பொடி எழுத்தில் வாழை  இலையில் உணவு பரிமாறப்படும் என்றும் எழுதப் பட்டிருந்தது.
                       கல்லாவில் மினுமினுக்கிற கறுப்பில் உட்கார்ந்திருந்தவர் நிச்சயமாக தமிழராகத் தான் இருப்பார் என்றும் தோன்றியது. உள்ளே போய் உட்கார்ந்ததும் விசாரிக்க வந்த பரிசாரகப் பெண்ணிடம் ”ஒரு சைவ சாப்பாடு....” என்றான் மாடசாமி.
                       பரிசாரகப் பெண் ”தண்ணி என்ன வேண்டும்?” என்றாள். மாடசாமிக்குப் புரியவில்லை. தண்ணீரைத் தானே குடிப்பார்கள்; ஒருவேளை இந்த ஊரில் சல்லிசாகக் கிடைக்கிற தென்று பெட்ரோலைக் குடித்துக் கொண்டு சாப்பிடுவார்களோ என்னவோ என்று நினைத்துக் கொண்டு, “நீங்க என்ன கேட்குறீங்க...? எனக்கு உங்க கேள்வியே வெளங்கலையே!” என்றான்.
                       ”சாப்புடுறப்ப குடிக்க என்ன தண்ணி வேணும்....?” என்றாள் அவள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக. ”தண்ணி பச்சத் தண்ணி தான் வேணும்...” என்றான் மாடசாமி மறுபடியும். அவள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, இவர்களின் விளையாட்டை ஒரு நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து வந்தார்.
                        “ஊருக்குப் புதுசா? ஊரு நாட்டுலருந்து வந்துருக்கீங்களோ? அவள் குடிக்க காஃபி, டீ, கூல்டிரிங்ஸ் மாதிரி ஏதாச்சும் வேணுமான்னு கேட்குறா....” என்று விளக்க மளித்தார்.
                       ”எதுவும் வேண்டாம்; தண்ணி போதும்....” என்றான். அவர் அவளிடம் “ஐஸ் கொஸாங் கொண்டு வா...” என்று சொல்லவும் அவள் தலையில் அடித்துக் கொண்டு போனாள். சிறிது நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீர் கொண்டு வந்து வைத்தாள். மலேசியப் பணம் ரிங்கெட்டை தமிழில் வெள்ளி என்று அழைக்கிறார்கள் என்றும் அந்த உணவகத்திலிருந்து அறிந்து கொண்டான்.
                       சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் உட்கார்ந்தவரிடம் போய் பணத்தைக் கொடுத்து விட்டு, “காலையிலருந்து அட்ரஸ் தேடி அலையுறேன். கண்டுபிடிக்கவே முடியலைங்க. உங்களுக்காச்சும் தெரியுதான்னு பாருங்க…”என்று சொல்லி, அவரிடம் முகவரியைக் காண்பித்தான்.
                       “நீங்க காண்பிக்குற சீட்டுல இருக்குறதுல வீதி பேரு மட்டும் தான் நிஜம். மத்ததெல்லாம் பொய்யின்னு தான் தோணுது. ஆனா நீங்க எதுக்கும் பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபீசுல போயி விசாரிச்சுப் பாருங்க….” என்று தபால் நிலையம் போவதற்கு வழி காண்பித்து அனுப்பி வைத்தார்.
                       தபால் நிலையத்தில் அலாவுதீன் டிரேடிங் இண்டர் நேஷனல் என்ற பெயரில் கோலாலம்பூரில் கம்பெனி எதுவும் இல்லை என்று உறுதியாய் சொன்னார்கள். மாடசாமிக்கு தான் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பது புரிந்தது. மறுபடியும் குறிஞ்சி உணவகத்திற்குப் போய் அழுதான்.
                       ”உங்களப் போல ஊரு நாட்டுலருந்து மாசத்துக்கு நாலஞ்சு பேரு ஏஜெண்டுகளால ஏமாத்தப்பட்டு இங்க வந்துக்கிட்டுத் தான் இருக்குறாங்க. அழுது ஒண்ணும் ஆகப் போறதில்ல. பேசாம ஊருக்குத் திரும்பிப் போயிடுங்க…” என்றார்.
