Tuesday, November 10, 2009

குறுங்கவிதைகள் - 1

கடவுள் இல்லை என்று
எத்தனை தீவிரமாய் நம்பினாலும்
நெருக்கடிகள் நேரும் போதெல்லாம்
அலைபாயும் மனம் சரணடையும்
ஆண்டவனிடமே.....!
*****
நெரிசல் மிகுந்ததாயிற்று வாழ்க்கை
நெருக்கித் தள்ளுகிறார்கள்
எல்லோரும் என்னை;
நானும் மற்றவர்களை.....!
******
யாவரும்
கடந்து போகிறார்கள் புள்ளினங்களை;
பதற வைக்கும் அவசரங்களோடும்
பறத்தலின் பரவசங்களோடும்;
உயிர்களின் பசி உணர்ந்த
சிலர் மட்டுமே
வீசிப் போகிறார்கள்
கைப்பிடியளவு தானியங்களையும்.....!
*****
விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான்; ஆயினும்
எத்தனை சந்தோஷமாய்
அலைந்து பறக்கும் ஆவலுடன்
புற்றிலிருந்து புறப்படுகின்றன
மழை ஈசல்கள் -
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி.....!
*****
விட்டில் பூச்சிகளுக்கு
விஷமாகும் வெளிச்சம்
உவமையாகும்
ஒளிமயமான வாழ்வுக்கும்....!
*****
உலகம் சுருங்குகிறது கிராமமாக.....
விரிந்து கொண்டிருக்கின்றன
மனிதர்களுக்குள்ளான இடைவெளிகள்!
*****
காலம் கடந்து கொண்டிருக்கிறது - நமது
கர்வங்களை நகைத்தபடி
தத்துவங்களைத் தகர்த்தபடி.....!
*****
அங்கீகாரங்களுக்கு அலைகிற
அவலம் தொடர்கிறது
ஆயுள் முழுதும்.....!
*****
கவனம்; மிகக் கவனம்
கையாளுங்கள் கண்ணாடி மாதிரி
கொஞ்சம் பிசகினாலும் நொறுங்கி விடும்
மனித மனங்கள்.....!
*****
வருஷந் தவறாமல் வாங்கிக் குவித்தும்
அனுப்ப யாருமில்லாததால்
என்னிடமே தேங்கிப் போயின
காதல் வாழ்த்து அட்டைகள்!
*****
ஒருவருடனும்
ஒத்துப்போக முடிவதில்லை;
ஒதுங்கி வாழ முயன்றாலோ
கொல்கிறது தனிமை!
*****

No comments:

Post a Comment