Thursday, November 5, 2009

கவிதை: பறக்கும் கம்பளம்

சிறுவயதில் பள்ளிக்குப் போக - நான்
அடம் பிடிக்கும் போதெல்லாம்
அம்மா சொல்வாள் அடிக்கடி
"ஒழுங்காய் பள்ளிக்குப் போய்
நல்லபடியாய் படித்து முடித்தால்
உனக்கு நான்
பறக்கும் கம்பளம் ஒன்று வாங்கி
பரிசளிக்கிறேன் ... " என்று.

ஆச்சரியத்தில் கண்கள் விரிய
ஆகட்டுமென்று ஓடியிருக்கிறேன்
ஆகாயம் பார்த்தபடி பள்ளிக்கு;
கதைகளில் கேட்டதுண்டு
சினிமாக்களில் பார்த்ததுண்டு - ஆயினும்
பார்த்ததில்லை நிஜத்தில்
பறக்கும் கம்பளத்தை.........

ஏறி உட்கார்ந்ததும் விர்ரென்று
மனதில் நினைக்கும் இடத்திற்கு
பறந்து போய் இறக்கி விடுமாம்;
எத்தனை சந்தோஷம் அது!
நினைக்கும் போதே பறக்கிற உணர்வில்
நெஞ்செல்லாம் இனித்திருக்கும் அப்போது!

கனவுகளில் மிதந்தபடி
காத்திருந்தேன் பறக்கும் கம்பளம்
கைவசமாகும் நாளுக்காக.
அப்புறம் தான் புரிந்தது.......
அறிவு வளர விவரம் புரிய
அம்மா சொன்னது பொய்யென்று !

அவள் சொன்ன அனேகம் பொய்களில்
இதுவும் ஒன்றென்று விட்டுவிட முடியாமல்
திணறித் திரிந்தேன் சில நாட்களுக்கு;
ஏன் இப்படி ஏமாற்றினாள்?

எல்லாப் பெற்றோர்களும்
சைக்கிளோ உடைகளோ
தின்பண்டங்களோ - அல்லது
சாத்தியமான வேறொன்றோ
வாங்கித் தருவதாய்ச் சொல்லித்தான்
படிக்க வைப்பார்கள் பிள்ளைகளை;
இவள் மட்டும் ஏன்
இல்லாத ஒன்றிற்கு ஆசை காட்டினாள்?

யோசித்தபோது புரிந்தது;
சைக்கிளோ வேறெதுவோ
வாங்கித்தர வசதியில்லை அவளுக்கு
இல்லாத ஒன்றை இரையாய்ப் பிடித்து
இழுத்து வந்திருக்கிறாள் இவ்வளவு தூரம்
பாவம் அம்மா என்று
பரிதாப பட்டேன் அவளுக்காக........

அவளிடமே இது பற்றி
ஒரு முறை கேட்டபோது
"வாக்குத் தந்தபடி எப்போதோ
வாங்கித் தந்து விட்டேன்
பறக்கும் கம்பளத்தை உனக்கு;
எதுவென்று புரியவில்லையா?
காலம் உணர்த்தும் மகனே
காத்திரு அதுவரை" என்று
நழுவிப்போனாள் சிரித்தபடி......

அப்போதும் புரியவில்லை;
அறிவு கொஞ்சம் கம்மி தானெனக்கு.
ஒவ்வொரு நாடாய்ப் பறந்து
உலகம் சுற்றும் போது
உண்மை புரிந்த தெனக்கு; அவள்
பரிசளித்த பறக்கும் கம்பளம்
பத்திரமாய் இருக்கிறது என்னிடம்
கல்வி என்னும் பேறுருவில்....

ஆசை ஆசையாய் அம்மா
பரிசளித்த பறக்கும் கம்பளத்தில்
ஒரே ஒருமுறை கூட அவளை
உட்கார்த்தி அழகு பார்க்கும்
பாக்கியந்தான் இல்லாமலானது - எனது
வாழ்வின் இன்னொரு அவலம்!

(குறிப்பு: இந்தக் கவிதை அன்புடன் இணையதளம் 2007ல் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது)

No comments:

Post a Comment