                       ”ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு விமான டிக்கெட்டுக்குக் கூட என்கிட்ட பணம் இருக்காதுங்களே…. என்கிட்ட மிச்சமிருக்கிற பணம் ஒரு நாலஞ்சு நாளைக்கு சாப்பாட்டுச் செலவுக்குக் கூட வராதே….!” என்றான்.
                       அவனுடைய பாஸ்போர்ட்டையும் விமான டிக்கெட்டையும் வாங்கிப் பார்த்தவர், “இப்படி விவரம் தெரியாம வெள்ளந்தியா இருக்கீங்களே தம்பி. நீங்க இங்க வந்துருக்கிறது டூரிஸ்ட் விசாவுல. அதுக்கு ரிட்டன் டிக்கெட் காண்பிச்சாத் தான் விசாவே தருவான். அதனால டிக்கெட்டுக்குப் பணமெல்லாம் தேவையில்ல; ஏர்லைன் ஆபீஸுக்குப் போயி உடனே திரும்பிப் போகனும்னு சொல்லுங்க. அவங்க ஏற்பாடு பண்ணுவாங்க….” என்றார் அவனை விசித்திரமாகப் பார்த்தபடி.
                        ”ரெண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி ஏஜெண்டுக்குக் கட்டிட்டு இங்க வேலைக்குன்னு வந்துருக்கேங்க. திரும்பிப் போனா வீட்டுல எல்லோரும் செத்துப் போயிடுவாங்க. நான் பி.காம் படிச்சிருக்கேங்க…. அதுக்கு இங்க வேல எதுவும் கிடைக்காதா?”என்றான் அழுதபடி.
                       ”அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல தம்பி…..” என்று கொஞ்ச நேரம் யோசித்தவர், ”நம்ம ஊர்க்காரப் பிள்ளைங்கிறதால ஒரு உதவி வேணா பண்றேன்…. நீங்க டூரீஸ்ட் விசாவுல வந்துருக்குறதால முப்பது நாட்களுக்கு மலேசியாவுல இருக்கலாம். அப்புறமும் அதை ஒரு மாசத்துக்கு நீட்டிக்கலாம்.
                       என் ஓட்டல்லயே தங்கி சாப்பிட்டுக்கிட்டு என்கிட்டயே ஏதாவது வேலைகளை செய்யுங்க. வாரம் ஒருநாள் லீவு தர்றேன். ஏதாவது வேலை கிடைக்குமான்னு கம்பெனிகளுக்குப் போய் விசாரிச்சுப் பாருங்க. ரெண்டு மாசம் பாருங்க. கிடைக்கலைன்னா ஊருக்குத் திரும்பிப் போயிடுங்க.….”என்றார்.
                       அப்போது அந்த ஹோட்டல்காரர் மாடசாமிக்குத் தெய்வமாகத் தெரிந்தார். ஹோட்டல் என்றும் பாராமல் மடாரென்று அவர் காலில் விழுந்தான். எல்லோரும் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “அய்யோ, என்ன தம்பி இது….”என்று அவனை எழுப்பி ஒரு பரிசாரகனை அழைத்து, அவனை உள்ளே அழைத்துப் போகச் சொன்னார்.
                       மாடசாமி தன்னுடைய அப்பாவிற்கு தாங்கள் ஏமாற்றப் பட்டதை ஊருக்குப் போகும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டதாக பட்டும் படாமல் கடிதம் எழுதினான்.
                       ஹோட்டல்காரர் ரொம்பவும் பயந்தார். போலீஸ் நடமாட்டம் தெருவில் தெரிந்தாலே அவனை உள்ளே போய் பம்மிக் கொள்ளச் சொன்னார். ஏனென்று விசாரித்த போது ”வேலைக்கான விசா இல்லாமல் இங்க வேலை செய்யக் கூடாது தம்பி. மேப்படியான்கள் புடிச்சிட்டா எனக்கும் பிரச்னை. உனக்கும் பிரச்னை…”என்றார்.
