Wednesday, January 6, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்காக....

பொங்கலோ பொங்கல்.....

உறை மட்டும் வந்தது வாழ்த்துச் சொல்லி...
உள்ளீடுகள் ஒழுகிப் போயிருக்கலாம்;
திருடும் போயிருக்கலாம்....!

சந்தோஷங்களைத் தொலைத்த
சலனமே இல்லாது
கடந்து போகிறது பொங்கலின் கூடு....!

முட்கம்பிச் சிறைகளுக்குப் பின்னால்
மூன்று லட்சம் தமிழர்கள்!
உறைந்த விழிகள்
உதிர்க்கும் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறது பொங்கல்!

*** *** ***
நெற்றி முத்துக்கள்
முற்றி விளையும் நெல்மணிகள்!
காலடி விரல்கள் கிளைக்கும்
கரும்பின் வேர்களாய்....
பச்சையும் மஞ்சளும் பயிராகும்
நெஞ்சின் பாத்திகளில்.....

மரபணு மாற்றப்பட்ட
விதைகளின் திணிப்பில்
பறிபோகும் பாரம்பரியங்கள்!

விஷத்தை அள்ளி அள்ளி
விழுங்கச் சொல்லும் அவலம்;
சுவடுகள் கருகும் சூரிய மேய்ச்சலில்.....
நாக்குகள் பொசுங்கும்
தாம்பூலத் தரிப்புகளில்...!

லாட ஆணிகளை உதிர்த்து
நடக்கும் காளைகளின்
கால்களெங்கும் கொப்புளங்கள்!

நெல்லும் கரும்பும் விளைத்தும்
பதருக்குள் அரிசி பொறுக்கி
புலம்பல் நுரைத்துப் பீறிட
’பொங்கலோ பொங்கல்...!’

*** *** ***
பால்யநாட்களின் பொங்கல் தினத்தில்
தூங்கும் போது எழுப்பி – அம்மா
பாயில் போட்டுப் போன
தோசையின் இளஞ்சூடு
இன்னும் இருக்கிறது நெஞ்சில்....


அதிகாலைக் குளிரின் நடுக்கத்தை
அனுபவித்தபடி
சோளத் தட்டையின்
நுனி மடக்கி காரோட்டி
காடுகளுக்குப் போய் காப்புகள் கட்டி....

வீதியெங்கும் அலைந்து
வீடுகளின் கோலங்களை அளந்து
சாணி உருண்டையில் சொருகிய
பூசணிப் பூக்களாய் மலர்ந்து....

கூட்டாளிகளோடு
பலகாரங்களைப் பகிர்ந்து
புதுச் சட்டைகளைப் பற்றிப் பேசி
அக்காக்களின் மடிகளில்
அமர்ந்தபடி கதைகள் கேட்டு...

பொங்கல்பானையில் பூத்த நுரைக்கு
குலவையிடத் தெரியாமல் கூச்சலிட்டு
பூஜை முடியும் வரை
பொறுக்க முடியாமல் பொருமி
விரயமாகும் தேங்காய்த் தண்ணீருக்காய் வருந்தி..

மாடுகளைக் குளிப்பாட்டும் சாக்கில்
ஒரே நாளில் நிறையத் தடவைகள்
குளிர்ந்த நீரில் குதியாலம் போட்டு
கொம்பு வர்ணங்களில்
கட்சி கட்டி சண்டையிட்டு....

பொங்கலும் கரும்பும்
மாடுகளுக்குக் கொடுத்து – அவை
ஆசை ஆசையாய் உண்பதை ரசித்து....
இன்னும் இன்னுமென
ஏராளமாய் நினைவுகள்....!

எப்போது வருமென்று ஏங்கி
வந்து போனதும்
அதற்குள் முடிந்து போனதே
என்று வருந்தி
அடுத்த பொங்கலுக்காய்
ஆவலோடு எதிர் பார்ப்பதெல்லாம்
சிறுவயதிற்கே உரிய
சீதனங்கள் போலும்....!

No comments:

Post a Comment