                       உள்ளூர் தினசரியை வாங்கி சலிக்காமல் வேலை தேடியும் எதுவும் அமைய வில்லை. யாரும் நேர்முகத் தேர்வுக்குக் கூட அழைக்கவில்லை. கம்பெனிகளில் நேரிடையாகப் போய் விசாரித்த போதும் பி.ஆர். ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களுக்குத் தான் வேலை தரமுடியும் என்று இவனுக்கு வேலை தர மறுத்து விட்டார்கள்.
                       இரண்டு மாதங்கள் முடியப் போகும் தருணத்தில்  ஹோட்டல்காரர் மாடசாமி இதுவரை வேலை செய்ததற்காக எண்ணூறு வெள்ளியை சம்பளமாகத் தந்து, ”பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க தம்பி….”என்று அனுப்பி வைத்தார்.
                       “நான் உங்க கிட்டயே தொடர்ந்து வேலை செய்றேன்ங்க. இதேபோல ஏதாவது சம்பளம் போட்டுக் குடுங்க போதும்….” என்று கெஞ்சினான் மாடசாமி.
                       ”அதெல்லாம் தப்பு தம்பி. உன்கிட்ட டூரிஸ்ட் விசா கூட அவகாசம் முடியப் போகுது. மாட்டிக்கிட்டீன்னா கடுமையான பெனாலிட்டி போட்டுருவாங்க. கட்ட முடியலைன்னா பெரம்படி வாங்கி அஞ்சாறு வருஷம் ஜெயில்லயும் கிடக்கனும்….”என்று வம்படியாய் அவனை வெளியேற்றி விட்டார்.
                       ஹோட்டல்காரர் தேவையில்லாமல் பயப்படுகிறார் என்று மாடசாமிக்குத் தோன்றியது. இந்தோனேஷியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் மற்றும் அக்கம் பக்கத்து நாடுகளிலிருந்தும் எந்த விதமான விசாவும் இல்லாமல் இங்கு வந்து தினக்கூலிக்கு எடுபிடிகளாக எவ்வளவோ பேர் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அவன் தீவிரமாய் வேலை தேடி அலைந்த நாட்களில் அறிந்து கொண்டான். அவனும் அவர்களில் ஒருவனாக மாறிவிட முடிவு செய்தான்.
                       பெட்ரோல் பங்குகளிலும் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலைகள் நடைபெறும் இடங்களிலும் போய் தொடர்ந்து விசாரித்த போது தேஜா பெட்டாலிங் என்னும் இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மிகப் பெரிய கட்டுமானப் பணியில் பெரியாளாக வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்கள். தினக்கூலி 40 வெள்ளி. பக்கத்தில் இருந்த லேபர்ஸ் கூடாரத்திலும் தங்கிக் கொள்ள அனுமதித்தார்கள்.
                       வாழ்க்கை பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல் ஓடத் தொடங்கியது. வேலை தான் மிகவும் கடினமாக இருந்தது. தினசரி 12 மணி நேரத்திற்கும் மேல் உழைக்க வேண்டி இருந்தது. ஓவர் டைமிற்குக் கூலி கிடைத்தாலும்  உடம்பெல்லாம் வலித்தது. ஆனாலும் மாதந் தவறாமல் வீட்டிற்குக் கணிசமான பணம் அனுப்ப முடிந்ததில் மாடசாமிக்கு கவலை இல்லாமல் காலம் கழிந்து கொண்டிருந்தது.
                       இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவனுக்கு வார விடுமுறை. அந்த நாட்களில் லிட்டில் இந்தியா பகுதிக்குப் போய் கடை வீதிகளில் அலைந்தும் தியேட்டர்களுக்குப் போய் தமிழ் சினிமாக்கள் பார்த்தும் சந்தோஷமாய்க் கழித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தான்.
                       அப்படி ஒரு விடுமுறை தினத்தில் தான் மாடசாமி கலைச்செல்வியை சந்தித்தான். அந்த சந்திப்பு அவனுடைய வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்க வில்லை.
                       அன்றைக்கும் லிட்டில் இந்தியாவில் சுற்றி அலைந்து விட்டு வேலை செய்யும் இடத்திற்குத் திரும்புவதற்காக பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான்.
                       பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டி இருந்தது. அப்படி ஒன்றும் நெரிசல் இல்லை. அவனிடமிருந்து கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த பெண் கொஞ்சம் வசீகரமாய் இருந்தாள். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.
                       பஸ்ஸின் குலுக்கலில் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன் தெரியாமல் மோதுவது போல் வேண்டுமென்றே  அவளை உரசியபடியே பயணித்தான். மாடசாமி அதை ஒரு நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
                       அவள் திடீரென்று அவளை இடித்துக் கொண்டு நின்றிருந்தவனிடம் திரும்பி மெல்லிய குரலில் “தமிழ்நாட்டுலருந்து வந்துருக்கீங்களோ?” என்றாள் தமிழிலேயே. அவனும் ஆச்சர்யமாக “ஆமா, எப்படி கண்டு பிடிச்சீங்க....” என்றான்.
                       “வேற யாரும் பஸ்ஸுல பொண்ணுங்கள இப்படி இடிக்க மாட்டாங்க.....” என்றவள் சிடுசிடுக்கவும் மிகவும் கூசிப்போய் மெதுவாய் அங்கிருந்து நகர்ந்து தூரமாய்ப் போய் நின்று கொண்டான்.
                       ஆச்சர்யமாக அவள் மாடசாமி இறங்கிய ஸ்டாப்பிங்கிலேயே இறங்கவும் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். ”அதெப்படி நீங்க தமிழ்நாட்டுலருந்து வந்துருக்க எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா இடிராஜாக்கள்ன்னு சொல்லலாம்.....” என்றான்.
                       ”ஓ.... நீங்களும் தமிழ்நாட்டுலர்ந்து தான் வந்துருக்கீகளோ.....” என்றாள். அவள் பேசுகிற தமிழ் வித்தியாசமாக இருந்தது. வார்த்தைகளை இழுத்து இழுத்துப் பேசினாள்.
                       “ஆமா. நீங்க சொல்ற இடிராஜாக்கள் எல்லாம் சென்னையிலயும் அதைச் சுத்தியிருக்கிற பகுதியிலயும் தான் இருப்பாங்க. எங்க பக்கத்துல யெல்லாம் பொண்ணுங்கள இடிச்சா அவ்வளவுதான். எலும்பை உடைச்சுக் கையில கொடுத்துருவாங்க பார்த்துக்கிடுங்க....” என்றான்.
                       ”அப்படியா.... நீங்க எந்தப் பகுதியிலருந்து வாறீக....” என்றாள். மாடசாமி சேலம் பக்கதிலருந்து வருவதாகச் சொன்னான். ஒரு பஸ் வரவும் “பை... லா....” என்றபடி கைகளை ஆட்டி ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிப் போய் விட்டாள்.
                       சில நாட்களிலேயே அதே பெண்ணை மீண்டும் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அன்றைக்கு ஒரு மழைநாள். ரொம்ப நேரமாய்க் காத்திருந்த போதும் பஸ் வந்த பாடில்லை. தொப்பலாய் நனைந்து, ஈரமும் குளிருமாய் வெடவெடத்தபடி பஸ்ஸிற்குக் காத்திருந்து சலித்த போது தான் அவள் இவனிடம் வந்து சிநேகதிமாய் சிரித்து, “நீங்க தேஜா பெட்டாலிங் தானே போக வேண்டும்?” என்றாள்.
                       மாடசாமி அப்போது தான் அவளைக் கவனித்தான். இவ்வளவு நேரம் இவள் எங்கிருந்தாள் என்று எண்ணியபடி “ஆமாம், அதுக்கென்ன?” என்றான். “நாம் ஒரு டாக்ஸி பிடித்து கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளலாமா?” என்றாள். அவனுக்கும் அது நல்ல யோசணையாகத் தோன்றவே சரி என்றான்.
                       அவளே டாக்ஸி பிடித்தாள். இவன் டிரைவருக்குப் பக்கத்தில் உட்காரப் போகவும் அவனை உரிமையாய் அழைத்து பின் ஸீட்டில் அவளுக்குப் பக்கத்திலேயே உட்காரச் சொன்னாள்.
                       டாக்ஸி போய்க் கொண்டிருந்த போது, “நாம தனித்தனியா உட்கார்ந்திருந்தா, டிரைவர் நம்ம ரெண்டு பேரும் வேறவேற ஆட்கள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு  முழுக் கட்டணத்தையும் தனித்தனியா புடுங்கிடுவான். அதான்...” என்றாள். தன்னை கலைச்செல்வி என்று அறிமுகப் படுத்திக் கொண்டவள் தங்களுக்கும் பூர்வீகம் தமிழ்நாடு தான் என்றாள்.
                       ”எந்த ஊர்...” என்ற போது “அதெல்லாம் எங்க அப்பாவுக்குத் தான் தெரியும். அவர் தான் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை போயிட்டு வருவார். டாய்லெட் கூட இல்லாத ஊர்ங்கிறதால நான் போறதில்ல; ரொம்ப சின்ன வயசுல ரெண்டொரு தடவை போயிட்டு வந்த ஞாபகம் இருக்கு...” என்றாள்.
                       மாடசாமி இறங்குமிடம் வருவதற்கு முன்பே ஓரிடத்தில் டாக்ஸியை நிறுத்தச் சொல்லி மீட்டரிலிருந்த கட்டணத்தில் பாதிக்கும் சற்று அதிகமாகவே அவனிடம் தந்து விட்டு இறங்கிப் போனாள்.
                       ஒருநாள் சினிமாவிற்குப் போயிருந்த போது அவளும் வந்திருந்தாள். அந்த தியேட்டர் காம்ப்ளெக்ஸில் சுந்தர புருஷன் மற்றும் காதல் கோட்டை என்று இரண்டு தமிழ்ப் படங்கள் போட்டிருந்தார்கள். இவன் சுந்தரபுருஷன் பார்க்கலாம் என்று போயிருந்தான்.
                       அவள் இவனிடம் வந்து “காதல் கோட்டைக்கு எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிடுங்க....” என்று பணம் கொடுத்தாள். அப்போது தான் மாடசாமியின் மனதுக்குள் பெரு மழை பெய்தது போல் சிலிர்ப்பாய் இருந்தது.  காதல் கோட்டை மாதிரியான சினிமாவை ஒரு பெண்ணுடன் சேர்ந்து பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரொம்பவும் சந்தோஷமாக இரண்டாம் முறையாக அந்தப் படத்தைப் பார்த்தான். தியேட்டரில் தான் இருவரும் சரளமாக உரையாடத் தொடங்கினார்கள்.
                       கலைச்செல்வி அவனைப் பற்றி விசாரிக்கவும் ஏனோ அவளிடம் பொய் சொல்லத் தோன்றாமல்  எல்லாவற்றையும் சொன்னான். அடுத்த நாளே கலைச்செல்வி மாடசாமியை அவளின் அப்பாவிடம் அழைத்துப் போனாள்.  
                       மாடசாமி ஏஜெண்டால் ஏமாற்றப்பட்ட விபரங்களை அவளின் அப்பாவிடம் சொல்லி ”பாவம்ப்பா பி.காம் படிச்சிட்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் ஸைட்ல எடுபிடி வேலைகள் செய்றாராம். உங்க செல்வாக்குல இவருக்கு நல்ல வேலை ஏதாச்சும் வாங்கிக் குடுங்கப்பா...” என்றாள்.
                       அவளுடைய அப்பா மலேசியாவில் பெரும் புள்ளி போலிருக்கிறது. உள்ளூர் தமிழ் அமைப்பிற்குத் தலைவராக இருந்தார். மலேசியாவின் பிரதான கட்சி ஒன்றிலும் பெயர் தெரிந்த நபராக அறியப் பட்டிருந்தார்.
                       ஒரே வாரத்தில் பெட்டாலிங் ஜெயாவிலிருந்த மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டில் அவன் கணக்காளர் ஆனான். மாதம் இரண்டாயிரத்து ஐநூறு வெள்ளி சம்பளம். அதே கட்டிடத்தில் ஒரு அறையில் நான்கு பேருடன் தங்கல். எல்லாவற்றையும் சாத்தியப் படுத்திய கலைச் செல்வியை மானசீகமாய் கடவுளாய் வழிபடத் தொடங்கினான்.
                       கால ஓட்டத்தில் அவளின் மீதிருந்த மரியாதையும் பக்தியும் காதலாய்க் கனிந்தது. ஆனாலும் அதை அவளிடம் வெளிப்படுத்தாமல் – ஒருவேளை அவனை வெறுத்து ஒதுங்கிப் போய் விடுவாளோ என்ற பயத்தினால் – மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டிருந்தான்.
                       இயற்கை விதியின் படி மனதின் அழுத்தம் தாங்காமல் ஒரு கட்டத்தில் அவனின் காதல் வெடித்து பஞ்சு பஞ்சாகி வெளிப்பட கலைச் செல்விக்கும் தெரிந்து விட்டது.
                       ”இதைச் சொல்வதற்கு ஏன் இத்தணை கால தாமதம்லா?” என்ற புன்முறுவலுடன் அவனின் காதலை ஏற்றுக் கொண்ட கலைச்செல்வி அவளின் அப்பாவிடம் போய் மாடசாமியை தனக்கு மணமுடித்து வைக்கும்படி மன்றாடினாள். ஒரே செல்ல மகள். அவளின் விருப்பத்தை அவர் ஒருநாளும் மறுத்ததே இல்லை. மாடசாமியை அழைத்துப் பேசினார்.
                       ”தம்பிக்கு தமிழ்நாட்டுல எந்த ஊர்ப்பா....?”
                       ”ஏற்கெனவே சொல்லியிருக்கேனே ஸார். சேலம். அங்க எங்க அப்பா காய்கறி, பழங்கள் சில்லரை வியாபாரம் பண்றார்....”
                       ”சேலம் நீங்க பொழைக்கிற ஊர். உங்களோட பூர்வீகம் எதுன்னு கேட்டேன்ப்பா.....”
                       ”பூர்வீகம்ன்னா சேலம் மாவட்டத்துல கம்மாளப்பட்டிங்கிற கிராமம் ஸார். அங்க இப்பவும் எங்க அப்பா வழி தாத்தா பாட்டி எல்லாம் இருக்குறாங்க....”
                       ”கம்மாளப்பட்டியா? எனக்கு நல்லாத் தெரியுமே அந்த ஊர. எங்களுக்குப் பூர்வீகம் நாமக்கல்லுக்குப் பக்கத்துல பாப்பம் பாளையம். எங்க பாட்டன் காலத்துலயே ஒரு பஞ்சத்துல தாக்குப் பிடிக்க முடியாம பொழப்புத் தேடி பினாங்குக்கு வந்து இங்கயே கால ஊனிக்கிட்டம்.
                       இருந்தாலும் நம்ம வேர்கள விட்டுறக் கூடாதுன்னு ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவையாச்சும் ஊர்ப்பக்கம் போய் வந்துக்கிட்டு தான் இருக்கிறேன். நாம ரொம்ப நெருங்கீட்டோம் பார்த்தியாப்பா! ரெண்டு ஊருக்கும் கொண்டான் கொடுத்தான் உறவுகள் எல்லாம் ஏற்கெனவே இருக்கே. உங்க ஊர்க்காரர் கோவிந்தசாமி எங்க ஊர்ல தான் பொண்ணு கட்டியிருக்கார். அவரத் தெரியுமாப்பா?”  
                       ”பெரிய கவுண்டரத் தெரியாதவங்க ஊர்ல யாரு இருப்பாங்க ஸார்....”
                       ”அப்படியா, சந்தோஷம். அவருக்கு ஏதாவது வகையில நீ சொந்தமாப்பா?”
                       ”அய்யோ, அவரு எங்க; நாங்க எங்க. அவரு வீடு இருக்கிற வீதியில எங்க தாத்தா காலத்துல எல்லாம் நாங்க செருப்புப் போட்டுக் கூட நடக்க முடியாது ஸார்....” என்றான் ஒரு நைந்த புன்னகையுடன்.  ”அப்படியா....” என்று ஆச்சர்யப்பட்டவர் அப்புறம் வேறு விஷயங்களுக்குத் தாவினார்.
                       ஒருவாரம் கழிந்திருக்கும். கலைச்செல்வியின் அப்பா மறுபடியும் வரச் சொல்லிப் போயிருந்தான். “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணினா கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ணும் போது உனக்கு விசா இல்லைங்குறது வெளியில தெரிஞ்சு அது சிக்கலாயிடுமேப்பா....” என்றார்.
                       ”பத்துமலை முருகன் கோயில்ல வச்சு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்கலாம்ப்பா. அப்புறம் நிதானமா இந்த ஊர் பொண்ணக் கல்யாணம் கட்டிக்கிட்டார்ங்குறத காரணமாக் காட்டி உங்க அரசியல் செல்வாக்க வச்சி ஏதாவது சித்து வேலைகள் பண்ணி மாடசாமிக்கு பி.ஆர்.ஸ்டேட்டஸ் வாங்கிக் குடுத்துருங்கப்பா...” என்றாள் கலைச்செல்வி ஒரு செல்லச் சிணுங்களுடன்.
                       ”அது அவ்வளவு சுலபமில்லம்மா...” என்றார் அவர். கலைச்செல்வியோ “அதெல்லாம் முடியாதுப்பா. நீங்க என்னவாச்சும் பண்ணிக்குங்க. ஆனா எப்படியாச்சும் எனக்கு இவரக் கல்யாணம் கட்டி வைங்க. இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன்ப்பா....” என்றாள் பிடிவாதமாக. மாடசாமிக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
                       ”அவசரப்படாத கலை. விசாரிக்கிறேன். இன்னும் ஒரு பத்து நாள் அவகாசம் குடு. என்ன பண்ணலாமின்னு பார்க்குறேன்...” என்றார். ஆனால் மாடசாமியின் கெட்ட நேரம், நாலைந்து நாட்களிலேயே மேப்படியான்களிடம் மாட்டிக் கொண்டானே!
                       போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது அவனின் சூப்பர் மார்க்கெட் சகாக்கள் சிலர் அவனைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் லியோஸிங்கும் வந்திருந்தான். ”மேப்படியான்களிடம் நீயே மாட்டி விட்டுட்டு இப்போது எதற்கு வந்திருக்கிறாய்?” என்று அவனுடன் சண்டைக்குப் போனான் மாடசாமி.
                       அவனோ சத்தியமாக  தான் காட்டிக் கொடுக்கவில்லை என்று சாதித்தான். அவன் கண்களில் பொய்யில்லை. நிஜமான கலக்கம் தெரிந்தது. அப்படியென்றால் தன்னை யார் தான் காட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று மாடசாமிக்குக் குழப்பமாக இருந்தது.   
                        நீதிமன்றத்தில் அவனுக்கு ஆறாயிரம் வெள்ளி அபராதம் விதித்தார்கள். அதைக் கட்டிவிட்டு அவனுடைய செலவில் அவன் இந்தியாவிற்குத் திரும்பிப் போய் விட வேண்டும் என்றும் இனிமேல் அவன் மலேசியாவிற்குள் நுழையக் கூடாது என்று நிரந்தரத் தடையும் விதித்தார்கள். அபராதத் தொகையை கட்ட முடியாத பட்சத்தில் மூன்று வருஷங்களை அவன் ஜெயிலில் கழிக்க வேண்டும்.
                        சூப்பர் மார்க்கெட் முதலாளியும் அவனுடன் வேலை பார்த்த அவனுடைய சகாக்களும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு தண்டத் தொகையைக் கட்டினார்கள். அவன் திரும்பிப் போவதற்கான விமான டிக்கெட்டிற்கு அவனிடமே போதுமான பணம் இருந்தது.
                        மாடசாமி இந்தியாவிற்குத் திரும்பிப் போக இருந்த தினத்தில் அவனை ஏர்போட்டிற்கு வந்து சந்தித்தாள் கலைச்செல்வி. ”கவலைப்படாத செல்வி. இப்போதைக்கு இந்தியாவுக்குப் போயிட்டு கொஞ்ச நாள்ல கள்ளத் தோணி பிடிச்சாவது மலேசியாவுக்குத் திரும்பி வந்து உன்னைக் கல்யாணம் கட்டிக்கிறேன்.....” என்றான் திரைப்பட ஹீரோவின் வீராவேசத்தோடு.
                        ”முட்டாள்த் தனமா அப்படி எதுவும் செய்து தொலைக்காத. அப்புறம் நீ உயிரோடவே ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. நீ போதைப் பொருள் வச்சிருந்தது மாதிரி ஏதாவது பொய்க் கேஸப் போட்டு உன்னை தூக்கு மேடைக்கு அனுப்பிடுவாங்க....” என்றாள் கலைச்செல்வி.
                        ”என்மேல யாருக்கு அத்தணை வெறுப்பு?”
                        ”இப்ப உன்னை மேப்படியான்கள்கிட்ட மாட்டி விட்டது யார்ன்னு நெனைக்குற?” என்றாள்.  “தெரியலையே....” என்றான் மாடசாமி.
                        “எங்க அப்பா தான்....” என்றாள் அழுது கொண்டே.
                        மாடசாமி அதிர்ந்து ”உளராத. அவர் ஏன் என்னைக் காட்டிக் கொடுக்கனும்...” என்றான்.
                        “நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதுக்காக.....” என்றாள்.
                        மாடசாமிக்கு எதுவும் புரியவில்லை. அவளே விளக்கமாகச் சொன்னாள்.
                        ”இந்தியர்கள் தான் திரைகடலோடி திரவியம் தேட வந்தாலும் சாதியையும் சாமியையும் சுமந்துக்கிட்டுத் தான வர்றீங்க.... அன்னைக்கு உன்னோட பூர்வீகம் அதுஇதுன்னு சுத்தி வளைச்சுப் பேசினாரே அது எதுக்குன்னு நெனைக்குற? உன்னோட சாதி என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்குத் தான். நேரிடையா விசாரிச்சா அவரப் பத்தாம்பசலி, பிற்போக்கானவர்ன்னு நாம நினைச்சிடுவோம்ல....
                        எப்படியோ உன் சாதி என்னன்னு தெரிஞ்சுக்கிட்டார். அப்புறம் எப்படி என்னை உனக்குக் கட்டிக் கொடுக்க அவரோட மேல் சாதி கௌரவம் இடம் குடுக்கும்? முதல்ல வேற மாதிரிப் பேசி வெட்டி விடப் பார்த்தார்.....!     ஆனா நானோ பொம்மை கேட்டு அடம் பிடிக்கிற குழந்தை மாதிரி பிடிவாதமா உன்னைத் தான் கட்டிக்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னேன்.
                        அதான் உன்னைக் கழட்டி விடுறதுக்காக போலீஸ்ல காட்டிக் கொடுத்துட்டார்....” என்று கண்ணீருடன் சொல்லி விடை பெற்றுப் போன கலைச்செல்வியைப் பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மாடசாமி.

Ø  முற்றும்


(தினமணியும் – நெய்வேலி புத்தக்க கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. தினமணிக்கதிர் 24.07.2016 இதழில் பிரசுரிக்கப் பட்டது)

2 comments:

  1. கல்கி போட்டியிலும் மதிப்பீடுகள் சிறுகதைக்கு இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்.

    ReplyDelete